காஷ்மீர் என்றாலே வெள்ளை நிற பனி மூடிய மலைகளும், வெள்ளி போன்று மின்னுகின்ற நதிகளும், பூத்துக் குலுங்கும் மலர்களும் தான் நம் நினைவுக்கு வரும்! காஷ்மீர் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
ஏன் கிட்டத்தட்ட அனைத்து பயணிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு கனவு டெஸ்டினேஷன் ஆக காஷ்மீர் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். அதுவும் குளிர் காலத்தில் சொல்லவே வேண்டாம், அடர்ந்த பனிப் போர்வையின் கீழ் காஷ்மீர் அழகு நம் கண்ணை பறிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது அதில் ஒரு புது அம்சம் சேர்ந்து உள்ளது, வரலாற்றில் முதல் முறையாக காஷ்மீரின் அடர்ந்த பனிப்பொழிவு இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளது.

தடைசெய்யப்பட்டுள்ள சுற்றுலா
குளிர்காலத்தில் காஷ்மீரின் பல இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறைவதால், காஷ்மீர் ஒரு வெள்ளை சொர்க்கமாக மாறும். எனவே, குளிர்காலத்தில் காஷ்மீரை ஆராய்வது ஒரு பெரிய சாகசமாகவே பார்க்கப்படுகிறது.

மூடப்படும் அடர்ந்த பனிப்பொழிவு சுற்றுலாத் தலங்கள்
கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் போன்ற சில பிரபலமான சுற்றுலாத் தலங்கள் குறைந்த தெளிவுநிலை மற்றும் அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும். தற்போது, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பகுதியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், குளிர்கால மாதங்களில் இந்த மூன்று இடங்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திறக்கப்படும் சுற்றுலாத் தலங்கள்
70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் அந்த இடங்களில் சாகச விளையாட்டுகள் மற்றும் பிற செயல்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிமுகப்படுத்தப்படும் புதிய அம்சங்கள்
காஷ்மீரின் குல்மார்க்கில் பனிச்சறுக்கு பிரபலமான குளிர்கால நடவடிக்கையாகும். மேற்கூறப்பட்ட இடங்களில் சாகச விளையாட்டு நடவடிக்கைகளையும், ஸ்னோ போர்டிங்கையும் உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இப்போது, மற்ற இடங்களிலும் செயல்பாடு அறிமுகப்படுத்தப்படும். மேலும், பனி படர்ந்த இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்குவது குறித்து ஆணையம் ஆலோசித்து வருகிறது.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சுற்றுலா
இந்த முயற்சிகள் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்துறைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். காஷ்மீரின் பொருளாதாரம் பெரும்பாலும் அதன் சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ளது, மேலும் புதிய குளிர்கால சுற்றுலா விருப்பங்களை அறிமுகப்படுத்துவது காஷ்மீரின் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பனியால் மூடப்பட்டு இருக்கும் கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் பார்க்க விரும்புபவர்கள் இந்த குளிர் காலத்தில் உங்களது பயணத்தை திட்டமிடலாம்! நிச்சயம் இந்த ட்ரிப்பை உங்கள் வாழ்வில் நீங்கள் மறக்க மாட்டீர்கள், உங்கள் மனதில் நீங்கா இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!



Click it and Unblock the Notifications





