சென்னையிலிருந்து வார இறுதிகளில் 'மினி கோவா' என்றழைக்கப்படும் புதுச்சேரிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து கடலூருக்கு பெருங்குடி, மகாபலிபுரம், பாண்டிச்சேரி வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை விரைவில் அமையவிருக்கிறது!
சென்னை to கடலூர் புதிய ரயில் பாதை
சென்னையிலிருந்து கடலூர் வரையிலான ECR ரயில் திட்டம், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரையில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்வேயால் உருவாக்கப்பட்ட ஒரு லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். முழு பாதையும் பின்னர் செயல்படுத்தப்படும் என்றாலும், சென்னையில் இருந்து கடலூர் வரை 179 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.523 கோடியில் பாதை அமைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
பயண நேரத்தை குறைக்கப்போகும் புதிய ரயில் பாதை
ஏற்கனவே செயலில் இருக்கும் சென்னை எழும்பூர்-விழுப்புரம்-புதுச்சேரி வழியாக நடப்பு ரயில் பாதையில் புதுச்சேரியை அடைய ஐந்து மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த புதிய ரயில் பாதை நடைமுறைக்கு வந்த பின்னர், ஐந்து மணி நேரத்துக்குப் பதிலாக இரண்டு மணி நேரத்தில் புதுச்சேரியை பயணிகள் அடைய முடியும்.

பயணிகள் மகிழ்ச்சி
சென்னை கடலூர் திட்டத்தின் தொடக்கப் பகுதி பெருங்குடியில் இருந்து செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், விழுப்புரம் வழியாகச் செல்லும் சுற்றுப் பாதையுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரி மற்றும் கடலூருக்குப் பயணம் செய்யும் நேரத்தை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை-கடலூர் வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
பெருங்குடியில் மற்றொரு ரயில் நிலையம்
சென்னை பெருங்குடியில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையின் வலது புறத்தில் இந்த ரயில் பாதை அமையும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் வரை இணைப்பு ரயில் பாதை அமைக்கப்படும். பயணிகள் ரயில்கள் பெருங்குடி வழியாகவும், சரக்கு ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவும் இயக்கப்படும். பெருங்குடி அருகே மற்றொரு ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ரயில் பாதை
யுனெஸ்கோவால் அங்கீரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களை உள்ளடக்கிய மாமல்லபுரத்திற்கு ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாமல்லபுரத்திலிருந்து அவர்கள் அப்படியே பிரெஞ்சு காலனித்துவம், கடற்கரைகள், கபேக்கள், பார்ட்டிகள் அடங்கிய துடிப்பான புதுச்சேரியை காணவும் செல்கின்றனர். எங்கிருந்தும் சென்னைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சென்னை to கடலூர் ரயில் பாதை மிகவும் உபயோகமாக இருக்கும் தானே.
சாலை விபத்துக்கள் குறையும்
சென்னையிலிருந்து கடலூருக்கும், கடலூரில் இருந்து சென்னைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக வேலை நிமித்தமாக கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே பெருவாரியான மக்கள் பயணிக்கின்றனர். அதனால் தினமும், இப்பகுதி போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதோடு, சாலை விபத்துக்களிலும் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்கிறது. ரயில் பாதை வந்துவிட்டால் தினமும் இரு இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகள் ரயிலை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைவில் துவக்கம்
சென்னை - புதுச்சேரி இடையே சர்வே பணி 80 சதவீதவீம் முடிந்த பின்னர், புதுச்சேரி கடலுார் வரையிலான 22 கி.மீ துார ரயில் பாதைக்கு சர்வே செய்யப்பட்டது. ஆனால், ரயில் பாதை குறுக்கிடும் இடங்களை மறு ஆய்வு செய்ய, ரயில்வே துறைக்கு புதுச்சேரி மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதனையும் ஏற்று ரயில்வே நிர்வாகம் சர்வே பணியை முடித்த நிலையில், பணிகள் கடந்த 2018 மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதன் பின்னர் இப்பொழுது தான் பணிகளை விரைந்து முடிக்க மறு உத்தரவு போடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





