அகன்று விரிந்த இந்தியா உலகில் பல பேரை ஆச்சர்யப்படவைத்திருக்கிறது. வேறெந்த நாட்டையும்விட புதிரானது இந்தியா. எண்ணற்ற கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள், உணவுகள் கொண்ட நாடு எப்படி ஒன்றாக இருக்க முடிகிறது என்று பல வரலாற்று ஆய்வார்கள் குழம்பி போனார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பலர் வெளிப்படையாக இது ரொம்ப நாள் நீடிக்காது; சீக்கிரமே துண்டாகிவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் கூற்று பொய்க்கும்படியாக இந்தியா கில்லியாய் நிற்கிறது.

Photo Courtesy : Wikipedia
சாக்ஷி மாலிக் என்ற ஒரு பெண்ணின் வெண்கலம் பலரை ஒன்றிணைக்கிறது; சந்தோஷப்படவைக்கிறது. இதுதான் இந்தியா. இப்படிப்பட்ட இந்தியாவில் சில தனித்துவமான விஷயங்கள் இருக்கிறது அவை என்னென்ன ?

Photo Courtesy : Wikipedia
ஹிந்து, சமணம், புத்தம், சீக்கிய மதங்கள் இந்தியாவில் தோன்றியவை.
இந்தியா உலகிலேயே சீனாவிற்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இன்னும் 12 வருடத்தில் நாம் சீனாவை முந்திவிடுவோம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், 2028, இந்தியாதான் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக இருக்கப் போகிறது என்று பல நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
இந்தியா எண்ணற்ற மொழிகளுக்கு சொந்தமான தேசம். 2001 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 1365 மொழிகள் இருப்பதாக கூறப்படுகிறது; அதில், 22 முக்கிய மொழிகளும் அடங்கும். 29 மொழிகளை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பேசுகிறார்கள். 60 மொழிகளை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பேசுகின்றனர். கொடவா போன்ற சில மொழிகளுக்கு எழுத்துரு இல்லை ஆனால் பேச்சு வழக்கில் பயன்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இதைவிட பெருமை என்ன வேண்டும் ?
இத்தனை மொழிகள் இருப்பதால் இந்தியாவிற்கென்று தேசிய மொழி கிடையாது. ஆட்சி மொழியாக ஹிந்தியும், ஆங்கிலமும் இருக்கிறது.

Photo Courtesy : Wikipedia
உலகிலேயே ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக மக்கள் கூடும் நிகழ்வும் இந்தியாவில்தான் நடக்கிறது. 2013'இல் அலஹாபாத்தில் நடந்த கும்பமேளாவிற்கு 12 கோடி பேர் வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒரே நாளில் 3 கோடி பேர் வந்திருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய குடும்பத்தைக் கொண்ட நபர் இந்தியாவில்தான் வசிக்கிறார். மிசோராம் மாநிலத்தில், பாக்ட்வங் என்ற ஊரில் வசிக்கும் சியோனா சானாவிற்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக்குழந்தைகள். 100 அடுக்குகள் கொண்ட மிகப்பெரிய வீட்டில் அனைவரும் சந்தோஷமாக வசிக்கின்றனர். இவரது புகழ் பரவி உலகின் பல மூலைகளில் இருந்தும் பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி நிருபர்கள் வந்து பேட்டி, புகைப்படம் எடுத்துப் போகின்றனர்,
மராட்டிய மாநிலம், ஷனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீட்டிற்குமே கதவு கிடையாது. 2010 வரை எந்தவொரு திருட்டும் அங்கு நடந்ததில்லை. மீறி திருடுபவர்களை ஷனி தெய்வம் தண்டிப்பதாக ஐதீகம் இருக்கிறது. 2010, 2012'இல் சில களவு சம்பவங்கள் நடந்த பின்னரும் யார் வீட்டிலும் கதவுகள் மாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அமைதியான நாடு; எந்த நாடையும் இதுவரை கைப்பற்றியது இல்லை என்று ஒரு தவறான தகவல் இருக்கிறது. இது உண்மையில்லை. சோழர்கள் காலத்திலேயே மலேசியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா வரை சென்று போர் புரிந்து சில இடங்களை கைப்பற்றியும் இருக்கின்றனர்.

Photo Courtesy : Flickr
உலகின் அதிக மழை பெய்யும் பகுதி இந்தியாவில்தான் இருக்கிறது. மேகாலயா மாநிலத்தில் மாசின்ராம் என்ற ஊரில் வருடத்திற்கு தோராயமாக 11,872 மி,மீ மழை பெய்வதாக கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications



