உள்நாட்டு போரினால் ஏற்பட்ட வடுக்களை இன்னும் தாங்கி கொண்டிருக்கின்ற போதிலும், இலங்கை தன்னை அதிலிருந்து விடுபட முயன்று வருகிறது என்றால் மிகையல்ல.
மூன்று தசாப்தங்கள் முன்பே, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக, 200 மீட்டர் கம்பீரமாக காட்சியளிக்கும் பாறையை அறிவித்து இருக்கிறது என்றால் சும்மாவா...!
பண்டைய பொறியியல், கட்டடக்கலை புத்திசாலித்தனத்துக்கு ஒரு சான்று மட்டுமின்றி, இலங்கையின் வளமான வரலாற்றின் சாளரமாகவும் திகழ்கிறது.
சுமார் இருமில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், எரிமலை வெடித்து அதன் எரிமலைக் குழம்பு காலப்போக்கில் உரைந்ததினால் தோன்றியவையே சிகரியாவும், பிதுரங்கல குன்றுகளும்.

எங்கு உள்ளது...
சிகிரியா, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கே 165 கி.மீ., தூரத்திலும், தம்புள்ளவில்ல இருந்து 15 கி.மீ., தூரத்தில் அமைந்த கிராமம். இங்கிருந்து, ஒரு கி.மீ தூரத்தில் பிதுரங்கல குன்றும் உள்ளது.
கலை ஆர்வர்கள் நோட் இட்
சிகிரியாச் சித்திரங்கள், இந்தியாவில் உள்ள குப்தா மன்னர் காலத்தில் வரையப்பட்ட, அஜந்தா குகைச் சித்திரங்களப் போன்றவை. கலை ஆர்வம் உள்ள மன்னரால் உருவாக்கப்பட்டவை. இன்றும் பிரசித்தி பெற்ற சித்திரங்களான இவை, 15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவை.

கி.மு., 5 ஆம் நூற்றாண்டில் இருந்து, இந்த பாறை தங்குமிட மலை மடாலயமாக பயன்படுத்தப்பட்டது. குகைகள் பௌத்த சங்க பக்தர்களால் தயாரிக்கப்பட்டு, நன்கொடையாக வழங்கப்பட்டன.
சிகிரியா அருங்காட்சியகத்தில், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள், ஓவியங்களின் மறுஉருவாக்கம், கண்ணாடிச் சுவரில் உள்ள ஓவியங்கள், அவற்றின் எழுத்துகளின் மொழிப்பெயர்ப்புகள், கலைப்பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
ஒரு மணி நேரத்தில் நீங்கள் அருங்காட்சியகத்தைப் பார்க்கலாம். லயன் ராக் குறித்த பல வரலாற்று தகவல்கள், அது சார்ந்த சான்றுகள் என போர் அடிக்காமல் அழகை ரசிப்பதோடு, அந்நாட்டின் வரலாற்றையும் அறியலாம் என்பதில் துளியும் ஐயமில்லை. வனத்தால் சூழப்பட்ட சிகிரியா குன்றின் மீது, அரண்மனையும், அழகிய பூந்தோட்டமும், குளிப்பதற்கு நீர் தடாகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அது யார் என்பதை, அங்கு சென்று தான் அறிந்து கொள்ளுங்களேன்.

'டுக் டுக்'லயும் போலாம்
சிகிரியா, தம்புள்ளை நகரத்துடன் வழக்கமான பேருந்து சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் தினமும் காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, 30 நிமிட இடைவெளியில் இயங்குகிறது.
தம்புள்ளையிலிருந்து tuk-tuk இல் பயணம் செய்யலாம். அது என்னங்க டுக் டுக்... அதாங்க நம்ம ஊர்ல இருக்கும் ஆட்டோவை தான் அங்க டுக் டுக் என சொல்லுகிறார்கள்.
தம்புள்ளையிலிருந்து 25 கி.மீ தொலைவில் சிகிரியா அமைந்துள்ளது. நீங்கள் சிகிரியாவில் தங்கவில்லை என்றால் மாலை சுமார் 6:00 மணிக்கு தம்புள்ளைக்கு திரும்பும் கடைசி பேருந்தைத் மிஸ் பண்ணிடாதீங்க...

சிகிரியா பாறை சுற்றி பார்க்க செல்லும் முன், தேவையான குடிநீர் பாட்டில்களை வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் நீண்ட தூரம் குன்றின் மீது ஏற வேண்டியிருக்கும். உள்ளே தண்ணீரும், எவ்வித பானங்களும் விற்பதில்லை.
அதே போல, ஆதவன் தலையை காட்டும் முன்னே ஏற ஆரம்பியுங்கள்... இல்லையெனில், அவர் வெளியிடும் உஷ்ணம் உங்க உச்சி தலையை வியர்வையால் நனைப்பதோடு, நீங்கள் எடுத்து சென்ற தண்ணீரையும் கொஞ்ச, கொஞ்சமாக கரைத்துவிடும்.



Click it and Unblock the Notifications



