
குதுரேமுக், கர்னாடக மாநிலத்தில் இயற்க்கை அழகு ததும்பும் இடங்களில் ஒன்றாகும். கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக பசுமை நிறைந்த இயற்கை காட்சிகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. தவிர கர்நாடகாவில் ட்ரெக்கிங் செல்ல சிறந்த இடங்களில் ஒன்றாவும் இது கருத்தப்படுகிறது. ஆர்ப்பரிக்கும் அருவி, அரியவகை விலங்குகள் மற்றும் பறவைகள் என இங்கிருக்கும் விஷயங்கள் நம்மை இயற்கையோடு ஒன்றச்செய்யும்.
குதுரேமுக் - குதிரைமுகம் :

புகைப்படம்: Rahul Ravindra
கன்னட மொழியில் குதுரேமுக் என்றால் குதிரைமுகம் என்று அர்த்தமாம். இந்த மலையில் அமைந்திருக்கும் ஒரு குன்று சாய்ந்து இருக்கும் ஒரு குதிரையின் முகம் போல காட்சியளிப்பதால் இந்தப்பெயர் வந்ததாம். இந்தமலை பெங்களுருவில் இருந்து 330 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்மங்கலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குதுரேமுக்கில் ஆசியாவின் முக்கிய இரும்புத்தாது தொழிற்சாலைகளில் ஒன்றான குதுரேமுக் இரும்புத்தாது தொழிற்சாலை அமைந்திருக்கிறது.
குதுரேமுக் ட்ரெக்கிங்:

புகைப்படம்: Praveen
மேலே சொன்னது போல கர்நாடகாவின் முக்கிய ட்ரெக்கிங் செய்யும் இடங்களில் ஒன்றாக குதுரேமுக் மலை விளங்குகிறது. மல்லோடி என்னும் இடத்தில் ஆரம்பிக்கும் ட்ரெக்கிங் பயணம் போக வர என சேர்த்து மொத்தம் 18கி.மீ தூரம் கொண்டது. இங்கு ஒரு முழுமையான ட்ரெக்கிங் சென்று வர 8-9 மணி நேரம் வரை ஆகிறது.

புகைப்படம்: netlancer2006
ட்ரெக்கிங் செல்ல நுழைவு கட்டணமாக 275 ரூபாய் செலுத்தவேண்டும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ட்ரெக்கிங் செல்ல அருமையான சூழ்நிலை நிலவுகிறது. இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் வர வேண்டிய இடம் இது.
குதுரேமுக் தேசிய பூங்கா:

புகைப்படம்: Roshan Rao
சுற்றிலும் மலைகள் சூழ எப்போதும் பச்சைப்பசேல் என இருக்கும் காடுகளுக்கு நடுவே கம்பீரமான அழகுடன் அமைந்திருக்கிறது குதுரேமுக் தேசிய பூங்கா. புலிகள், சிறுத்தைகள், மலபார் அணில்கள், பறக்கும் அணில்கள், புள்ளி மான்கள், கீரிகள் என இந்த தேசிய பூங்காவில் விதவிதமான விலங்குகள் வசிக்கின்றன. மேலும் 195 வகையான பறவைகளும் இந்த பூங்காவை தனது வசிப்பிடமாக கொண்டுள்ளன. ராஜநாகங்கள், மலைப்பாம்புகள் மற்றும் ஆமைகளையும் இங்கே நாம் காணலாம். வறட்சி நீங்கி பசுமை படர ஆரம்பிக்கும் அக்டோபர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை இங்கு செல்ல சிறந்த காலகட்டம் ஆகும்.
கதம்பி அருவி:

புகைப்படம்: Karunakar Rayker
ஒரு அருவியை இத்தனை அழகான சுற்றுச்சூழலில் பார்த்ததே இல்லை என்று நம்மை நிச்சயம் சொல்ல வைக்கும் குதுரேமுக் தேசிய பூங்காவினுள் அமைந்திருக்கும் இந்த கதம்பி அருவி. ஆர்ப்பரிக்கும் இந்த அருவியில் ஷவரில் குளித்து அலுத்துப்போன நாம் நரக மயமான நகர வாழ்க்கையை மறந்து அருவில் குளிக்கலாம், இல்லையென்றால் அருவியில் இறங்கி நண்பர்களுடன் துள்ளி விளையாடலாம். குதுரேமுக்கிற்கு ட்ரெக்கிங் வருபவர்கள் தங்கள் ட்ரெக்கிங் களைப்பை போக்க இங்கே அவசியம் வந்து செல்கின்றனர். சாகசம் நிறைந்த ட்ரெக்கிங் பயணத்துடன் இயற்கையுடன் கொஞ்சி விளையாடும் இந்த அருவிக்குளியலும் சேர்ந்தால் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.
லக்யா அணை:

புகைப்படம்: solarisgirl
குதுரேமுக்கில் இருக்கும் மற்றுமொரு அழகிய சுற்றுலாத்தலம் இந்த லக்யா அணை. பத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மேல் நின்று பார்க்கையில் குதுரேமுக்கின் பேரழகை முற்றாக தரிசிக்கலாம். குடும்பத்துடன் வருபவர்களுக்கு தகுந்த இடம் இந்த லக்யா அணை.
ஹனுமான் குந்தி அருவி:

புகைப்படம்: Arun Keerthi K. Barboza
சுத்தனப்பே அருவி என்றும் அழைக்கப்படும் ஹனுமான் குந்தி அருவி குதுரேமுக் தேசியப்பூங்காவில், கர்கலா அணை மற்றும் லக்யா அணைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல வனத்துறையால் பாதுகாப்பான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அருவியைக் காண அனுமதிக்கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications



