ஒட்டினன்னே அதனுடைய செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்தமன காட்சிக்காக மிகவும் பிரபலம். இங்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னணியில் பைந்தூர் ஆறு அரபிக் கடலில் கலக்கும் அற்புதக் காட்சியை பயணிகள் கண்டு ரசிக்கலாம். இதன் மழைக் காலங்களில் ஏராளமான அழகிய காட்டுப் பூக்கள் ஒட்டினன்னே முழுவதும் பூத்துக் குலுங்குவதால் பயணிகள் மழைக் காலத்தில் இங்கு வருவது பேரனுபவமாக இருக்கும்.
அரபிக் கடலின் அழகை ரசிக்க விரும்பும் பயணிகள் மரவந்தேவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடி கடற்கரைக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். கோடி என்றால் கன்னட மொழியில் கடற்கரை என்று அர்த்தம். இங்கு வரும் பயணிகள் கடலில் உல்லாசமாக நீந்துவது மற்றும் இதர பல நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை களிக்கலாம்.
மரவந்தே வரும் பயணிகள் சூரிய நகரம் என்று அழைக்கப்படும் குந்தபுராவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற குந்தேஸ்வரா கோயில் உள்ளது. இந்த நகரத்தை 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மற்றும் ஜேர்மன் நாடுகளை சேர்ந்த மதப் பிரச்சார குழுக்கள் நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பைந்தூர் மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய குந்தபுராவை, திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்கு பின் ஆங்கிலேயர்கள் நிரவகித்து வந்தனர். இதன் வடப்புறம் பஞ்சகங்கவலி ஆறும், கிழக்கில் கலகர் நதியும், மேற்கே அரபிக் கடலும் சூழ்ந்து இதை ஒரு தீபகற்பமாக மாற்றி இருக்கிறது. பயணிகள் இங்கிருந்து கொடி மற்றும் கங்கொல்லி கிராமங்களுக்கு படகுகள் மூலம் செல்லலாம்.