பொதுவாகவே புதிதாக நாம் ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால் அதுகுறித்தான எதிர்பார்ப்பகளும், அந்த இடம் குறித்தான கனவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்புகளை எல்லா இடங்களும் பூர்த்தி செய்ததா என்றால் அது நிச்சயமாக நடந்திருக்காது. ஆனால், வரந்தா மலைத்தொடர் அப்படி இல்லை. நாம் எதிர்பார்த்தைக் காட்டிலும் கற்பனையில் கூட காணமுடியாத அற்புத காட்சிகளை நம் கண் முன் நிறுத்துகிறது.
எங்கே உள்ளது ?
புனேவில் இருந்து சுமார் 83 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது இந்த வரந்தா மலைத்தொடர். இப்பகுதி முழுக்க அடர்த்தியான பசுமையான காடுகள், உயரச் சிகரங்கள், விலங்குகள், அருவிகள் என்று இயற்கை அன்னையிடம் இருந்து தாரளமாக வரங்களையும், வளங்களையும் அள்ளி வந்திருக்கிறது.
Pranav Lawate
பயமுறுத்தும் சாலையில் கொஞ்சும் அழகு
வரந்தா மலைத்தொடர்களில் வாகனங்கள் ஓட்டிச் செல்வது கடினமானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதும் கூட. ஏனென்றால் மலைத்தொடர் முழுக்க வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் நம்மை பயமுறுத்துவதோடு, சாலைகளுக்கு அப்பால் காணப்படும் பள்ளத்தாக்கு நம்மை அழகாக மிரட்டவும் செய்யும். பல சமயங்களில் சாலையை மூடும் பனியால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாது.
Shakher59
அடர்காட்டு அருவிகள்
வரந்தா மலைத்தொடர்கள் 10 கிலோ மீட்டர் நீளம் இருப்பதுடன், ஒவ்வொரு மலைச்சிகரங்கங்களும் ஒவ்வொரு உயரத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும். எங்கும் காணிணும் பசுமைப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் மலைகளின் நடுநடுவே அட்டகாசமாய் கொட்டிக்கொண்டிருக்கும் அருவிகள் அப்படியே நம் மனதை கொள்ளையடித்துவிடும்.
Marathipunekar
ஷிவ்தார் கால்
வரந்தா மலைத்தொடரில் போர்-மஹத் சாலையில் ஷிவ்தார் கால் என்று ஒரு அற்புதமான குகை அமைந்துள்ளது. இந்த குகையில் 17-ஆம் நூற்றாண்டு மராட்டிய கவி மற்றும் முனியான சாம்ராத் ராம்தாஸ் என்பவர் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த இடத்தில்தான் இவருக்கும், சத்ரபதி சிவாஜிக்குமான முதல் சந்திப்பு நடந்தது என்றும் கூறப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த குகையை மறைத்துக்கொட்டும் அருவியின் காட்சி நிச்சயம் உங்களை அடிமையாக்கிவிடும்.
Sanketr3392
பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்யுங்கள்!
வரந்தா செல்லும் வழியில் பெட்ரோல் பங்குகள் குறைவு என்பதால் உங்கள் வாகனங்களை வீட்டில் இருந்து எடுக்கும்போதே டேங்கை ஃபுல் செய்து வைத்துக்கொள்வது அவசியம். மேலும், வாகனத்தின் இதர முக்கிய ஸ்பேர் பார்ட்ஸ்களையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
Annishaikh1990
உரையவைக்கும் பனிக்காற்று
வரந்தா பகுதியில் குளிர் அmதிகமாக காணப்படும் என்பதால் குளிர் தாங்கும் அளவுக்கு நல்ல கனமான ஆடைகளை உடுத்திக்கொள்வது அவசியம். அதோடு சூரிய உதயத்துக்கு முன்பும், சூரிய அஸ்த்தமனத்துக்கு பிறகும் சாலையெங்கும் பனிமூட்டமாக இருக்குமென்பதால் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்செல்வதே சிறந்தது.
Sanketr3392
எப்படி அடைவது?
புனேவிலிருந்து 83 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள். எனவே புனேவிலிருந்து செல்ல விரும்புபவர்கள் NH4 சாலை மூலம் நாராயண்பூர் சாலையை அடைந்து போர் சாலையில் வலது பக்கம் திரும்பி போர் மலைத்தொடரை அடைய வேண்டும். அதன்பின்பு நேராக வரந்தா மலைத்தொடரை சுலபமாக அடைத்து விடலாம்.