உலக பாரம்பரிய நடனங்களில் தனித்துவமான பாணியை கொண்ட குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக அறியப்படும் குச்சிப்புடி கிராமம், வங்களா விரிகுடா மற்றும் கிருஷ்ணா நதியின் அருகிலும், அரவணைப்பிலும் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
எங்குள்ளது தெரியுமா?
சீமாந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய கிராமம் குச்சிப்புடி நடனத்தின் தோற்றத்தால் அந்த நடன வடிவத்தின் பெயராலேயே குச்சிப்புடி என்று அழைகப்படுகிறது. குச்சிப்புடி கிராமம் ஹைதராபாத்திலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டணம் மற்றும் மொவ்வா மண்டலத்திலிருந்து முறையே 25.6, 6.4 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.
Jean-Pierre Dalbéra from Paris, France
அருகாமை சுற்றுலாத் தளங்கள்
குச்சிப்புடி கிராமத்தின் அருகில் விஜயவாடா, கொனசீமா, குண்டூர், அமராவதி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நகரங்களுக்கெல்லாம் சுற்றுலா வரும் பயணிகள் குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக திகழும் குச்சிப்புடி கிராமத்துக்கு தவறாமல் வந்து செல்கின்றனர். மேலும் குச்சிப்புடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் உண்டவல்லி குகைகள், ராஜீவ் காந்தி தேசிய பூங்கா, ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில், மொகல்ராஜ்புரம் குகைகள், கனக துர்கா கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
குண்டூர் நகரம்
சீமாந்திரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும் குண்டூர் நகரம் கொண்டவீடு கோட்டை, உண்டவல்லி குகைகள், அமராவதி, உப்பலபாடு தோட்டப்பூங்கா மற்றும் பிரகாசம் அணைக்கட்டு போன்ற சுற்றுலா அம்சங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. மற்ற எல்லா ஆந்திர நகரங்களையும் போன்றே கடுமையான கோடைக்காலத்தையும், மிதமான குளிர் நிலவும் குளிர்காலத்தையும் குண்டூர் நகரம் பெற்றுள்ளது.
மழைக்காலத்தில் மிதமானது முதல் கடுமையானது வரையான மழைப்பொழிவை இந்நகரம் பெறுகிறது. குண்டூர் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 250 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இருப்பினும் ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப்போக்குவரத்து மூலம் சுலபமாக இந்நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
குண்டூர் ரயில் நிலையம் நாட்டின் பல பகுதிகளை ரயில் சேவைகளால் இணைக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூர், மற்றும் சென்னை போன்ற நகரங்களை இணைக்கும் பல ரயில்கள் குண்டூர் ரயில் நிலையத்தில் வழியாக செல்கின்றன. மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களோடு நல்ல இணைப்புசேவைகளை இது பெற்றுள்ளது. ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குவதால் தென்னக ரயில்வே பல புதிய சேவைகளையும் குண்டூரிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலை மார்க்கமாக பயணிப்பதற்கு ஏற்றவாறு நன்கு பராமரிக்கப்பட்ட சாலை இணைப்புகளை இந்நகரம் பெற்றுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து குண்டூருக்கு அடிக்கடி பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. வால்வோ போன்ற அதிசொகுசு பேருந்து வசதிகளும் கிடைக்கின்றன. இவற்றின் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
கொண்டவீடு கோட்டை
குண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன.
கொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. 21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். இந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன.
கொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன. மலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.
en.wikipedia.org
விஜயவாடா
சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பல அம்சங்கள் விஜயவாடா நகரத்தில் நிறைந்துள்ளன. புகழ் பெற்ற கனக துர்கா கோயில் மற்றும் தென்னிந்தியாவிலேயே பழமையான வைஷ்ணவ கோயிலாக கருதப்படும் மங்களகிரி போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும். இவை தவிர, அமரேஷ்வரர் என்ற சிவன் அவதாரத்துக்கான அமராவதி, குணாடலா மாதா கோயில் எனப்படும் செயிண்ட் மேரி தேவாலாயம் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன. மேலும், மொகலாராஜபுரம் குகைகள் , உன்டவலி குகைகள் மற்றும் காந்தி மலையில் உள்ள காந்தி ஸ்தூபி, கொண்டபள்ளி கோட்டை, பவானி தீவு மற்றும் ராஜீவ் காந்தி பார்க் ஆகியவை விஜயவாடா நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களாகும். பிரகாசம் அணைத்தடுப்பு நீர்த்தேக்கமும் விஜயம் செய்ய வேண்டிய இயற்கை எழிற்பிரதேசமாகும்.
கனக துர்கா கோயில்
இந்திரகீலாத்ரி மலைகளின் உச்சியில் இந்த கனக துர்கா கோயில் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டியே கிருஷ்ணா ஆறும் ஓடுகிறது. விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். புராணக்கதைகளின்படி, இந்த ஸ்தலத்தில் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்ற அர்ஜுனன் துர்கா தேவிக்காக இக்கோயிலையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது நாம் காணும் கோயில் வளாகம் 12ம் நூற்றாண்டில் விஜயவாடா ராஜ்ஜியத்தை ஆண்ட பூசாபதி மாதவ வர்மா எனும் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வேத நூல்களின்படி இந்த கோயிலின் ஆதிவடிவம் ‘சுயம்பு'வாக உருவானதாகவும், ஆகவே இது மிகச்சக்தி வாய்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. சரஸ்வதி பூனை மற்றும் தெப்போத்சவம் போன்ற திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது சுலபமாகவும் உள்ளது.
அமராவதி
அமராவதி நகரில்தான் புத்தர் தன்னுடைய காலச்சக்ரா எனப்படும் போதனைகளை உபதேசம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் வஜ்ராயனா எனும் எழுத்து வடிவில் இங்கு காணப்படுவதோடு, அவை அமராவதி நகரம் கி.மு 500-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கூறுகிறது. அமராவதியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமராவதி ஸ்தூபம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவை தவிர கிருஷ்ணா நதிக்கரை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள்
இந்த மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன. 10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக்கோயில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள் மற்றும் சிற்பங்களுடன் இவை காட்சியளிக்கின்றன. தற்போது சிதிலமடைந்த நிலையில் சரியான பராமரிப்பின்றி இவை காணப்படுவது ஒரு துரதிர்ஷ்டமேயாகும். இந்த குகைக்கோயில்களில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் பக்தர்களும் இந்த குகைக்கோயில்களை தரிசிக்க வருகை தருகின்றனர். ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டு ஒரு காலப்பொக்கிஷமாக இந்த குடைவறைக்கோயில்கள் வீற்றிருக்கின்றன.
உன்டவலி குகைகள்
விஜயவாடா நகரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இவை 4ம் அல்லது 5ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நான்கு அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குடைவறை கோயில் தொகுப்புகளில் பிரதானமாக மஹா விஷ்ணுவின் சிலை காணப்படுகிறது.
ஒற்றை பளிங்கு கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ள்து. இந்த தொகுதியிலுள்ள ஏனைய குடைவறைகளில் இதர கடவுள்களின் சிலைகளும் காணப்படுகின்றன. புத்த மடாலயங்கள் போன்றும் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த குடைவறைகளை பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த பாறைக்குடைவறைகள் கிருஷ்ணா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ளன.
commons.wikimedia.org
குச்சிப்புடி கிராமத்துக்கு அருகில்
குச்சிப்புடி கிராமத்துக்கு அருகில் விஜயவாடா நகரின் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைந்திருப்பதால் வெகு சுலபமாக குச்சிப்புடி கிராமத்தை அடைந்து விட முடியும். எனினும் சாலை மூலமாக குச்சிப்புடி கிராமத்தை அடைவதுதான் சிறந்தது. அவ்வாறு சாலை வழியாக வருவதென்றால் ஹைதராபாத் அல்லது விஜயவாடா நகரங்களின் வழியாக குச்சிப்புடி கிராமத்துக்கு வர வேண்டும்.