இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பிரயாணம் செய்கின்றனர். ஆனால் ஒரு நீண்ட பயணமாக இருக்கும் சமயத்தில் உணவுக்கு சற்றே சிரமப்படுகிறோம்! அதுவும் குறிப்பாக உணவு பிரியர்கள், குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் உடன் இருந்தால், சொல்லவே வேண்டாம். ஆனால் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் பிராந்திய உணவுகளில் இருந்து, சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு என பல்வேறு மாறுதல்களுடன் மெனுவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செய்தி கேட்ட பயணிகளும் பொது மக்களும் இதனை வெகுவாக வரவற்றுள்ளனர். அதனைப் பற்றிய முழுத் தகவல்கள் கீழே!

அட்டகாசமான மெனுவை அறிமுகப்படுத்தப்போகும் IRCTC
ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனுக்கு (IRCTC) அனுப்பிய குறிப்பின்படி, "ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, பிராந்திய உணவு வகைகள், பருவகால சுவையான உணவுகள், பண்டிகைக் கால உணவுகள், பல்வேறு விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பொருட்களை உள்ளடக்கும் வகையில் மெனுவைத் தனிப்பயனாக்க IRCTC க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" அதன்படி இனி சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள், ஆரோக்கிய உணவு சாப்பிடும் பயணிகளுக்கான தனி தனி விருப்பங்களை இனி நாம் ரயில்களில் காணலாம்.

பிராண்டட் உணவுப் பொருட்களும் கிடைக்கும்
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணிக்கும் பயணிகள் பிராந்திய உணவுகள் பற்றாக்குறை குறித்து அடிக்கடி புகார் கூறுவதால் இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, ரயில்களில் உள்ள மெனுக்கள் சேருமிடங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படும். மேலும், ப்ரீ-பெய்டு ரயில்கள் MRP மற்றும் a-la-carte உணவுகளில் பிராண்டட் உணவுப் பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் பயணிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை
ப்ரீபெய்டு ரயில்களின் மெனுவை மாற்ற IRCTC அனுமதி கிடைதிருந்தாலும், பயணிகளுக்கான பட்ஜெட் பிரிவு மெனுவில் எந்த மாற்றமும் இல்லை என IRCTC கூறியுள்ளது. அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் IRCTC யின் மெனு முன்பு போலவே இருக்கும். ஜனதா போஜனின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு பூரி சப்ஜி, ஊறுகாய், தேநீர் பேக்கேஜ் வழங்கப்படும். மறுபுறம், ரயிலில் நிலையான மெனுவைத் தவிர வேறு உணவை யாராவது ஆர்டர் செய்தால், அதன் மெனு மற்றும் விலையை IRCTC தீர்மானிக்கும் என தெரிய வந்துள்ளது.

தரத்தில் எந்த வித குறையும் இருக்காது
மெனுவில் மாற்றங்களைச் செய்யும்போது, உணவின் தரத்தில் எந்த விதத்திலும் சமரசம் செய்ய மாட்டோம் என்று IRCTC தெரிவித்துள்ளது. இதனுடன், சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதனுடன், கட்டணத்தின் படி மெனு இருக்கும் என்றும், எந்த மாற்றத்திற்கும் முன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
இனி பயணிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப இரயில்களில் பலவிதமான சுவையான உணவு வகைகளை விரைவில் உண்ணலாம் பயணிகளே!



Click it and Unblock the Notifications



