ஹிப்ஹாப் ஆதி டீம்மோட நட்பே துணை படம் எங்க எடுத்தாங்கனு தெரியுமா? அட நம்ம காரைக்கால் பகுதியிலதானுங்க.. படம் முழுக்க பாண்டிச்சேரிலயேதான் எடுத்துருக்காங்க..சரி காரைக்கால்ல நாம என்னெல்லாம் தெரிஞ்சிக்கலாம்னு இந்த பதிவுல பாக்கலாம்.
பழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரிய முத்திரை, அழகிய கோவில்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை காரைக்காலை நோக்கி சுண்டியிழுக்கும் அம்சங்களாகும்.
எங்க இருக்கு தெரியுமா?
மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரியின் ஒரு பகுதியாக, சோழமண்டல கடற்கரையில் வங்காள விரிகுடாவின் மடியில் தவழும் முக்கியமான துறைமுக நகரம் காரைக்கால் நகரமாகும். இந்த துறைமுக நகரம் தலைநகரம் பாண்டிச்சேரியிலிருந்து 132 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்காக 300 கிமீ தொலைவிலும் மற்றும் திருச்சியிலிருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
எலுமிச்சை கலக்கப்பட்ட கால்வாய்
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் டெல்டா பகுதிகளில் இரண்டாமிடத்தை காரைக்கால் பெற்றுள்ளது. 'காரை' மற்றும் 'கால்' என்று பிரித்தெழுதப்படும் காரைக்கால் நகரத்தின் பெயருக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று 'எலுமிச்சை கலக்கப்பட்ட கால்வாய்' என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் அப்படியொரு கால்வாயை இந்த நகரத்தில் காண முடியவில்லை.
காரைக்காலை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
காரைக்கால் நகரம் அதன் கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்நகரத்திலிருக்கும் முக்கிய பார்வையிடங்களாக சனீஸ்வரர் கோவில், ஸ்ரீ கைலாசநாதர் கோவில், நவகிரக கோவில்கள் மற்றும் அம்மையார் கோவில் ஆகியவற்றை சொல்லலாம்.
கோவில்களை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்லாமல், ஹாயாக கடற்கரைக்கு செல்லவும், வங்காள விரிகுடாவின் கழிமுக நீர்ப்பகுதிகளில் படகுச் சவாரி செல்லவும் முடியும். மேலும் காரைக்காலில் உள்ள கீழ காசக்குடி மற்றும் மேல காசக்குடி ஆகிய கிராமங்கள் அவற்றின் வரலாற்று சான்றுகளுக்காக முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும்.
குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களான நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களும் காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள இடங்களாகும். வரலாறு மற்றும் பாரம்பரியம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காரைக்காலுக்கு வளமான வரலாறும், பாரம்பரியமும் உள்ளது.
பல்லவர்கள் ஆட்சி
எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்கள் ஆட்சி செய்ய தொடங்கியதிலிருந்து காரைக்காலின் வரலாறும் துவங்குகிறது. அதன்பிறகு, என்ன நடந்தது என்று தெளிவான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பின்னர், 18வது நூற்றாண்டில் தஞ்சை மன்னர்கள் இந்த பகுதியை ஆண்ட போது தான் காரைக்கால் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் துவங்கியது.
காரைக்கால் நகரத்திற்கு வருவது எப்படி?
காரைக்காலுக்கு மிக அருகிலிருக்கும் விமான நிலையம் சென்னை விமான நிலையமாகும். இங்கிருந்து சாலை வழியாக 7 முதல் 9 மணி நேரம் பயணம் செய்வதன் மூலம் காரைக்காலை அடைய முடியும். காரைக்கால் நகரத்திலேயே விமான தளம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இது 2014-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும். காரைக்காலுக்கு மிகவும் அருகிலிருக்கும் ரயில் நிலையமாக 10 கிமீ தொலைவில் உள்ள நாகூர் ரயில் நிலையம் அறியப்படுகிறது. தனியார் பேருந்துகள் பல பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை செவ்வனே செய்தும் வருகின்றன.
காரைக்காலின் பருவநிலை
இந்தியாவின் தென்பகுதியிலுள்ள பிற கடற்கரை பகுதிகளை போலவே காரைக்காலும் அதிக வெப்பமான கோடைக்காலத்தைப் பெற்றிருக்கிறது. எனவே, காரைக்காலுக்கு சுற்றுப்பயணம் செய்ய சிறந்த மாதங்களாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலுள்ள மாதங்களை சொல்லலாம். இந்த மாதங்களில் காரைக்காலின் பருவநிலை புத்துணர்வூட்டுவதாகவும் மற்றும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கும். அழகு, அமைதி மற்றும் தனிமையை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலம் காரைக்கால் ஆகும்.
காரைக்காலின் மணல் கடற்கரை
தென் தமிழ் நாட்டில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக காரைக்காலின் மணல் கடற்கரை கருதப்படுகிறது. இன்னமும் சுரண்டப்படாமலிருக்கும் இந்த கடற்கரையில் தண்ணீரை விரும்புபவர்களுக்கேற்ற தனிமையும், அழகும் குடிகொண்டுள்ளது. இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையை அரசாழ்வார் ஆற்றையொட்டி 2 கிமீ நீளத்திற்கு அகலப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் எளிதில் இங்கு வந்து செல்ல முடிகிறது.
படகுச்சவாரி
வங்களா விரிகுடாவின் கழிமுக நதியான அரசாழ்வார் நதியின் புகழ் பெற்ற படகுச்சவாரிகளை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இங்கிருக்கும் படகு குழாமில் மிதி படகுகள், இயந்திர படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த கடற்கரையில் ஒரு சிறுவர் பூங்காவும், சில கடற்கரை உணவு விடுதிகளும் மற்றும் டென்னிஸ் மைதானமும் உள்ளன. இந்த கடற்கரையின் மிகச்சிறந்த காட்சியாக கருதப்படும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமான காட்சிகளை காண்பதற்கு சரியான நேரத்தில் செல்லுங்கள்.
காரைக்காலின் சுற்றுலாத் தளங்களைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு