பெரும்பாலான ஆறுகள், குளங்கள், ஏரிகள் கோடையில் வற்றி விடுகின்றன, நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து குறைந்து விடுகிறது. ஆனால் கோடைக்காலத்திலும் கூட சற்றும் வற்றாத நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. அதுதான் கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரையில் அமைந்துள்ள அங்குத்தி சுனை! ஆர்பரித்து கொட்டுங்கின்ற சிறு சிறு ஊற்றுகள், ஆழமற்ற நீச்சல் குளங்கள், இனிமையான வானிலை என இந்த இடமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. நீங்கள் பெங்களூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் இருந்தால் உங்களுக்கு அருகில் இருக்கும் இந்த இடத்திற்கு இப்போதே சென்று வாருங்கள்!

ஒரு நாள் பிக்னிக் செல்ல ஏற்ற இடம்
அங்குத்தி சுனை மிகவும் ஒரு அழகிய இடமாக குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்ல சரியான ஸ்பாட் ஆக இருக்கிறது. கிருஷ்ணகிரி பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்த இடமான இது திருப்பத்தூரிலிருந்து 26 கிமீ தூரத்திலும், ஊத்தங்கரையிலிருந்து 16 கிமீ தூரத்திலும், செங்கமிலிருந்து 30 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

நீர்வீழ்ச்சி, வழுக்குபாறை, பசுமை நிறைந்த ரம்மியமான இடம்
இங்கு இயற்கையாகவே பாறைகளுக்கு நடுவே ஊற்றெடுக்கும் சுனைகள் தான் ஹைலைட். அதை ஒட்டி பால் போல் பொங்கி வருகின்ற நீர்வீழ்ச்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. வழுக்கின்ற பாறையின் மீது அமர்ந்து வழுக்கிக்கொண்டே வந்து குளத்தில் விழுந்து குளிப்பது ஒரு அலாதி இன்பத்தை தருகிறது. முக்கியமாக இது ஜவ்வாது மலைகளுக்கு அடிவாரத்தில் அமைந்திருப்பதால் அரிய வகை பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். வெறுமனே இந்த இடத்தை சுற்றிப் பார்ப்பது கூட அவ்வளவு இனிமையாக இருக்கிறது.

பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்த இடம்
இங்கு 5 நிலைகளில் தண்ணீர் கொட்டுகிறது. அதோடு இங்கு பஞ்ச பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே ஐந்து நீர்வீழ்ச்சிக்கும் பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என பெயரிட்டு அழைக்கின்றனர். பீமன் அருவியில்தான் பீமன் முட்டி போட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது. புராண வரலாறு தெரிந்த சில பெரியவர்கள் குந்தி, மோர் கடைந்த இடமும் இந்த அருவியின் அருகேயே உள்ளது என்று கூறுகின்றனர். பாண்டவர்களின் பாதம், அருவியின் மேல் உள்ள பாறையில் உள்ளதாக ஆன்மீகவாதிகள் சிலர் கூறுகின்றனர்.
கோடையிலும் வற்றாத நீர்வீழ்ச்சி
பாண்டவர்கள் வாழ்ந்த எந்த இடமும் நீர் நிலைகளுடன் வளமாக இருப்பதாக சான்றோர்கள் கூறுவார்கள். அது போல தான் பனிரெண்டு வருடங்கள் வனவாசம் செய்த பாண்டவர்கள் இங்கேயும் சில காலம் வாழ்ந்து சென்றதால் தான் இந்த இடத்தின் நீர்வீழ்ச்சிகள் ஒரு நாளும் வற்றாமல் பொங்கி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குடும்பத்தினருடன் செல்ல பாதுகாப்பான இடம்
ஒரு நாள் பிக்னிக் போல தின்பண்டம், உணவு எல்லாம் எடுத்து வந்து குழந்தைகள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஆட்டம் போட்டு குளித்து விட்டு அழகாக டைம் ஸ்பென்ட் பண்ணலாம். அதோடு மட்டுமில்லாமல் இங்கே 1000 ஆண்டுகள் பழமையான ஒரு திரௌபதி அம்மன் கோவிலும் உள்ளது. அதையும் நீங்கள் பார்வையிடலாம், இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இங்கே வேண்டுவது அப்படியே நடக்கின்றது எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தப் பகுதி வருவதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது
நுழைவுக்கட்டணம்
இங்கே வரும் பார்வையாளர்களிடம் ரூ.30 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பைக் பார்க்கிங் ரூ.20 , கார் ரூ.50 மற்றும் வேன் பார்க்கிங் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நீங்கள், உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பைக்கில் இங்கு வந்தால் ரூ.150 போதுமே! மேலும் தமிழக வனத் துறையும் இந்த இடத்திற்கு ரூ.300 ஒரு நாள் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதில் ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆகியவை அடங்கும். அந்த பேக்கேஜைப் பெற https://www.forests.tn.gov.in/pages/view/anguthai-jonal-fals இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்.

பொதுமக்கள் எப்படி செல்வது
கிருஷ்ணகிரியில் இருந்து மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கிலோ மீட்டர் பயணித்தால் அங்குத்தி அருவியை அடையலாம். ஊத்தங்கரையில் இருந்து மாரம்பட்டி, கோவிந்தாபுரம், கெடகானூர் சென்று காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும். சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் முக்கியச் சாலையில் கோவிந்தாபுரம் பிரிவு ரோட்டில் இருந்தும் கெடகானூர் சென்று அங்குத்தி அருவியை அடையலாம்.



Click it and Unblock the Notifications





