ஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில் உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின் மேற்குப்பகுதியில் இந்த மலைவாசஸ்தலம் உள்ளது. போர்காட் மலைப் பகுதியின் இறுதியில் லோனாவலா எனப்படும் மற்றொரு மலைவாசஸ்தலத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த கண்டாலா அமைந்துள்ளது. இது மலை ஏற்றத்துக்கு புகழ் பெற்று விளங்கும் ஒரு சுற்றுலாத்தலமாகும்.

சஹயாத்ரி மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின்மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மலைவாசஸ்தலம் மிக அற்புதமான பருவநிலையை வருடமுழுவதும் கொண்டுள்ளது.
இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் தன் அழகிய பள்ளத்தாக்குகள், உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள், ரம்மியமான ஏரிகள், சொர்க்கலோகம் போன்ற அருவிக்காட்சிகள் போன்றவற்றால் இங்கு வருகை தரும் பயணிகளை மெய்மறக்க செய்கிறது.
அம்ருதாஞ்சன் பாயிண்ட், பிரபு மூக்கு சிகரம், ரைவுட் பார்க் மற்றும் புஷ்ஷி அணை போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
இயற்கை வனப்புகளை நிரம்பப்பெற்றிருக்கும் இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் இதர சுற்றுலா அம்சமாக குகைக்கோயில்களையும் கொண்டுள்ளது. இவை இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது விசேஷமான உண்மையாகும்.

பௌத்த சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குகைக்கோயில்கள் இப்பகுதியில் (அக்காலத்தில்) ஹீனயானம் (ஒருவகை புத்த மதப்பிரிவு) தழைத்தோங்கி இருந்ததற்கான அடையாளமாக விளங்குகிறது.
இயற்கை ரசிகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த கண்டாலா மலைவாசஸ்தலப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டாலே போதும், இந்த பிரதேசத்தின் எழில் அவர்களை வசப்படுத்திவிடும்.
இயற்கை வனப்பை ஏராளமாய் பெற்றுள்ள இந்த கண்டாலா மலைவாசஸ்தலத்துக்கு மழைக்காலத்தில் விஜயம் செய்தால் பூத்துக்குலுங்கும் பசுமையை பார்த்து ரசிக்கவும் மயங்கவும் செய்யலாம். கண்டாலாவின் முழு அழகை தரிசிக்க அக்டோபர் முதல் மே மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் சிறந்தது.
கண்டாலா மலைவாசஸ்தலத்தின் சீதோஷ்ண நிலை வருடமுழுவதுமே ஊர் சுற்றிப்பார்ப்பதற்கேற்ற வகையில் உள்ளது. மிதமான குளுமையான சூழலே இங்கு நிலவுகிறது.

இருப்பினும் குளிர்காலத்தில் வருகை தருவது கூடுதல் விசேஷம். குளுமையும் இயற்கையும் சேர்ந்து விடுமுறைச் சுற்றுலாவை இன்பமுள்ளதாய் ஆக்குகின்றன. இங்கு மலையேற்றத்தில் ஈடுபட்ட அனுபவத்தை உங்களால் வாழ்நாள் முழுக்கவே மறக்க முடியாது என்பதுதான் உண்மை.
சிக்கனமான பயணியானாலும் சரி பணம் படைத்த பயணியானாலும் சரி எல்லாதரப்பினருக்கும் ஒரே மாதிரியான இயற்கை அழகை இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் தருகிறது.



Click it and Unblock the Notifications




