Search
  • Follow NativePlanet
Share
» »இகத்புரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இகத்புரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இகத்புரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சஹயாத்ரி மலைத்தொடரின் மடிப்புகளில் சௌகரியமாக அமர்ந்திருக்கும் புராதன மலை நகரம் இந்த இகத்புரி ஆகும். நாசிக் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மஹாராஷ்டிராவின் முக்கியமான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இகத்புரியில் தவறவிடக் கூடாத அம்சங்கள்

இகத்புரி இங்குள்ள புராதனமான தொன்மையான ஆலயங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. கண்டதேவி கோயில் இங்குள்ள அதிமுக்கியமான கோயில் ஆகும்.

மலைகளுக்கெல்லாம் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கண்டதேவி கோயிலில் இருந்து பார்த்தால் அழகிய சமவெளிகளின் பிரமிக்க வைக்கும் காட்சி நம் கண் முன் விரிகிறது. அருகிலுள்ள சஹயாத்ரி மலைத்தொடரில் காணப்படும் பல சிகரங்களின் அழகையும் தரிசிக்க முடிகிறது. மேலும் இங்குள்ள விபாசனா ஆன்மீக மையம் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது. தியானம் பற்றிய ஒரு சிறப்பு வகுப்பு மற்றும் பயிற்சியை இங்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த மையம் வழங்குகிறது. வரலாறு மற்றும் கட்டிடக்கலை போன்றவற்றில் உங்களுக்கு ஆர்வமிருப்பின் இங்குள்ள திரிங்கல்வாடி கோட்டை நீங்கள் கட்டாயம் பார்த்து மகிழ வேண்டிய வரலாற்று சின்னமாகும்.

கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் காணப்படும் இந்த கோட்டையிலிருந்து கீழே உள்ள இகத்புரி நகரத்தை நன்றாக பார்க்க முடிவதோடு சஹயாத்ரி மலைகளின் அழகும் நம் கண் முன்னே படக்காட்சி போன்று விரிகிறது. இந்த கோட்டையின் அருகில் உள்ள ஹனுமான் கோயிலும் பயணிகள் பார்த்து வழிபட வேண்டிய ஆன்மிக அம்சமாகும். சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை மற்றும் அது தொடர்பான அரும்பொருட்களை கொண்டிருக்கும் வாலவல்கர் மியூசியம் இகத்புரியில் பயணிகள் காணவேண்டிய மற்றுமொரு முக்கிய இடமாகும். இகத்புரிக்கு வருகை தரும் பயணிகள் இங்கு சுவைக்கு பெயர் பெற்ற வடா பாவ் உணவு வகையை ருசி பார்ப்பதும் அவசியம்.

இகத்புரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Jsdevgan

இயற்கையின் அதிகபட்ச அழகு

மிரட்ட வைக்கும் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலத்துக்கு இயற்கையாகவே ஒரு அற்புதமான புவி அமைப்பு வாய்க்கப்பட்டுள்ளது. வழியும் அருவிகள் மற்றும் பசுமை அடர்ந்த காடுகள் என்று எங்கு திரும்பினாலும் நம் கண்களுக்கு திகட்ட வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் ததும்புகிறது இந்த பிரதேசத்தில். நகரமயமாக்கல் இன்னமும் ஆக்கிரமிக்கத் துவங்காத காரணத்தால் இகத்புரி தன் மயக்கும் புராதன அழகை இழக்காமல் பயணிகளை வசீகரிக்கின்றது. பெருநகரங்களின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையின் சுவடுகளை கழுவக்கூடிய சக்தி கொண்டது இதன் அழகு. இது அடிக்கடி இங்கு வருகை தரும் பயணிகள் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மையாகும்.

திரிங்கால்வாடி கோட்டைக்கு அருகே உள்ள திரிங்கால்வாடி ஏரியானது குடும்பத்துடன் ஒரு மாலை நேரத்தை கழிப்பதற்கேற்ற அருமையான இடமாக உள்ளது. மேலும் இயற்கை உபாசகர்கள் இங்கு காணப்படும் காட்டுத்தாவரங்கள் மற்றும் பல்வகை பறவைகள் மீது தங்கள் மனதை பறிகொடுக்கின்றனர். சாகச விரும்பிகளுக்கும் மலை ஏற்றத்தை விரும்புபவர்களுக்கும் ஏற்ற மலையேற்றப்பாதைகளும் இங்கு அதிகம் காணப்படுகின்றன. பாட்ஸா ஆற்றுப்பள்ளத்தாக்கு எனும் மற்றொரு இடம் குறிப்பிடத்தக்கது. இங்கு ஏகாந்தமான சூழலில் பார்த்து ரசிப்பதற்கேற்ற இயற்கை காட்சிகள் உள்ளன. இது தவிர மும்பை மாநகருக்கு நீரை வழங்கும் வைதர்ணா அணை எனும் இடமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். கேமல் பள்ளத்தாக்கு எனும் இடத்தில் பரிசல் சவாரி மற்றும் ஆற்றுப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. சாகச அபாயங்கள் ஏதுமற்ற பொதுவான பொழுது போக்குகளை விரும்பும் பயணிகளுக்கு நடைப்பாதை பயணம் மற்றும் வெவ்வேறு இயற்கை எழில் அம்சங்களை ரசிக்கும் ரசனையான அனுபவங்களும் சாகச விரும்பிகளுக்கு மலை ஏற்றம், பரிசல் சவாரி போன்ற துணிகர அனுபவங்களும் இகத்புரியில் காத்திருக்கின்றன.

இகத்புரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Raikwar.pravin

சில கூடுதல் தகவல்கள்

இகத்புரியின் சீதோஷ்ணநிலை வருடம் முழுவதுமே இனிமையானதாகவும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. குறுகிய காலமே நீடிக்கும் கோடைக்காலம் உஷ்ணம் நிறைந்ததாகவும் பொசுக்கும் வெயிலுடனும் காணப்படுகிறது. எனவே கோடைக்காலத்தில் இகத்புரிக்கு பயணம் மேற்கொள்வது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. கோடையைத் தொடர்ந்து வருகை தரும் மழைக்காலம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்காலத்தில் பால் போன்ற வெண்மையுடன் அருவிகள் நிரம்பி வழிவதால் இகத்புரி பிரதேசமே ஒரு பசுமைச்சொர்க்கம் போன்று மாறிவிடுகிறது. ஆகவே மழைக்காலத்தில் இகத்புரியை வலம் வருவதும் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதே சமயம் குளிர்காலத்தில் சூழல் நல்ல குளுமையுடன் விளங்குவதால் வெளிப்புற பொழுது போக்குகளான நடைப்பயணம், மலையேற்றம், சுற்றுப்புறக்காட்சிகள் போன்றவற்றுக்கு ஏற்றதாக இருக்கும். இகத்புரிக்கு விமானம் மூலம் செல்ல விரும்பினால் அருகிலுள்ள விமான நிலையமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் 119 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

மற்றொரு விமான நிலையமாக நாசிக் உள்நாட்டு விமான நிலையமும் அருகில் உள்ளது. இந்திய நகரங்களிலிருந்து விமானம் மூலம் வர விரும்பும் பயணிகளுக்கு இது ஏற்றதாக உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் சில வெளி மாநில நகரங்களிலிருந்து ரயில் சேவைகளும் உள்ளன. எனினும் உள்ளூர் சாதாரண ரயில்கள் கசாரா நிலையம் வரை மட்டுமே செல்கின்றன. அங்கிருந்து பஸ் மூலம் இந்த மலைப்பிரதேசத்தை அடையலாம். அல்லது துவக்கத்திலிருந்தே நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கலாம். சாலை மார்க்கமாக வர விரும்பினால் நீங்கள் அழகான மலைப்பிரதேசங்களை ரசித்தபடியே காரில் வரலாம். அல்லது உங்கள் நகரத்திலிருந்தே பேருந்து மூலமாக பிரயாணம் மேற்கொள்ளலாம். இந்த மலைப்பிரதேசங்களில் வாகனம் ஓட்டுவது மிகச்சிரமமான ஒன்று என்றாலும் பதிலுக்கு உங்களுக்கு பரிசாக மெய்மறக்க வைக்கும் இயற்கை எழில் தரிசனம் கிடைக்கிறது.

ஒரு சிறிய சிற்றுலாவாகவோ அல்லது ஒரு நீண்ட விடுமுறை சுற்றுலாவாகவோ நீங்கள் உங்கள் குடும்பம், குழந்தைகள் அல்லது துணையுடன் இங்கு வருகை தரலாம். நகரத்தின் சந்தடியிலிருந்து விலகி பரிசுத்தமான இயற்கையின் ஸ்பரிசத்தினை உணர்வதற்கான ஒரு அற்புத பயணமாக அது இருக்கும். இகத்புரி எனும் இந்த சிறிய மலைவாசஸ்தலம் உங்கள் உணர்வுகளுக்கு புத்துணர்ச்சியூட்டி இயற்கையின் மீது காதல் கொண்டவராக உங்களை மாற்றி அனுப்பக்கூடிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

More News

Read more about: maharastra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+