பச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது சுமார் 1110 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நாம் காணவேண்டிய முக்கிய தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான சட்புரா தேசிய பூங்கா, தூப்கார்க், தேனி நீர்வீழ்ச்சி, ஜடா சங்கர், மகாதேவோ கோயில், சவுராகர்க் சிகரம், பாடே மகாதேவ், பாண்டவா குகைகள், அப்சரா விகார், ரீச்கர், ராஜேந்திரகிரி சூரிய மறைவு முனை, டச்செஸ் நீர்வீழ்ச்சி, ஹான்டி கோ, பிரியதர்ஷினி முனை, பச்மர்ஹி சர்ச், பிசோன் லாட்ஜ் அருங்காட்சியகம், சோட்டா மகாதேவ், மகாதேவோ மலை, கிறிஸ்ட் சர்ச், ராஜாட் பிரபாட், போரி, வானசிரி விகார், நீர் குகை போன்றவை கட்டாயம் காணவேண்டிய இடங்களாகும். சரி இந்த கோடையில் எல்லா இடத்தையும் சுற்றிப்பார்ப்பதென்பது இயலாத காரியம். எனவே கோடைக்கு இதமான பச்மாரியின் முக்கிய சுற்றுலாத் தளங்களை மட்டும் காண்போமா?
பச்மாரி
பச்மாரி, பழங்குடி ராஜ்யமான கோண்ட் பழங்குடியின் தலைநகரமாக இருந்துள்ளது. கோண்ட் பழங்குடியின் மன்னராக பவூத் சிங் என்பவர் இருந்துள்ளார். பச்மாரி, 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்சித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் இங்கு நிகழ்ந்த நவீன மாற்றங்கள் அனைத்திற்கும் இவரே காரணமாக இருந்துள்ளார். அவரது ஆர்வமே இதனை மிக உயர்வான அந்தஸ்துடைய ஒரு மலை வாசஸ்தலமாக மாற்றியமைக்கக் காரணமாக இருந்துள்ளது. இது மத்திய இந்தியாவின் மிக உயரமான இடமாக இருப்பதினால், பிரிட்டிஷார் இதனை தங்கள் இராணுவ முகாமாக ஆக்கினர்.
பச்மாரி, 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பச்மாரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பச்மாரி சுற்றுலாத்துறை இங்கு வருவோர் கண்டு களிக்கக்கூடிய பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள துப்கார், விந்திய-சத்புரா மலைத்தொடரில் உள்ள உயரமான ஒரு இடமாகும். இது சாஸர் வடிவில் அமைந்த சுவாரஸ்யமானதொரு மலை வாசஸ்தலமாகும்.
இங்கு உள்ள இராணுவ முகாமிற்காகவும் மிகவும் பிரபலமாக உள்ள பச்மாரி, பழங்காலக் குகைகள், புராதனக் கட்டிடங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனப்பகுதி, செடியினங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்து காணப்படுகின்றது. மலைப்பாறைகள், அடர்பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடு, அலையலையாக விழும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் இதமான வானிலை ஆகியவை இதனை இயற்கை அன்னையின் உறைவிடமாகவே ஆக்கியுள்ளது.
சூரிய அஸ்தமனத்தை கண்டு களிப்பதற்கு பச்மாரி மிக உகந்த ஒரு ஸ்தலமாகும். ஹண்டி கோ, ஜடா ஷங்கர் குகை, பாண்டவா குகைகள், அப்ஸரா விஹார், தேனீ நீர்வீழ்ச்சி, டட்சஸ் நீர்வீழ்ச்சி ஆகியவை பச்மாரியின் சில பிரதான ஈர்ப்புகளாகும்.
Vu2sga
எப்போது, எப்படி செல்லலாம்?
வருடம் முழுவதுமே அற்புதமான வானிலையைக் கொண்டிருக்கும் பச்மாரிக்கு, எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனினும், அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள், இங்கு செல்வதற்கான மிகச் சிறந்த காலகட்டமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு நிலவும் இதமான வானிலை, பச்மாரியின் சுற்றுலாவை ஊக்கமுறச் செய்கிறது. இந்த மலை ஸ்தலத்துக்குச் செல்ல விரும்புவோர், போபால் வரை இரயில் அல்லது விமானம் மூலம் சென்று, பின் எஞ்சியிருக்கும் தொலைவை சாலை வழியாகக் கடக்கலாம்.
செங்குத்தான பள்ளத்தாக்கு ஒன்றிற்கு சில்லென்ற பயணம் போகலாம்
ஹண்டி கோ என்பது பச்மாரி வனப்பகுதியில் காணப்படும் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு அல்லது மலைக்கணவாய் ஆகும். சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் கடினமான பாறைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.
தனிமை சூழ்ந்த மனதுக்குகந்த இடமான இங்கு, தேனீக்களின் ரீங்காரம் மற்றும் அருவியின் ஓங்காரத்தை மட்டுமே கேட்க முடிகிறது.
இங்கு உலவும் நாட்டுப்புறக் கதையின் படி, ஹண்டி கோ பகுதியில் ஒரு ஏரி இருந்ததாகவும், அதனை தீயகுணம் படைத்த, விஷப்பாம்பு வடிவில் இருந்த அரக்கன் ஒருவன் காவல் காத்து வந்ததாகவும், ஒரு சமயம் சிவபெருமானுக்கும், அந்த அரக்கனுக்கும் இடையே நடந்த யுத்தத்தின் போது அந்த ஏரி வற்றி, அவ்விடத்தில் இந்த கணவாய் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
இது பானை வடிவில் இருப்பதினால் ஹண்டி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பச்மாரி மக்கள் இதனை அந்தி கோ என்று அழைத்து வந்தனர்; பின்னர் இப்பெயர் மருவி ஹண்டி கோ என்றழைக்கப்பட்டு வருகிறது. ஹண்டி கோ அதன் வியக்க வைக்கும் இயற்கை அழகிற்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
Dinesh Valke
பாண்டவா குகைகள் பற்றிய இந்த விசயம் தெரியுமா?
பச்மாரியிலுள்ள சிறு குன்றின் மேல் ஒரு குழுவாக அமைந்துள்ள ஐந்து குகைகளும் பாண்டவா குகைகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இக்குகைகளில் வந்து தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இக்குகைகள் அளவில் சிறியதாகவே காணப்படுகின்றன. இவற்றுள் பெரியதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் கூடியதாகவும் காணப்படும் ஒரு குகை திரௌபதி குடி அல்லது குகை என்று அழைக்கப்படுகிறது. மிகவும் நெரிசலாக இருளடைந்து காணப்படும் குகை, பீமா கோத்தாரி அல்லது குகை என்று அழைக்கப்படுகிறது.
1-ஆம் நூற்றாண்டில், புத்த பிக்ஷுக்களால் கட்டப்பட்ட இக்குகைகள், அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக தொல்பொருளியல் சான்றுகள் உரைக்கின்றன. ஆனாலும், உள்ளூர்வாசிகளிடையே பாண்டவர்கள் பற்றிய புராணமே மிகவும் பிரபலமாக உள்ளது. பச்மாரி செல்லும் எவரும் இங்கு கட்டாயமாகச் சென்று வர வேண்டும். பாண்டவா குகைகள் இயற்கையே மிக அழகாகச் செதுக்கியது போல் அமையப்பெற்றுள்ள குகைகளாகும்.
Sid Bhatnagar
பச்மாரியின் தேவதைக் குளம் பற்றி அறிவீர்களா?
சிறிய நீர்வீழ்ச்சியான அப்ஸரா விஹார், தான் விழும் இடத்தில் ஒரு ஆழமில்லாத குட்டையை உருவாக்குகிறது. இது தேவதைக் குளம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது நீச்சல், முக்குளித்தல், இயற்கையான திறந்தவெளி குளியல் போன்றவற்றில் பாதுகாப்பான முறையில் ஈடுபட்டுத் திளைக்க மிக அருமையான ஒரு இடமாகும்.
இந்த குட்டை ஆழம் அதிகமின்றி காணப்படுகிறது. அதனால் இது, குழந்தைகள் உடைய குடும்பத்தினர்கள் மிக விரும்பும் ஒரு சிறப்பான ஸ்தலமாகத் திகழ்கிறது. இந்த குளம், பாண்டவா குகைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த குளத்தின் பெயருக்குப் பின்னால் உள்ள கதை, சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளின் மனைவிமார்கள் இங்கு வந்து குளித்தபோது, உள்ளூர்வாசிகள் செடிகளுக்கிடையில் மறைந்திருந்து பார்த்ததாகவும், அப்போது அவர்களின் வெள்ளை வெளேரென்ற சருமத்தைப் பார்த்து அப்ஸரஸ்கள் என்றழைக்கப்படும் தேவகன்னிகைகள் தான் இங்கு இறங்கி வந்து குளிக்கின்றனரோ என்று அவர்கள் ஆச்சர்யப்பட்டு இதனை, தேவதைகளின் குளம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு அப்ஸரஸ் விஹார் என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. பச்மாரி வரும்போது, அப்ஸரா விஹாரில் நீராடும் சுகானுபவத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.
Devyaani Bhatnaga