கோட்டை என்பது அந்தக் காலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக் கட்டப்பட்டது. அதுவே இன்று இந்திய கட்டிடக் கலையையும், அரசர்களின் போர்த் தந்திரத்தையும் அறிய சாட்சிகளாக திகழ்கின்றன.
இவற்றில் சில கோட்டைகளுள் முக்கியமானவர்களின் தங்குமிடங்களும், போர்வீரர்களுக்கான வசதிகளும், சில அரச அலுவலகங்களும் மட்டுமே அமைந்திருக்க, சில கோட்டைகள் நகரங்களையே அவற்றுள் அடக்கியிருந்தன.
இந்தக் கோட்டைகளின் மதில்கள் எதிரிகள் கடப்பதற்குக் கடினமாக இருப்பதற்காக உயரமானதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அந்த மதில்களில் ஆங்காங்கே போர்வீரர்கள் இருந்து கண்காணிப்பதற்கான காவற்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
அதோடு கோட்டை மதிலில் முக்கியமான இடங்களில் மட்டும் வாசல்கள் அமைந்திருப்பதோடு, இவையும் உறுதியான கதவுகளினால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
மேலும் கோட்டைகள் பல ஆழமான அகழிகளினால் சூழப்பட்டிருப்பதும் உண்டு. அதேபோல் கோட்டை வாயிலை அணுகுவதற்காக அகழிக்குக் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டிருப்பதோடு, தேவையேற்படும்போது இப்பாலங்களை எடுத்துவிடக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மெஹ்ரான்கர் கோட்டை, ஜோத்பூர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 150 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் மெஹ்ரான்கர் கோட்டையானது அமைந்துள்ளது. ஏழு நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்தக் கோட்டையின் 2-வது வாசலில் பயணிகள் பீரங்கி குண்டுகள் தாக்கிய அடையாளங்களைக் காணலாம். இந்தக் கோட்டையின் ஒரு பகுதி தற்போது மியூசியமாக மாற்றப்பட்டு இங்கு பலவிதமான ராஜபல்லக்குகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அது தவிர இந்த அருங்காட்சியகத்திலுள்ள 14 காட்சி அறைகளில் போர்க்கருவிகள், தளவாடங்கள் மற்றும் உடைகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படம் : Tim Dellmann

ஆக்ரா கோட்டை, ஆக்ரா
ஆக்ரா கோட்டை அல்லது செங்கோட்டை என்று அழைக்கப்படும் இந்த வரலாற்றுக்கோட்டை டெல்லியிலுள்ள செங்கோட்டைக்கு முன்னோடியாகும். வடிவவைப்பு மற்றும் கலையம்சங்கள் போன்ற யாவற்றிலும் ஒத்து காணப்படும் இந்தக் கோட்டைகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. பிறை நிலா வடிவில் யமுனை நதிக்கு எதிரே ஆக்ரா கோட்டை அமைந்துள்ளது.
படம் : Digvijay singh pundir

சித்தோர்கர் கோட்டை, சித்தோர்கர்
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் நகரில் அமைந்துள்ள இந்தக் கோட்டை 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்தக் கோட்டைதான் இந்தியாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படுகிறது. எனவே இக்கோட்டைக்கு செல்வதென்பது அவ்வளவு சுலபான காரியம் இல்லை. செங்குத்தான வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியே 2 கி.மீ தூரமாவது நடக்கவேண்டியுள்ளது.
படம் : Ssjoshi111

செங்கோட்டை, டெல்லி
டெல்லியின் அடையாளமாக திகழும் வரலாற்றுச்சின்னமான செங்கோட்டை, 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 2.41 கி.மீ நீளத்துக்கு நீண்டுள்ள இந்தக் கோட்டை, லாகூர் கேட் மற்றும் இந்தியா கேட் என்ற இரண்டு பிரதான வாயில்களை கொண்டுள்ளது. அதோடு சிவப்புக்கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தை கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகின் முக்கியமான ராஜகோட்டைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியக் கோட்டை திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.
படம் : Dennis Jarvis

ஜெய்சல்மேர் கோட்டை, ஜெய்சல்மேர்
‘ஜெய்சல்மேர் நகரின் மகுடம்' என்பதாக புகழுடன் அறியப்படும் ஜெய்சல்மேர் கோட்டை நகரின் மத்தியிலேயே அமைந்துள்ளது. இந்தக் கோட்டையின் மஞ்சள் பாறைக்கற்களால் ஆன சுவர் மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் பட்டு தங்க நிறத்தில் ஜொலிப்பதால் இது 'சோனார் குய்லா' ('தங்கக் கோட்டை') என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டையை விஜயம் செய்வதற்கான நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகும்.
படம் : Adrian Sulc

கோல்கொண்டா கோட்டை
கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்தக் கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத் தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது. இந்த வரலாற்று கோட்டை ஏராளமான வெளிநாட்டு பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகிறது.
படம் : Shantanu86

ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை, ஸ்ரீரங்கப்பட்டணா
ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை சுற்றுலாப்பயணிகள் அவசியம் காணவேண்டிய ஒரு வரலாற்று சின்னமாகும். காவேரி ஆற்றின் நடுவே ஒரு தீவில் அமைந்துள்ள இந்த கோட்டை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அறியப்படுகிறது. இக்கோட்டையில் காணப்படும் சதுர்விம்சதி எனப்படும் தூண்களில், பயணிகள் விஷ்ணுவின் 24 அவதாரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மேலும் கோட்டையின் அடித்தளத்தில் இருட்டறைகள் காணப்படுகின்றன. இவை அதக் காலங்களில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
படம் : Shijiltv

குவாலியர் கோட்டை, குவாலியர்
இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சீன டிராகன் உருவங்கள் அக்காலத்தில் நிலவிய இந்திய சீன உறவுக்கு சான்றாக விளங்குகின்றன. அதோடு ஜான்ஸியின் ராணி லட்சுமி பாய்க்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரின் களமாக குவாலியர் கோட்டை திகழ்ந்தது.
படம் : Dayal, Deen

காங்க்ரா கோட்டை, காங்க்ரா
ஹிமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா நகரில் பங்கங்கா மற்றும் மஞ்சி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் காங்க்ரா கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை பற்றி மஹாபாரதத்திலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டருடைய பயணக் குறிப்புகளிலும் குறிப்புகள் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
படம் : Vssun

பன்ஹாலா கோட்டை, பன்ஹாலா
மகாராஷ்டிர மாநிலத்தின் பன்ஹாலா நகரத்தில் போஜ ராஜாவால் சுமார் 900 வருடங்களுக்கு முன்பு 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது பன்ஹாலா கோட்டை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டை அதன் இரட்டைச்சுவர் அமைப்பு கொண்ட வாசல் வழியாக மட்டுமே நுழையும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை சுற்றிப்பார்க்கும் அனுபவம் நம்மை அக்கால மராத்திய ஆட்சியாளர்கள் காலத்துக்கு அழைத்துச்செல்கிறது.
படம் : Nilesh2 str



Click it and Unblock the Notifications



