கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகள் சிந்து ஆறு, சட்லெச்சு ஆறு, பிரம்மபுத்திரா ஆறு ஆகியவையாகும். இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
கையிலை மலை இந்துக்கள், போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல நம்பிக்கைகள் உள்ளன. வாருங்கள் இந்த கைலாச மலைக்கு எப்படி செல்கிறார்கள் என்பதை காண்போம்.
பதினைந்து நாள்கள் பயணம்
இந்த பயணம் மொத்தம் 15 நாட்கள் கொண்டது. காத்மண்ட்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையமான திரிபுவனிலிருந்து ஆரம்பிக்கும் இந்த பயணம் மீண்டும் இந்த விமான நிலையத்தை அடைவதில் முடிகிறது. அதற்கு முன் நீங்கள் உங்கள் பகுதியிலிருந்து இந்த விமான நிலையத்தை அடையவேண்டும். சென்னையிலிருந்து காத்மண்டுவுக்கு 6 மணி நேர பயணத்தில் செல்லும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இடையில் டெல்லியில் ஒரு நிறுத்தம் இருக்கும். மேலும் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய இடங்களிலிருந்தும் இந்த விமான சேவைகள் இருக்கின்றன.
சென்னையிலிருந்து செல்லும் விமான கட்டணம் 8 ஆயிரம் வரை இருக்கும்.
சுற்றுலா தொடங்கும் முன்பு தெரிந்துகொள்ளவேண்டிய சில விசயங்கள்
மொத்தமுள்ள 53 கிமீ தூரத்தில் 38 கிமீ தூரம் நடை பயணமாக செல்லவேண்டும். அதிக பட்சம் குதிரையில் செல்லலாம். அதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளும் இல்லை.
இங்கு செல்ல இந்திய அரசாங்கம் அனுமதி வேண்டும். அவர்கள் அனுமதிக்கும் வயது 12 முதல் 65 வரை. நிச்சயமாக பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும்.
60 வயது வரையுள்ள மக்கள் மட்டுமே கோராவுக்கு பயணிக்க அனுமதி, அதற்கு மேல் இருப்பவர்கள் யாம்ட்வர் வரைதான் அனுமதி.
உங்களுக்கு எந்த வித உடல் நல சான்றிதழ்களும் தேவையில்லை. ஆனால் நிச்சயம் உடல் தகுதி இருந்தால் மட்டுமே இந்த பயணத்தை நீங்கள் தொடரமுடியும்.
உங்கள் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லும்படியாக இருக்கவேண்டும்.
பசுபதி நாத் கோவிலுக்கு நீங்கள் சென்று இறைவன் அருள் பெறலாம்.
நாள் 1 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
காலை உணவுக்கு பிறகு, நீங்கள் பசுபதி நாத் கோவிலுக்கு செல்லலாம். மேலும் பௌத்தாநாத் ஸ்தூபாவுக்கும் நீங்கள் சென்று வரலாம். இந்த பயணம் மிகவும் மகிழ்ச்சியாகவும், எதிர்பார்ப்பு நிறைந்ததுமாக இருக்கும். உங்கள் பயணம் பற்றி உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். அதன்பின்னரே இந்த பயணத்தை நீங்கள் தொடர்வீர்கள்.
நாள் 2 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
நேற்றே இந்த சுற்றுலா தொடங்கிவிட்டாலும், கைலாயம் செல்வதற்கான சுற்றுலா இப்போதுதான் தொடங்குகிறது. காத்மண்டுவிலிருந்து ஷிப்ருபேஸி வரை வாகனத்தில் பயணிக்கவேண்டும். மொத்தம் 117 கிமீ.
காலை உணவுக்கு பிறகு காத்மண்டுவிலிருந்து திபெத்துக்கு செல்லும் இந்த பயணம் தொடங்கும். தனியார் வாகனம் அல்லது ஜீப் போன்ற வாகனத்தில் உங்களை அழைத்துச் செல்வார்கள். 6 முதல் 8 மணி நேர பயணத்துக்கு பிறகு நீங்கள் கலிகிஸ்தான், ராம்ச்ஸ டுன்ச் வழியாக ஷிப்ருபேஸியை அடைவீர்கள். இந்த இடத்தில் நிறைய உணவு விடுதிகளைக் காண முடியும். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு, ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். பின் அந்த நாளை அந்த இடத்திலேயே கழிக்கவேண்டும். அருகில் இருக்கும் இடங்களுக்கும் சென்று வரலாம்.
நாள் 3 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
திமுரேக்கு செல்வோம். காலை உணவை முடித்துக்கொண்டு திமுரே நோக்கி பயணிக்க வேண்டும். கேட் கோலா எனும் இடத்தில் இருக்கும் நேபாள நாட்டு அலுவலகத்தில் உங்கள் பாஸ்போர்ட் உடமைகளை சோதிப்பார்கள். பின் அங்கிருந்து சுற்றுலாவை தொடர்வோம்.
நேபாளம் திபெத் எல்லையில் இருக்கும் ராசுவாகடி எனும் இடம் ஷிப்ருபேஸியிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் நட்பு பாலத்தை கடந்ததும் திபெத் நாட்டு அலுவலகத்தில் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவை சோதிக்கப்படும். அங்கு கைலாய மலை செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். இங்கிருந்து கெருங் நகரம் செல்வதற்கு வேன் அல்லது ஜீப் வசதி செய்து தரப்படும். மேலும் இது 24 கிமீ பயணம் ஆகும். அங்கு தங்கும் விடுதிகள் கிடைக்கும். மலைப் பயணம் என்பதால் நீங்கள் மிகவும் சோர்வடைவீர்கள். இதனால் தொடர் பயணம் இல்லாமல், சற்று ஓய்வு கொடுக்கப்படுகிறது. அப்போது உங்கள் உடல் அடுத்த பயணத்துக்கு தயாராகும்.
நாள் 4 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
கெருங் நகரத்திலிருந்து சாகா எனும் இடத்துக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அது 400 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இடமாகும். இந்த பயணம் மொத்தம் 6 முதல் 7 மணி நேரம் எடுக்கும். இந்த பயணத்தின் இடையில் சோ ஏரி மற்றும் உப்பு ஏரி ஆகியவை காணப்படுகின்றன. இவை காண்பதற்கு அழகாக இருக்கும்.
மேலும் இங்கு உயிரினங்கள் முற்றிலும் வித்தியாசமானதாகவும் காணப்படும்.
பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்து சென்று திபெத்தியநகரம் சாகாவை அடையலாம். இங்கு நீங்கள் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம். அதிக வசதிகள் கொண்ட நகரம் இதுவாகும்.
நாள் 6 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
ஐந்தாவது நாள் இந்த பயணத்தின் ஓய்வு நாள். என்னதான் இரவு முழுவதும் ஓய்வு எடுத்தாலும், நமக்கு இந்த நாள் முக்கியமாக தரப்படுவது நம் உடல் நிலை சீரடைவதற்காக என்று கூறப்படுகிறது.
6 வது நாளில் மானசரோவர் ஏரியை நோக்கி நம் பயணத்தை தொடங்கவேண்டும். இங்கிருந்து 6 முதல் 7 மணி நேர பயணத்தில் 470 கிமீ தொலைவு தாண்டி இருக்கும் இந்த ஏரிக்கு செல்லவேண்டும். மிகவும் ஜாலியாகவும், புத்துணர்ச்சியாகவும் இந்த பயணம் இருக்கும். குளிர் உங்களை பாதிக்காத வண்ணம் தற்காத்துக்கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட மானசரோவர் ஏரியை அடையும் போதே இந்த கைலாய மலையை நீங்கள் காணமுடியும். முன்னதாக மதிய உணவை முடித்துக்கொண்டு பயணிக்கவேண்டும்.
நாள் 7 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
மானசரோவரில் குளிக்கலாம் வாங்க. அட குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் பலர் இங்கு குளிக்கிறார்கள். இங்கு குளிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாவதாக நம்புகிறார்கள்.
மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு டார்ச்சென் நோக்கி பயணிக்கிறோம் நாம். அங்கு விருந்தினர் மாளிகை ஒன்றில் நாம் தங்கலாம்.
நாள் 8 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
டார்ச்செனிலிருந்து எமத்வாருக்கு பயணிக்கவிருக்கிறோம். இதுதான் நம் 8 வது நாள் சுற்றுலா. இங்குதான் மரண கடவுளின் வாசல் இருப்பதாக நம்பப்படுகிறது. இறந்த பின் நரகத்துக்கு வருபவர்கள் இங்குதான் இருப்பார்களாம். காலை உணவு உண்டபின் நம் பயணத்தை துரிதப் படுத்தவேண்டும். 6 மணி நேர தொடர் நடை பயணத்துக்கு பிறகு திராபுக்குக்கு செல்லமுடியும். இங்கு சிவபெருமான் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.
நம்முடைய சுமைகளை எருதுகள் தாங்கி வரும். இங்கு செல்வது நன்கு குளிராக இருக்கும் என்றாலும் மிகவும் அழகான பயணம்.
நாள் 9 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
திராப்புக்கிலிருந்து ஜுதுல்புக் 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 5636மீ உயரத்தில் இருக்கும் டோல்மா லா எனும் கணவாயை கடக்கும் இந்த பயணம் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். இந்த இடத்தில்தான் கணிக்கமுடியாத பனிப் புயல்கள் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் உருவாகும். கௌரி குந்த் ஏரியும் இங்கு அருகில் காணப்படும் ஒரு இடமாகும். தோர்மா லா கணவாயை கடக்கும் வரை நாம் சில பல உயரங்கள் நடந்தே கடக்கவேண்டியிருக்கும். ஜுதுல்புக்கை அடைந்தபிறகு அங்கு அந்த நாளை கழிக்கலாம். நடைபயணம் மிகவும் கடினமானதாக இருப்பதாலும், மேலும் உடல் சோர்வாக இருப்பதாலும் இந்த ஓய்வு நமக்கு தேவை.
நாள் 10 | கைலாயம் பயணம் | எப்படி செல்வது?
ஜூதுல்புக்கிலிருந்து மானசரோவர் ஏரிக்கு பயணம் செல்வது 3 மணி நேரம் பயணிக்கும் தூரமாகும். நதிக் கரையில் இரவு காணும் நிலவு மிகவும் அழகானதாகவும் பூரிப்பூட்டும் வகையிலும் அமைந்திருக்கும். மானசரோவர் ஏரி முழுவதும் இருக்கும் நீர் புனிதமானதாக நம்பப்படுகிறது.
மானசரோவரிலிருந்து சாகா நோக்கி பயணிக்கும் திட்டத்தை அடுத்து செயல்படுத்தலாம். அங்கு அன்றிரவு முழுவதும் தங்கிவிட்டு அடுத்த பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். பிரயாங்க, டோங்க்பா, சாகா ஆகிய இடங்கள் மிகவும் அழகானதாகவும் விருப்பமிக்கதாகவும் இருக்கும்.
அடுத்தடுத்த நாட்களில் எங்கெல்லாம் செல்லலாம்
சாகாவிலிருந்து கெருங்க் 7 முதல் 8 மணி நேர பயணமாகும். இது திபெத்தின் கெருங்க்கில் இரவு கழிப்பதுடன் அன்றைய நாளை பூர்த்தி செய்கிறது. அடுத்தநாள் கெருங்கிலிருந்து காத்மண்டு செல்லலாம். காலை உணவுக்கு பிறகு இப்படி பதினைந்து நாட்களில் சுற்றுலாவை நிறைவு செய்து காத்மண்டு சென்றடையலாம்.அங்கிருந்து உங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிவிடலாம்.