ஆண்டாள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே ஒரு வைணவ பெண் ஆழ்வார். இவரையும் சேர்த்து மொத்தம் 12 ஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றியதாக தமிழ் கூறும் நல்லுலகு குறிப்பிடுகிறது. ஆண்டாள் பூமாதேவியின் குழந்தை என்றும் கருதப்படுகிறார்.
பெரியாழ்வாரின் மகள் என்று பலர் நம்பிக்கொண்டிருந்தாலும், ஆண்டாள் பெரியாழ்வாரின் சொந்த மகள் இல்லை என்று புராணம் கூறுகிறது. மதுரைக்கு தெற்கே திருவில்லிப்புதூர் எனும் நகரில், துளசிச் செடியின்கீழ் கிடந்த குழந்தைதான் ஆண்டாள் என்கிறது வரலாறு. பெரியாழ்வார் எனும் விஷ்ணு பக்தர் அவரை எடுத்து வளர்த்ததாகவும், வரலாறு.
தமிழகத்தில் எழுந்துள்ள இந்த பரபரப்பு ஆண்டாளைப் பற்றியும், அவரின் ஊர் பற்றியும் தெரிந்து கொள்ள நம்மை பயணிக்கச் செய்துள்ளது. வாருங்கள் ஆண்டாள் பிறந்த இடத்துக்கு நம் பயணத்தைத் தொடங்குவோம்.
பாண்டிய வம்சம்
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு பாண்டியவம்சத்தினர் மிகப்பெரிய தேசத்தை ஆண்டுவந்தனர். அந்த தேசத்துக்குட்பட்டதுதான் திருவில்லிப்புதூர். இங்குதான் ஆண்டாள் பிறந்ததாக நம்பப்படுகிறது.
வைணவத்தை ஆதரித்த பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்ததால், ஆண்டாளும் வைணவ கடவுளான விஷ்ணுவை பூசிக்கத் தொடங்கினார். பின் அவரையே தன் துணையாகக் கருதி பாடல்களையும் எழுதினார்.
Anton 17
தமிழ் தொண்டு
ஆண்டாளின் தமிழ் தொண்டாக, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடற் தொகுதிகளை எழுதியதை குறிப்பிடுகிறார்கள் சிலர். ஆனால் அதிலுள்ள செய்யுள்கள் அனைத்தும் தமிழ் மொழியின் வீரியத்தைக் காட்டிலும், வைணவத்தை வளர்க்க முற்பட்டதை மறுக்க இயலாது.
1947ம் ஆண்டில் இந்தியா உருவானபிறகு திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இந்து மதம், அதற்கு முன்பு வைணவ, சைவ, புத்த, சமண மதங்களாக பல பிரிவுகளில் இருந்தது. ஆங்கிலேயன் அடிமைபடித்தியபோது முகலாய மற்றும் கிறித்துவர்களை தவிர்த்த மற்ற அனைவரையுமே இந்து என்று அழைத்துள்ளான். அதுவே நாளடைவில் இந்து மதம் என்ற ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு முன் பல சமய நூல்கள் தமிழில் இருந்தாலும், ஒரு பெண் இறைவனைத் தன் துணையாகக் கருதி எழுதிய இந்த பாடற்தொகுதிகள் தனிச்சிறப்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
Manavatha
திருவில்லிப்புதூர்
சென்னையிலிருந்து 542கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருச்சி மதுரை வழியாக திருவில்லிப்புதூரை அடைய ஏறக்குறைய 9 மணி நேரம் ஆகின்றது. மேலும், இது பெரும்பாலும் தங்க நாற்கரச் சாலையில் பயணிப்பதால் அலுப்பு தெரியாமல் பயணிக்கமுடியும்.
மதுரையிலிருந்து கல்லுப்பட்டி, நத்தம்பட்டி வழியாக 80கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருவில்லிப்புதூர்.
எப்படி செல்லலாம்
விமானம் மூலம் பயணித்தால் நீங்கள் வந்து சேரவேண்டிய இடம் மதுரை. இதுதான் திருவில்லிப்புதூர் அருகில் அமைந்துள்ள விமான நிலையம்.
ரயில் நிலையம் திருவில்லிப்புதூரிலேயே அமைந்துள்ளது. இங்கு செங்கோட்டைக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்லும். சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயில் காலை 6.13மணிக்கு அல்லது சற்று முன்பின் நேர மாறுபாட்டில் திருவில்லிப்புதூரில் நின்று செல்கிறது.
கோயம்புத்தூரிலிருந்து வருபவர்களுக்கு கோவை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலும், பெங்களூரிலிருந்து வருபவர்களுக்கு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலும் இருக்கிறது.
மதுரை எம்ஜியார் பேருந்து நிலையத்திலிருந்து நேரிடையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அல்லது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வந்து அங்கிருந்து திருவில்லிப்புதூர் பேருந்து ஏறி வந்தடையலாம்.
ஆண்டாள் எனும் கோதை
ஆண்டாள் என்று அழைக்கப்படும் அவருக்கு வளர்ப்பு தந்தை இட்ட பெயர் கோதை. அவர் கோதையை அப்படியே கடவுள் லட்சுமியின் மனித அவதாரமாகக் கருதினார் என்றும் கூறுகின்றனர், இதை கோதையின் மனதிலும் பதித்து வந்துள்ளார் பெரியாழ்வார்.
திருவில்லிப்புதூர் ஆண்டாள் கோயில்
11 அடுக்கு கோபுரம் கொண்ட திருவில்லிபுதூர் ஆண்டாள் கோயில், உள்ளூரில் மட்டுமல்லாது. தமிழகத்திலேயே மிகப் பிரபலம். இங்கு சென்றுவிட்டு வருபவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.
வடபத்ரசாயி தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இந்த கோயில். இது ஆண்டாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
Gauthaman
தமிழக அரசு சின்னம்
தமிழக அரசின் சின்னமாக உள்ளது திருவில்லிப்புதூர் ஆண்டாள் கோயில் கோபுரம் ஆகும். இது திருச்சி திருவரங்கம் கோயிலின் கோபுரத்தை ஒத்துக் காணப்படுகிறது.
ஆண்டவனை மணக்க நினைத்து திருமணத்தை நிறுத்தி வந்த ஆண்டாள், இறைவனிடம் வேண்டியதாகவும், இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து திருவரங்கத்தில் மணப்பெண் அலங்காரத்துடன் கோதையை, விடுமாறு கடவுள் கூறியதாகவும் புராணங்கள் கதை கூறுகின்றன. மேலும் அப்படி விட்டதும் ஆண்டாள் மறைந்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இதனால் பலர் இவர் ஒரு தமிழ் புலவர் என்பதையே ஏற்க மறுக்கின்றனர். மேலும் பதினைந்து வயதிலேயே நாச்சியார் திருமொழி போன்ற ஒரு கட்டுரையை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று மறைந்த எழுத்தாளர் ஞானி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதிலும் அவருக்கு முன் ராஜாஜி, ஆண்டாள் என்பது பெரியாழ்வாரின் கற்பனை கதாபாத்திரம் என்று கூறியிருப்பதாக அதே பேட்டியில் கூறியுள்ளார் ஞானி.
wiki
சுற்றுலாத் தளங்கள்
கட்டழகர் கோயில், வைத்தியநாதசுவாமி கோயில், திருவில்லிப்புதூர் மாரியம்மன் கோயில், செங்குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய், முனியான்டி கோயில், திருமலை நாயக்கர் மகால், அணில்கள் சரணாலயம், கலசலிங்கம் அய்யனார் கோயில், திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், கம்பம், குமுளி, மேகமலை, சபரிமலை என நிறைய சுற்றுலாத் தளங்கள் இங்கு அமைந்துள்ளன.
கட்டழகர் கோயில்
கட்டழகர் கோயில் திருவில்லிப்புதூரிலிருந்து 25கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆனால் இன்னொரு பாதை வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். கொல்லம் திருமங்கலம் சாலை வழியாக சென்றால் கிருஷ்ணன்கோயில் அருகே இடது புறம் திரும்பினால் வெகு அருகிலேயே கட்டழகர் கோயில் அமைந்துள்ளது. இது கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அருகில் சிறுமலை அன்னை தேவாலயம், அமலா அன்னை தேவாலயம் அவர் லேடி ஆப் சிறுமலை தேவாலயமும் அமைந்துள்ளன.
வைத்தியநாதசுவாமி கோயில்
விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சிவ தலம் இதுவாகும். சிவனின் திருவிளையாடல்களில் 24 இந்த கோயிலில் நடைபெற்றதாக நம்பிக்கை. மகா அஷ்டமியன்று இங்கு இலைமீது அங்கப்பிரதட்சினம் செய்தால் நோய் நொடி தீர்ந்து நன்மை பிறக்கும் என்பதும் நம்பிக்கை.
500 முதல் ஆயிரம் வருட பழமையான கோயிலாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதம் முதல் நாளன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுகிறது இது உலக சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
Srithern
திருவில்லிப்புதூர் மாரியம்மன் கோயில்
ஆண்டாள் கோயிலிலிருந்து வெறும் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில்.
நடந்து செல்லும் தொலைவிலேயே இருந்தாலும், ஆண்டாள் கோயிலுக்கு தரும் முக்கியத்துவம் மாரியம்மன் கோயிலுக்கு தரப்படுவதில்லை. இந்த கோயிலுக்கு அருகே கிடைக்கும் பால்கோவா மிகுந்த சுவையானதாக இருக்கும்.
திருமலை நாயக்கர் மகால்
ஆண்டாள் கோயிலிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் பக்கத்து தெருவில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மஹால்.
Jeroalex
அணில்கள் சரணாலயம்
இந்தியாவில் காணப்படும் சிறப்பு பழுப்பு மலை அணில்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சரணாலயம் இதுவாகும். தமிழ்நாடு, கேரளாவில் மட்டுமே இது காணப்படுகிறது.
காடுகள் ஆக்கிரமிப்பாலும், வேட்டையாடுதல் காரணமாகவும் இந்த அணில்கள் பாதுகாக்கவேண்டிய பட்டியில் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருவில்லிப்புதூர் ஆண்டாள் கோயிலிலிருந்து நாற்பது கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
பென்னிங்க்டன் நூலகம்
திருவில்லிபுதூர் ஆண்டாள் கோயிலிலிருந்து வெகு அருகில் அமைந்துள்ளது இந்த நூலகம். இது ஆங்கிலேயரிடம் நம் நாடு அடிமைப்பட்டிருந்தபோது கட்டப்பட்ட நூலகமாகும்.
வணக்கம்
தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் நேட்டிவ் பிளானட் இணையதளத்துடன். நன்றி வணக்கம்