வாழ்க்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து உலக அளவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள் இடம் பிடித்திருந்தன. இந்த பட்டியலில் கூடிய விரைவில் கோயம்புத்தூர் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான முழு வேலையும் கோயம்புத்தூர் ஈடுபட்டு வருகிறது!
2 ஆவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள நம் தமிழ்நாடு அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. இது இந்தியாவில் மிகவும் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் அதன் நகரங்கள் உயர் வாழ்க்கைத் தரம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுக்காக அறியப்படுகின்றன. இந்திய அளவில் பணக்கார மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாடு நன்கு வளர்ந்த மாவட்டங்களைக் கொண்டுள்ளது என்பது தான்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் சென்னைக்கு அடுத்தப்படியாக இந்தியாவின் மிக வளர்ந்த மாவட்டமாக உள்ளது. தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரம் அதன் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. நகரத்தில் ஜவுளி, பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்பட பல பெரிய தொழில்களுக்கும் மையமாக உள்ளது.
உலகத் தரத்தில் போக்குவரத்து வசதி
கோயம்புத்தூரை வளர்ப்பதில் தி.மு.க ஆட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. கோவை சாலை பாதுகாப்புப் பணிகளுக்காக மட்டுமே 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய எலிவேஷன் ஃப்ளை ஓவர் ஒன்று அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 10 கிமீட்டர் வரை தரையைத் தொடாமல் வாகனங்கள் இதன்மூலம் நெரிசல் இன்றி செல்ல முடியும்.
அனைவர்க்கும் வேலைவாய்பு
கோயம்புத்தூரில் இ பைக் உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, ஏரோ ஸ்பேஸ் என இந்தியாவுக்கே சவால் தரக்கூடிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இயந்திர உதிரப் பாகங்கள் தயாரிப்புக்கு மட்டுமல்ல; மோட்டார் பம்பு தயாரிப்புகளில் இந்திய அளவில் மையமாக இருக்கிறது. இந்த மோட்டார் பம்பு இண்டர்ஸ்ட்ரி என்பது கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செக்டாராக உள்ளது. இதனால் இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிச்சய வேலைவாய்ப்பு என்பது உறுதியாகிறது.

அதிகரிக்கும் தனிநபர் வருமானம்
இங்குள்ள நிறுவனங்களில் ஏறக்குறைய 95% குறுந்தொழில் சார்ந்தவைதான். இவற்றைத் தாண்டி, வெட்கிரைண்டர் உற்பத்தி, கம்பிரஷர் உற்பத்தி, இப்போது சிறப்பாக வளந்து வரும் துறையான ஆட்டோ உதிரிப்பாகங்கள் உற்பத்தி, ஏரோஸ்பேஸ், டிஃபன்ஸ்காம்போனெண்ட் எனப் பலதுறைகள் சார்ந்த கலவை தொழிற்சாலைகளின் தாயகமாகக் கோவை வளர்ந்துவருகிறது. அதே போல மும்பைக்கு அடுத்தப்படியாக இப்போது கோயம்புத்தூரில் ஜுவல்லரி செக்டாரும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்துறை வளர்வது போல மக்களின் வருமானமும் நாளடைவில் அதிகரிக்கும்.
2050 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பிரச்சினை இருக்காது
2050 ஆம் ஆண்டு வரை இனி கோவை மக்களுக்குக் குடிநீர் பிரச்சினை என்பதே இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 620 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட பில்லூர் 3ஆம் கட்ட குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. கோவையின் மக்கள் தொகை 2050 களில் 32 லட்சம் அளவுக்கு உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மக்கள் தொகைக்குத் தேவையான குடிநீர் வளத்தை நாம் பெருக்கவேண்டும், அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் பில்லூர் 3 ஆம் குடிநீர் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் ஒரு தொலைநோக்கு பார்வையைக் கொண்ட திட்டம். 2050ல் கூட நமக்குக் குடிநீர் பிரச்சினையை வரவிடாமல் இத்திட்டம் தடுக்கும்.
கல்வி, சுகாதாரம்
கல்வி என்று பேசும் போது தமிழகத்தின் உயர்தர பள்ளிகளும், கல்லூரிகளும் கோயம்புத்தூரில் இருப்பதால் இங்கு படிக்கும் மாணவர்கள் சிறந்த கல்வியை பெறுகிறார்கள் என்று தான் கூற வேண்டும். அனைத்து வகையான ஆர்ட்ஸ், என்ஜினியரிங், MBA கல்லூரிகள் கோவையில் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கோவைக்கு வந்து கல்வி பயில்கின்றனர். மற்ற மாவட்டங்களை விட கோவை நகரம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுகிறது.
இப்படி எல்லா துறைகளிலும் சிறந்த விளங்கி கொண்டிருக்கும் கோவை சென்னைக்கு அடுத்தப்படியாக அந்த லிஸ்டில் இடம் பிடிக்க தகுதியானது என்று தான் சொல்ல வேண்டும்!



Click it and Unblock the Notifications





