Search
  • Follow NativePlanet
Share
» »மார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் மார்கோ நகரம் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கடற்கரைகளின் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. மேலும் தேவாலயங்கள், கோயில்கள், 'ஷியா இமாம் இஸ்மாயிலி கோஜா ஜமட்கனா' மற்றும் 'அக்குவெம்' மசூதிகள் போன்ற புனித ஸ்தலங்களுக்காகவும் மார்கோ நகரம் பயணிகளிடையே பிரபலம். மார்கோ நகரம் பெநொவ்லிம், கோல்வா, வர்கா, பீட்டல் மற்றும் மஜோர்டா கடற்கரைப் பகுதிகளிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

மார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Sharat Chandra

இந்தக் கடற்கரைகள் அனைத்தையும் ஒரே நாளில் கால் நடையாகவே சென்று சுற்றிப் பார்த்து விடலாம். இந்தப் பகுதிகளில் உள்ள குடில்களில் நீங்கள் கோவான் உணவு வகைகளை ருசி பார்க்கலாம். அதோடு பீட்டல் கடற்கரைக்கு அருகில் உள்ள மீனவத் துறை என்ற பகுதிக்கு சென்று கட்டுமர சவாரி போன்ற நீர்விளையாட்டுகளில் ஈடுபடுவதும், அசல் கடல் உணவை உண்டு மகிழ்வதும் அலாதியான அனுபவம். மார்கோ நகருக்கு வெகு அருகிலேயே தாஜ், லீலா, ஹயாத், ஹாலிடே இன் போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன.

மேலும், இங்கு நீங்கள் ஷாப்பிங் செல்ல விரும்பினால் ஓசியா ஷாப்பிங் மால் என்ற புகழ்பெற்ற வணிக வளாகம் உள்ளது. மார்கோ நகரம் தபோலிம் விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அதுமட்டுமல்லாமல் மார்கோவிலேயே ரயில் நிலையம் இருப்பதால், அங்கிருந்து மார்கோ நகரை அடைவதுதான் சுலபமான காரியம். அதோடு வாஸ்கோடகாமா மற்றும் பனாஜியிலிருந்து மார்கோ நகருக்கு காரில் வரும் அனுபவம் சிறப்பாக இருக்கும்.

'பால் கடல்' எனும் பெயரை இந்த தூத்சாகர் அருவிக்கு யார் சூட்டினார்களோ தெரியவில்லை, ஆனால் இதன் பெயருக்கு ஏற்றார் போலவே இந்த அருவி மகாசமுத்திரம் போன்று ஒங்காரமிட்டவாறு சீறிக்கொண்டு மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகு காணக்கிடைக்காத காட்சி. இந்த கவின் கொஞ்சும் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.

மார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Amey Hegde

தூத்சாகர் அருவிக்கு அருகே காணப்படும் அடர்ந்த வனத்தினுள்ளே அமைந்திருக்கும் ஏரி ஒன்றில் முன்னொரு காலத்தில் அழகான ராஜகுமாரி ஒருத்தி தினமும் நீராடி வந்தாள். அப்படி ஒரு நாள் அவள் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும்போது ராஜகுமாரன் ஒருவன் அவள் நீராடும் அழகை மறைந்திருந்து ரசித்து கொண்டிருந்தான். இந்தக் காட்சியை கண்ட ராஜகுமாரி பாலினை போன்ற ஏரி நீரினை ஒரு குவளையில் எடுத்து தன்னை மறைத்தவாறு தனக்கு முன்னே ஊற்றலானாள். அந்த நீரானதுதான் தற்போது மலையுச்சியிலிருந்து கொட்டிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி கோவா வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அருவியின் கம்பீரத்தையும், பேரழகையும் பரிபூரணமாக கண்டு ரசிக்க நீங்கள் மழைக் காலத்தில் வருவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அருவியை நோக்கிச் செல்லும் சாலை மழைக் காலங்களில் மூடப்பட்டிருப்பதோடு, அக்டோபர் மாதத்திற்கு பின்புதான் திறந்துவிடப்படும். அதோடு அருவியின் கீழ்ப்பகுதியில் காணப்படும் குளம் சற்று ஆபத்தானதாக தோன்றினாலும் யார் வேண்டுமானலும் அதில் நீராடி மகிழலாம். மேலும் தூத்சாகர் அருவி பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்துக்குள், அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இப்பகுதியில் பல்வேறு வகையான விலங்கினங்கள், தாவரயினங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

தூத்சாகர் அருவியை ரயில் மூலமாக சுலபமாக அடையலாம். இந்த அருவியின் அருகாமை ரயில் நிலையமாக கால்லெம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. அதோடு கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் தூத்சாகர் அருவியை அடைய முடியும். மேலும் தூத்சாகர் செல்லும் சாலை காட்டு வழியாக இருப்பதாலும், பல இடங்களில் சாலையை நதி கடந்து செல்வதாலும் கார் போன்ற வாகனங்களில் தூத்சாகர் அருவிக்கு பயணிப்பது ஆபத்தில் முடியலாம். தூத்சாகர் அருவியை தேடி எண்ணற்ற டிரெக்கிங் பிரியர்கள் வந்து செல்கின்றனர். எனவே இங்கு டிரெக்கிங் செல்பவர்கள் தங்கி ஓய்வெடுக்க சில தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மார்கோ நகரில் அமைந்திருக்கும் ஹோலி ஸ்பிரிட் தேவாலயம் 1564-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. எனினும் இஸ்லாமிய படைகளுடன் நடந்த கடும் போரின் விளைவாக 1571-ஆம் ஆண்டு தேவாலயம் முழுவதும் இடிந்து போயிற்று. அதன் பிறகு நிலைமை சீரான பிறகு, மறுபடியும் இந்த தேவாலயம் 1645-ஆம் ஆண்டு புதிக்கப்பட்டது. ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் நடக்கும் திருவிழாவும், கூட்டுப்பிரார்த்தனையும் மார்கோ நகரம் முழுக்க பிரபலம். அதுமட்டுமில்லாமல் கோவா நகரம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் தவறாமல் இந்தத் திருவிழாவில் வந்து கலந்து கொள்வார்கள். இந்தத் திருவிழா பொதுவாக 5 அல்லது 6 நாட்கள் வரை நடைபெறும்.

ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தின் உயரமான கோபுரங்களும், தூய வெண்ணிற முகப்புத் தோற்றமும், உட்புறத்தில் காணப்படும் ஸ்படிக அலங்காரங்களும் பரோக் கட்டிடக் கலையின் பாதிப்பில் உருவானவைகள். அதோடு நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூஜை மாடங்களும், மிகப்பெரிய ஆலய விதானமும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். இந்த ஆலயத்தின் சுற்றுப்பகுதிகளில் 3000 கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மேலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு புனித யாத்ரிகர்களும், பயணிகளும் வந்து கொண்டே இருப்பார்கள்.

எனவே எப்போது பார்த்தாலும் இந்த தேவாலயத்தில் கூட்டம் ஜேஜேவென்று இருக்கும். பனாஜி மற்றும் வாஸ்கோவிலிருந்து பேருந்துகளும், வாடகை கார்களும் அதிக எண்ணிகையில் மார்கோவுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கேண்டலிம், பாகா, கலங்கூட் போன்ற வடக்கு கோவா பகுதிகளிலிருந்து ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்துக்கு வருபவர்கள் சற்று நீண்ட பயணத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அந்த பயணம் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் நேரம் இருந்தால் நீங்கள் மார்கோவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று சுற்றிப் பார்க்கலாம்.

Read more about: goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X