வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்கலா நகரம் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். கர்கலா நகரத்தின் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும் போது, ஜைன மன்னர்களின் ஆட்சி காலமான 10-ஆம் நூற்றாண்டை பொற்காலம் என்றே சொல்லலாம். இந்தக் காலங்களில் தான் எண்ணற்ற ஜைன பசாதிகளும், கோயில்களும் ஜைன மன்னர்களால் கட்டப்பட்டது.
இந்தக் கோயில்களின் கட்டமைப்பு நேர்த்தியை ரசிப்பதற்காகவே இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். இதன் காரணமாகவே யுனெஸ்கோ அமைப்பு இதை உலக புராதான சின்னமாக அறிவித்துள்ளது. கர்கலாவின் குன்றுகளில் கம்பீரமாக நிற்கும் 42 அடி பாஹுபலி சிலை அந்நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதே போல் சிலையின் முன்பு காணப்படும் பிரம்மதேவா தூணும் மிகவும் விசேஷமானது.
அதுமட்டுமல்லாமல் கர்கலாவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜைன பசாதிகள் மொத்தம் 18 உள்ளன. மேலும், அனதஷயனா மற்றும் ஆதி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களோடு இதர பல தொன்மையான ஆலயங்களும் கர்கலாவில் இருக்கின்றன. அதோடு கர்கலா நகரம் அதன் பாரம்பரிய புலிவேஷ நடனம் மற்றும் எருமை பந்தயத்துக்காகவும் பிரபலம்.
கர்கலாவில் உள்ள பாஹுபலி சிலை 1432-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதை பாஹுபலியின் நினைவாக பாண்டிய மன்னன் வீரபாண்டிய பைரவன் என்பவன் கட்டினான். பாஹுபலியும் அவருடைய அண்ணன் பரதனும் ஆட்சிக்காக போர் செய்தனர் என்று புராணம் கூறுகிறது. இந்த போரில் பாஹுபலி வென்றாலும், போரின் கொடுமைகளை பார்த்து மனம் கசிந்து தன் அண்ணன் பரதனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு திகம்பர ஜைனத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார். பின்பு, பாஹுபலி தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக முக்தி அடையும் காலம் வரை நிர்வாணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
பாஹுபலி சிலை ஜைனர்களால் தியாகச் சின்னமாகவும், தன்னலமற்றதின் சின்னமாகவும் போற்றப்படுகிறது. கர்கலாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேகா விழாவுக்கு உலகம் முழுவதிமிருந்து ஜைனத் துறவிகளும், பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது பாஹுபலி சிலைக்கு நீராலும், பாலாலும் அபிஷேகம் செய்யப்படும்.