இந்தியாவில் பாரம்பரிய நடனங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் நவீன குருகுலம் நிருத்ய கிராமமே ஆகும். இந்த தனித்துவமான நாட்டிய கிராமம் பெங்களூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், ஹெசர்கட்டாவுக்கு அருகில் அமைந்துள்ளது. நிருத்ய கிராமத்தை நிர்மாணித்தவர் இந்தியாவின் பிரபல ஒடிசி கலைஞர் ப்ரோத்திமா பேடி ஆவார். பாரதத்தின் பழைய குருகுல பாணியில் ஒரு நடன கிராமத்தை உருவாக்க எண்ணிய அந்த ஒப்பற்ற கலைஞரின் கனவு 1990-ல் நிறைவேறியது. இந்த நடன கிராமத்தை அப்போதைய பிரதமர் வீ.பி.சிங் அவர்கள் திறந்து வைத்தார். இங்கு வரும் பயணிகள் நிருத்ய கிராமத்தின் நடனக்குழுவையும், கிராமத்தின் எழில் தோற்றத்தையும் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள்.
அதோடு நிருத்ய கிராமத்தை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களின் இயற்கையான அழகுக்கு எவருமே அடிமையாக விடுவார். நிருத்ய கிராமத்தை வடிவமைத்தவர் இந்தியாவை சேர்ந்த பிரபல கட்டிடக் கலை நிபுணர் ஜெரார்ட் டா குன்ஹா. இதன் பசுமை, திறந்த வெளி, மண் வீடுகள் எல்லாம் சேர்ந்து நிருத்ய கிராமத்துக்கு ஒரு நாட்டுப்புற சாயலை கொடுத்திருக்கிறது. இங்கு வசந்த காலத்தின் வருகையை கொண்டாடும் விதமாக வசந்தஹப்பா என்ற கலைவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது உலகம் முழுவதிலுமிருந்து வரும் நடனக் கலைஞர்கள் நிருத்ய கிராமத்தின் ஏம்பி அரங்கத்தில் நடனமாடுவார்கள். நிருத்ய கிராமம் வரும் பயணிகள், அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெசர்கட்டா ஏரியை கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இந்த ஏரி இயற்கையாக உருவானதன்றி, மனித உழைப்பினால் உருவானது.1894-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இது 1124 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியின் முக்கிய நீர்தேக்கமாக விளங்கி வருகிறது.
நிருத்ய கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெசர்கட்டா ஏரிக்கு அருகில் பாரம்பரிய நடனக் கலைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் ஒடிசி குரு கெலுசரண் மொஹாபத்ராவின் உருவத்தோடு பலவிதமான அபிநயங்களை காட்டும் எண்ணற்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நிருத்ய கிராமத்தை நிர்மாணித்த ப்ரோத்திமா கௌரி பேடி அவர்களின் குருவான கெலுசரண் மொஹாபத்ரா, பாரம்பரிய நடனக் கலைஞராகவும், குருவாகவும் , ஒடிசி நடனக் கலையின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டவராகவும் அறியப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் ஜனவரி 8, 1926-ல் பிறந்த மொஹாபத்ரா 20-ஆம் நூற்றாண்டில், இந்திய பாரம்பரிய நடனக் கலைகளை மறுசீரமைத்த மகத்தான பணிக்காக புகழ்பெற்றவர். இவர் 2004 ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார்.
நிருத்ய கிராமத்தில் உள்ள பல்வேறு குருகுலங்களையும் ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர். கர்நாடகாவின் கலை மற்றும் கலாச்சார மையமாக திகழ்ந்து வரும் நிருத்ய கிராமத்தை 1990-ஆம் ஆண்டு, ஒடிசி கலைஞர் ப்ரோத்திமா கௌரி பேடி அவர்கள் நிர்மாணித்தார். இந்த கிராமம் ஒடிசி நடனத்துக்காக பெரிதும் அறியப்படுகிறது. நிருத்ய கிராமத்தில் நிறைய மண் வீடுகளும், அழகிய கோயில்களும், சில விருந்தினர் இல்லங்களும் இருக்கின்றன. இது தவிர ஒரே ஒரு யோகா மையமும் இருக்கிறது. நிருத்ய கிராமத்தில் ஒடிசி குருகுலம், மோகினிஆட்டம் குருகுலம் மற்றும் கதக் குருகுலம் ஆகியவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நடனங்களை தவிர பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக்களி மற்றும் மணிப்புரி போன்ற நடனங்களும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இதற்கான வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்ற ரீதியில் பாரம்பரிய குரு, சிஷ்ய முறையில் நடத்தப்படும்.