சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற தமிழக யானைகள் பற்றிய குறும்படமான "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" (The elephant whisperers) உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆதரவற்று நிற்கும் இரண்டு யானை குட்டிகளை தத்தெடுக்கும் ஒரு குடும்பத்தைச் சுற்றியே ஆவணப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

கைவிடப்பட்ட இரண்டு யானைகளுக்கும் அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" சித்தரிக்கிறது. இந்த குறும்படம் எடுத்த இடம், பராமரிப்பாளர்கள், முக்கியமாக அதில் இடம் பெற்ற யானை குட்டிகளான ரகு மற்றும் அம்முகுட்டியை காண சுற்றுலாப் பயணிகள் முதுமலைக்கு படையெடுக்கின்றனர். இந்த குறும்படத்தை பார்த்த எவராலும் அதைக் கண்டு நெகிழாமல் இருக்க்க முடியாது. அதே போல அந்த யானைகளை பார்க்க வேண்டும் என்ற தோன்றுகிற எண்ணத்தையும் தடுக்க இயலாது!

ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்"
ஆஸ்கார் விருது பெற்ற இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் காட்டுநாயக்கன் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிய யானைகள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்களைப் பற்றியது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் ஏராளமான பார்வையாளர்களை கண்டு பரவசமடைந்தது. இந்த முகாம் ஒரு பிரபலமான ஈர்ப்பாகும், இங்கு பார்வையாளர்கள் உணவளிக்கவும், பழகவும், யானைகளின் நடத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முடியும்.

குனீத் மோங்காவிற்கு 2 ஆவது ஆஸ்கார்
'எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம், 'ஹவ் டூ யூ மெஷர் எ இயர்?', 'ஹால் அவுட்,', 'ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட்' மற்றும் 'தி மார்த்தா மிட்செல் எஃபெக்ட்' போன்ற சக பரிந்துரைக்கப்பட்டவர்களுடன் போட்டியிட்டது. பல பிரபல குறும்படங்களுடன் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி இருக்கிறது நம் 'எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' . இதை இயக்கிய குனீத் மோங்கா இந்தியாவிற்கு ஆஸ்கார் விருதைக் கொண்டு வருவது இது முதல் முறை அல்ல. 2019 இல், குனீத் மோங்காவின் 'பீரியட் - என்ட் ஆஃப் சென்டென்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்ககது.

ரகுவும் அம்முக்குட்டியும்
வால் வெட்டப்பட்டு, தாயை இழந்த நிலையில், மிகவும் கவலைக்கிடமான சூழலில் ரகு என்ற யானைக் குட்டி, வனத்துறையால் பழங்குடியின காட்டுநாயக்கன் தம்பதியினரான பெல்லி மற்றும் பொம்மனிடம் கொண்டு வந்த விடப்படுகிறது. யானைக் குட்டியான ரகு, அவர்களின் அன்பாலும் அரவணைப்பாலும் உயிர் பிழைத்து நன்றாக வளர்கிறது. அவர்களும் அதனை தங்கள் பிள்ளை போல் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார்கள். ரகுவிற்கு பிறகு அம்முகுட்டி என்ற ஐந்து மாத குட்டி இவர்களிடம் சேர்கிறது. இரண்டு பராமரிப்பாளர்களும் இரண்டு குட்டி யானைகளும் குடும்பம் போல இருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

யானைகளைக் காண ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
இந்த ஆவணப்படம் மிகவும் அறியப்பட்ட மற்றும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வந்ததால், இந்த வெற்றி இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியது. பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த யானை குட்டிகளையும் அந்த பராமரிப்பாளர்களையும் நேரில் காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆசியாவிலேயே மிக பழமையான யானைகள் முகாம்
ஊட்டியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று தெப்பக்காடு யானைகள் முகாம். மோயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை தேசிய பூங்காவில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 140 வருடங்களாக யானைகளை பராமரித்து வரும் இந்த முகாம், ஆசியாவிலேயே மிகப் பழமையான யானைகள் முகாமாகும். இது ஒரு கட்டுப்பாட்டு சூழலில் பூமியில் உள்ள மிகப்பெரிய நில விலங்குகளான யானைகளுடன் நல்ல நேரத்தை செலவிட சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறது.

யானைகளுடன் பழக ஏற்ற இடம்
தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வரும் எவரும் ஒரு வித மன நிறைவுடனும் சந்தோஷத்துடனும் வீடு திரும்புவது உறுதி. இங்கே நீங்கள் யானைகளை குளிக்க வைக்கலாம், அவற்றிற்கு உணவளிக்கலாம். சிறிய கட்டணத்தில் காலையிலும் மாலையிலும் யானை சவாரி செய்யலாம். நம் எல்லோருக்கும் பிடித்த விலங்கான யானையை மிக நெருக்கமாக பார்த்து ரசித்து விளையாட இங்கே நாம் தாராளமாக வரலாம்.

எப்போது செல்லலாம்
அனைத்து நாட்களிலும் காலை 8:30 முதல் 9:00 வரையும், பின்னர் மாலை 5:30 முதல் 6:00 வரையும் பார்வையாளர்களுக்காக முகாமின் கதவு திறக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட ஆய்வு நேரம் 1-2 மணிநேரம் ஆகும். தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட ஒரு நபருக்கு 25 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பலரையும் ஈர்க்கும் நம் மாநிலத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications




