பொதுவாக யாரேனும் உயிரிழந்து விட்டால் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி மூன்று அல்லது 16வது நாளில் படையல் வைத்து வணங்குவோம். ஒரு சில பிரிவினர்களிடையே இது வேறுபடும். நீர்நிலைகளில் அஸ்தியைக் கரைப்பது, இறந்தவருக்கு விருப்பமான உணவுகளை படைப்பது, அவர்களது நினைவாக தர்ப்பணம் கொடுப்பது என வழிபடுவோம். ஆனால், இங்கே ஓர் ஊரில் யாரேனும் உயிர் இழந்துவிட்டால் இங்கு அமைந்துள்ள கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வாங்க, அது எங்கே, அத்தலத்தின் சிறப்பு என்ன என்பதை அறிந்துகொள்வோம்.
தல சிறப்பு
வேப்ப மரம் நிறைந்த ஊரான வேப்பூரில் அமைந்துள்ளது அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகனை புகழ்ந்து அருணகிரியார் பாடல் பாடியுள்ளார். செல்வ விநாயகர், காசி விஷ்வநாதர், அகோர வீரபத்திரர், கால பைரவர் உள்ளிட்டோருக்கு இங்கு தனித் தனியே சன்னதிகள் உள்ளன.
Ssriram mt
கோவில் வரலாறு
வேம்பு வனமான இந்த ஊரில் சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் தங்கி சிவலிங்கத்தை வேண்டி கடும் தவத்தில் இருந்தார். அப்போது அவரது கண் முன் தோன்றி அருள்பாலித்த சிவன் லிங்கத்தில் ஐக்கியமானார். இதனாலேயே இத்தல சிவபெருமானுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. ராமபிரானின் குருவான வசிஷ்டர் இங்கு வழிபட்டதால் குரு தலம் என்றும் உள்ளூர் மக்களால் அறியப்படுகிறது.
Ssriram mt
தல அமைப்பு
பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தல சிவன் சன்னதி மண்டபத்தில் வசிஷ்டர் சிவனை வணங்கியபடி காட்சியளிக்கிறார். பாலகுஜாம்பிகை அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
Ssriram mt
வழிபாடு
திருமண வயது கடந்தும் திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் அற்றோர் இத்தலத்தில் வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியில் யாரேனும் உயிரிழந்து விட்டால் மூன்றாம் நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மொட்சம் அடைய தீபம் ஏற்றும் நடைமுறையும் இத்தலத்தில் நிலவுகிறது. மகாளய பட்சம், அமாவாசை அன்று இங்கு சிவபெருமானுக்கு விஷேச பூஜைகள் நடைபெறும்.
கி. கார்த்திகேயன்
நேர்த்திக்கடன்
இறந்தவர்கள் மோட்சம் அடைய இத்தலத்தில் உள்ள நவகிரகங்களுக்கு புத்தாடை அணிவித்து, மோட்ச தீபம் ஏற்றி நவதானியங்களும் படைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது தல நம்பிக்கை.
Ssriram mt
நடை திறப்பு
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் கோவில் நடை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.
Ssriram mt
எப்படிச் செல்வது ?
வேலூர் மாவட்டம், வேப்பூரில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை வழியாக சுமார் 185 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திருச்சியில் இருந்து 86 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடைய முடியும். தஞ்சாவூர், திருச்சி, கள்ளக்குறிச்சி பிற பகுதிகளில் இருந்து எளிதில் அடையும் வகையில் பேருந்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
Ssriram mt