ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா செய்ய திட்டமிட்டிருக்கும், செய்து கொண்டிருக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது ஹீராகுட் அணை வெள்ளப் பாதிப்பு குறித்ததாகும். தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் ஹிராகுட் அணைக்கு ஏராளமான நீர் வந்தது. இதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் ஹிராகுட் அணை.
இதனால் ஒடிசாவின் மகாநதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் நிலவுகிறது. மேலும் ஒடிசாவில் கட்டாக், பூரி உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 8 லட்சம் கனஅடி என்பது மிகப் பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அணையின் 25 மதகுகளும் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மகாநதி ஆற்றின் வெள்ள பெருக்கு ஏற்படும் வாய்ப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு ஒடிஸா அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் 8 முதல் 8.5 லட்சம் கனஅடி நீர் நாளை முண்டாலியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கவனத்துக்கு....
ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா செய்ய திட்டமிட்டிருக்கும், செய்து கொண்டிருக்கும் பயணிகள் கவனத்துக்காக இந்த எச்சரிக்கை. நீங்கள் சுற்றுலா செய்ய திட்டமிட்டிருந்தால், வெள்ள பாதிப்பை உணர்ந்து அந்த திட்டத்தை கைவிடுங்கள். முடிந்தவரை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இல்லாமல், சற்று மேடான பகுதிகளுக்கு செல்வது சிறந்தது.
ஹீராகுட் அணை பற்றிய சில தகவல்கள்
ஹீராகுட் அணை பற்றிய சில முக்கியமான தகவல்களை இங்கு காண்போம். சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய மாபெரும் சுற்றுலாத் தலமாக ஹிராகுட் அணை உள்ளது. மாபெரும் மகாநதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள இந்த அணை காணத்தகுந்த இடமாகும். சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவிலேயே உள்ள இந்த இடத்திற்கு ஒரே நாளில் சுற்றுலா சென்று வந்து விட முடியும்.
1957-ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட இந்த அணை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அணைக்கட்டுகளிலேயே மிகவும் நீளமானதாகும். 26 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு முடிவற்ற இடமாகவே காட்சியளிக்கிறது. இந்த அணை கட்டப்பட்ட போது உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி, சோர்வடைந்த கண்களை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் வல்லமை கொண்ட இடமாகும்.
கண்காணிப்பு கோபுரங்கள், காந்தி மினார் மற்றும் நேரு மினார் ஆகியவை ஏரியின் இரு புறங்களிலும் உள்ள நிலப்பகுதிகளின் சுற்று வட்டக் காட்சிகளை காண உதவும் இடங்ககாளகும். விவசாயப் பண்ணைகள், கால்நடைகள் மற்றும் மீனாவர்கள் ஆகியோர் இந்த பகுதியின் அமைதியை நிலைநாட்டுபவர்களாக உள்ளனர். நீர்த்தேக்கம் முழுமையாக நிறைந்திருக்கும் மழைக்காலத்தில் இந்த அணைக்கட்டிற்கு வருவது நல்லது என்றாலும், வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.