அமைதியான சிறு நகரமான கோலார் கர்நாடக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 3,969 கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இது கர்நாடகாவின் கிழக்கு வாசல் என்று அழைக்கப்படுகிறது. தற்சமயம் தங்கத்துக்கு இது பெயர் பெற்றிருந்தாலும் ஒருகாலத்தில் இந்த நகரத்திற்கென்று ஒரு பொற்கால வரலாறும் இருந்துள்ளது. வாருங்கள் இதன் வரலாறு பற்றியும், இங்குள்ள சுற்றுலா அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
கம்பீரமான வரலாறு
இன்றளவும் உள்ள கம்பீரமான கோயில்களும் கோட்டைகளும் அந்த வரலாறுக்கு சான்றாக விளங்குகின்றன. கோலார் பற்றிய புராணிகக் கதைகள் கோலார் பற்றி கூறப்படும் புராணிகக் கதைகளில் முக்கியமானது ஆதி காலத்து முனிவர் வால்மீகி வாழ்ந்த இடம் இது என்பதாகும்.
சீதை வாழ்ந்த இடம்
வனவாசத்தின்போது ராமபிரான் இங்கு விஜயம் செய்த தாகவும் பின்னர் சீதா தேவி ராமபிரானால் விலக்கி வைக்கப்பட்ட போது தன் இரு குழந்தைகளான லவா மற்றும் குசாவுடன் இங்கு வால்மீகியின் ஆசிரமத்தில் சீதாதேவி கழித்ததாகவும் நம்பப்படுகிறது. கோலாரின் மேற்குப்பகுதியில் பசுமையான மலைப்பகுதியில் வீர முனிவர் பரசுராம் வசித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பெயர்க்காரணம்
பதிவு செய்யப்பட்ட வரலாறு என்று பார்த்தால் கோலார் என்ற பெயரிலேயே அதன் வரலாறு பொதிந்துள்ளது. முற்காலத்தில் கோலாஹளபுரா- மூர்க்கமான நகரம் (கன்னட மொழியில்) என்ற பெயரில் இது அழைக்கப் பட்டுள்ளது. அது பின்னர் குவலலா, கோலலா என்றெல்லாம் திரிந்து கோலார் என்று மாறியுள்ளது.
உக்கிரமான போர்கள்
குளுமையான மலைகளைக்கொண்ட இந்த சிறிய நகரம் சோழ அரசர்களுக்கும் சாளுக்கிய வம்சத்தினருக்கும் இடையே நடந்த பல உக்கிரமான போர்களை கண்டுள்ளது. ஒரு மகோன்னதமான வரலாற்றின் மிச்ச சொச்சங்களை இன்னமும் இந்த நகரத்தில் பார்க்க முடிகிறது.
சுற்றுலா பயணம்
கோலாரம்மா மற்றும் சோமேஷ்வரர் கோயில்கள் இங்கு முக்கியமான பார்க்க வேண்டிய இடங்களாகும். சுற்றுலாப் பயணிகளுக்காக பாராசூட் பறப்பு மற்றும் பாறையேற்றம் போன்ற பொழுது போக்குகள் இங்கு உள்ளன.
கோலாரம்மா கோவில்
பார்வதியின் அவதாரமான கோலாரம்மாவுக்க்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் கோலார் பகுதியின் பிரதான யாத்ரீக அம்சமாகும். ஆங்கில எழுத்தான L வடிவத்தில் திராவிட சிற்பக்கலை வடிவத்தில் கோயில் விமானத்துடன் (கூரை) இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
சோழர்கள் கட்டிய பொக்கிஷம்
கோலாரம்மா கோவில் 1000 வருடங்களுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டுள்ளது. மைசூர் ஆண்ட மன்னர்கள் கோலரம்மா தெய்வத்தின் அனுக்கிரகத்தை பெறுவதற்கு இங்கு வந்து வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.கிரானைட் கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் சிற்பங்களும் அலங்கார வடிவமைப்புகளும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கிறது.
உள்ளுர் நம்பிக்கை
சேளம்மா என்று அழைக்கபடும் தேளுக்கான தெய்வமும் இந்த கோயிலில் அமைந்துள்ளது. உள்ளுர் நம்பிக்கைகளின் படி இந்த தேள் தெய்வத்தை வழிபட்டால் தேள் கடியிலிருந்து தப்பிக்கலாம் என்று ஐதீகம் உள்ளது. பக்தர்களின் காணிக்கைகளை பெறுவதற்காக இங்கு ஒரு உண்டியலும் உள்ளது. தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கத்தின் படி பக்தர்கள் இந்த கோயிலின் தரையில் உள்ள ஒரு பிரத்யேக குழியில் ஒரு நாணயத்தைப் போடுவது சம்பிரதாயமாக உள்ளது.