நம் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் குறித்து நாம் அறிந்துகொண்டுதான் வருகிறோம். அதிலும் குறிப்பாக கோவில்கள். கண் திறந்த பெருமான், பால் குடித்த அம்மன், வியர்க்கும் முருகன் என பல நிகழ்வுகளை நினைவுகூரலாம். அந்த வகையில், இங்கே ஓர் ஊரில் கல்லாக நட்டிய கல் ஒன்று அம்மனாக மாறிய அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதிலும், பல்வேறு வளங்களை வாரிவழங்கும் அம்மனாக... வாங்க அப்படி அந்த அம்மன் எங்கே உள்ளது ? என்னவெல்லாம் சிறப்பு என்று பார்க்கலாம்.
எங்கே உள்ளது ?
விருதுநகரில் இருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் அடுத்து அமைந்துள்ள சிவகிரி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தங்கமலைக் காளி திருக்கோவில். இங்கோவில் உள்ள தங்கமலைக் காளியே சாதாரணமாக நடப்பட்ட கல்லில் இருந்து தோன்றி அம்மனாகும்.
Rskumar83
சிறப்பு
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நடப்பட்ட கல்லில் இருந்து தோன்றிய அம்மன் இன்று திருமணத் தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளதாக இருப்பது திருத்தலத்தின் சிறப்பாகும். தான் குடிகொண்டுள்ள பகுதியினை செல்வசெழிப்புமிக்கதாக தங்கமலைக் காளி காப்பதாக ஊர்மக்களால் போற்றப்படுகிறது.
திருவிழா
அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பவுர்ணமி, சித்திரை மாதங்களிலும் ஏராளமான பக்தர்கள் கூடி சிறப்புப் பூஜைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நடைதிறப்பு
தங்கமலைக் காளி கோவில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நேர்த்திக்கடன்
வேண்டிய காரியம் நிறைவேறியதன் பின் காளியம்மனுக்கு புது ஆடைகள் உடுத்தி, பொங்கல் படைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலவரலாறு
சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவிப்பட்டிணம், சிவகிரி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் ஓர் கல்லை நட்டி, அதற்கு மண்ணில் செய்த பொங்கல் படைத்து சாமியாகக் கருதி வழிபட்டுள்ளனர். அப்போது, அந்தக் கல் காளியாக உருமாறித் தரிசித்ததாக தொன்நம்பிக்கை. இதனைத்தொடர்ந்தே அப்போதைய ஊர் பொதுமக்கள் மற்றும் ஜமீன் இணைந்து கூடாரமலையில் இருந்து கல்லைக் கொண்டு இந்தக் கோவில் கட்டியதாக வரலாறு உள்ளது.
Ramamanivannan
எப்படிச் செல்வது ?
சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பொதிகை, திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. ராஜபாளையத்தில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் தங்கமலைக் காளை கோவிலை அடையலாம்.
Superfast1111