பெங்களூர் அடுத்து 125 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் லேபக்ஷி. அந்திர மாநிலத்தில் இருக்கிறது இந்த ஊர். ஹிந்துபூரிலிருந்து 15 கி,மீ. இந்த ஊரில், சத்தமே இல்லாமல் இருக்கிறது மிகப் பழமையான, பிரமாண்டமான வீர பத்ர கோவில்.
Photo Courtesy : Bikash Das
இந்த கோவிலின் பின்னே ஒரு கதை இருக்கிறது.
ராமாயண காலத்தில் நடந்தது : ஜடாயு ராவணனால் தாக்கப்பட்டு கிடந்த போது, ராமன், அதை குணமாக்கி, எந்திரி பக்ஷி(லே பக்ஷி) என்று சொன்னார்.
அதன் நினைவாக இந்த இடத்திற்கு லே பக்ஷி என்று பெயர் வந்தது. விஜயநகர அரசின் கட்டுமானக் கலைக்கு ஒரு அழகிய எடுத்துக்காட்டு இந்தக் கோவில். இந்த கோவிலின் ஓவ்வொரு சிற்பத்திலும், தூண்களிலும், பிரமிக்கவைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் மிளிர்கிறது.
Photo Courtesy : Bikash Das
தஞ்சை பெரிய கோவிலைப் போல கோவிலின் முன்னே ஆஜானுபாகுவாய் வீற்றிருக்கிறது ஒரு மிகப்பெரிய நந்தி. இதைப் பார்ப்பதற்கே பல புகைப்பட ஆர்வலர்கள் வருகிறார்கள்
சுவாரஸ்யமாக, நந்தி கோவிலுக்கு வெளியே இருந்தாலும் அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று கவனிக்க வேண்டும் ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்டது இந்த கோவில். இந்தியாவின் மிகப்பெரும் நந்திகளில் இதுவும் ஒன்று.
Photo Courtesy : Bikash Das
வீர பத்ர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டது. இக்கோவிலின் தனித்துவம் : அழகிய சிற்பச் செதுக்கல்கள், சுவரோவியங்கள். சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்கள். மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவை குறிக்கும் வகையில் சுவரோவியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் 16ஆம் நூற்றாண்டில் வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Courtesy : Pp391
இன்னொரு முக்கிய ஈர்ப்பு ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கம். இந்த அருமையான சிற்பமும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. Hanging Pillars எனப்படும் தொங்கும் தூண்கள் பார்ப்பவர் எவரையும் கவரும்.
வார இறுதியில் பெங்களூரில் இருந்து ஒரு நாளுக்குள் போய் வர ஒரு சிறந்த சுற்றுலா தலம்.
முதலில் பெங்களூரில் இருந்து ஹிந்துப்பூர் சேர வேண்டும், அங்கிருந்து ஆந்திர மாநில பேருந்துகள், லே பக்ஷிக்கு இருக்கின்றன.