உங்களுக்கு பேய் மேல நம்பிக்கை இருக்கா. இப்படி கேக்றவங்க எல்லார்கிட்டயும் அட போடா பேயாவது பிசாசாவது.. இந்த காலத்துல போயி இதையெல்லாம் நம்பிக்கிட்டுனு சொல்லிட்டு நீங்க வீட்டுக்கு போய்டுவீங்க. ஆனா இரவு வீட்டுல தனியா இருக்குற நிலைமை வந்தா.... அந்த நேரத்துல பாத்து பவர் கட் ஆனா... உங்க ஆறாவது அறிவும் கொஞ்சம் யோசிக்கும். ஒரு வேள பேய் உண்மைதானோ அப்படின்னு..
இந்த மாதிரி சென்னையில் பல இடங்களில் பேய் வந்ததாகவும், அத பாத்ததாகவும் பல பேர் சொல்றத நாம கேட்டிருப்போம். நம்ம பேய பாக்கலனாலும், நம்முடைய மிகுந்த நம்பிக்கைக்குரிய ஒருத்தர் பேய பாத்ததா சொல்லும்போது அத நம்பாம இருக்க முடிலதானே...
பெசன்ட் அவென்யூ சாலை
இந்த சாலை மிகவும் அமைதியானதாகவும், ஆள் நடமாட்டமற்றதாகவும் இருக்கும். பெசன்ட் அவென்யூ சாலை பேய் உலாவுகிற இடம் என்றும், இங்கு நிறைய அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் பலர் பேசி வருகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் மக்களுக்கு பயம் உருவாக்குவது போல மர்ம நிகழ்வுகள் திடீரென நிகழ்கின்றனவாம்.
ஆயிரம் பேர் சொன்னாலும், நம்ம கண்ணால பாக்குறவரைக்கும் பேய நம்ப போறது இல்ல. பேய் இருக்கா இல்லயா என்பது அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்
PC: Sankar Pandian
புளூ கிராஸ் ரோடு
சென்னையில் தற்கொலைச் சாலை என்று அழைக்கப்படுகிறது இந்த புளூ கிராஸ் சாலை. இந்த சாலை நிறைய தற்கொலைகள் நடந்துள்ளதாக காவல்துறை பதிவேடு தெரிவிக்கிறது.
ஆவிகள் அதிகளவில் உலாவும் சாலையாக இந்த புளூ கிராஸ் ரோடு உள்ளது. இந்த வழியில் யாராவது நடந்தோ, பைக்கில் சென்றாலோ, ஆவிகளின் குரல் உங்கள் மூளையை மழுங்க செய்து உங்களைத் தற்கொலைச் செய்யத்தூண்டும் என்கிறார்கள் இங்குள்ளவர்கள்.
சில நாள்களுக்கு முன்னர், அங்கு பைக்கில் சென்ற நபரிடம், ஒரு குரல் லிப்ட் கேட்டதாகவும், திரும்பி பார்க்கையில் யாரும் இல்லாததால் பயந்துபோன அந்த நபர், அதன் பின்னர் அந்த வழியில் செல்வதில்லை எனவும் கூறப்படுகிறது.
PC: Sunciti _ Sundaram
அடையாறு உடைந்த பாலம்
அடையாறு பாலம் பற்றிய கதை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இதுவரை இங்கு யாரும் இறந்ததாக ஆதாரம் இல்லை என்றாலும், அடிக்கடி மர்ம நிகழ்வுகள் நடப்பதாக கூறுகின்றனர் இங்கு வரும் இளைஞர்கள்.
பகலில் எந்தவித சலனமும் இன்றி காணப்படும் இந்த பாலம், இரவில் அமானுஷ்ய குரல் ஒலிக்கும் பாலமாக இருக்கிறதாம். சிலர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. காற்று எழுப்பும் ஒலிதான் இது என்கிறார்கள். இருந்தாலும், இந்த பக்கம் போனீங்கன்னா எதுக்கும் பாத்து போங்க
PC: PlaneMad.
சென்னை பெங்களூரு சாலை
இந்த சாலையில் பயணிப்பவர்கள் எதுக்கும் இந்த இடத்தை வேகமாக கடந்துவிடுவது நல்லது. ஒருவேளை நீங்களும் அந்த குரலைக் கேட்கலாம்.
சாலை விபத்தில் மரணமடைந்த ஒரு பெண், இரவு வேளைகளில் இந்த சாலையில் மர்ம நிகழ்வுகளை ஏற்படுத்துவதாக பலர் தெரிவிக்கின்றனர். இந்த சாலைகளில் செல்பவர்களை நோக்கி கையசைக்கு ஒரு பெண்ணின் உருவம், தன்னை நோக்கி வருமாறு அழைப்பதாக கூறுகின்றனர் இங்கு அனுபவம் பெற்றவர்கள்.
PC: Soham Banerjee
டிமான்டி காலனி
டிமான்டி காலனி என்ற பகுதியை நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பரிடம் கேளுங்கள். சென்னை செயின்ட் மேரி சாலையில் உள்ளது இந்த டி மான்டி காலனி.
அந்த காலனிக்குள் சென்ற விலங்குகள் திரும்பி வரவேயில்லயாம். ஒரு காவலாளியும் உள்ளே சென்று மாயமானதாக தகவல்கள் பரவியுள்ளன.
தமிழ் படத்தில் வருவது கற்பனை கதையல்ல.... அது நிஜமாகவே நடந்த நிகழ்வு என்கிறார்கள் சிலர். இந்த காலனியை ஜான் டி மான்டி என்பவர்தான் கட்டியுள்ளார். அவர்தான் பேயாக இருக்கிறார் என்றும், அவரால் கொலை செய்யப்பட்டவர்கள் தான் பேயாக இருக்கிறார்கள் என்றும் வேறு வேறு தகவல்கள் கிடைக்கின்றன.
பட்டபகலிலேயே பார்ப்பதற்கு படு பயங்கரமாக இருக்கும் பங்களாவுக்குள் இரவில் போக யார்தான் தயாராக இருப்பார்கள் ஏன் நீங்கள் தயாரா
கரிக்காட்டுக் குப்பம் கடற்கரை
2004ஆம் ஆண்டு வந்த சுனாமி, சென்னை உட்பட தமிழகக் கடற்கரையெல்லாம் சுத்தம் செய்து, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்னு கூட இரக்கமில்லாம எல்லாத்தையும் தூக்கி விழுங்கிடுச்சி. அப்பா, அம்மா, தம்பி, தங்கைனு எல்லா உறவுகளையும் இழந்து அனாதயா நின்னவங்க நிறைய பேரு.. அப்படி பாதிக்கப்பட்ட கடற்கரைகள்ல ஒன்னுதான் இந்த கரிகாட்டுக் குப்பம் கடற்கரை.
இந்த கடற்கரையில் தான் ஒரு முதியவர், தன் பேத்தியுடன் அமர்ந்திருந்ததாகவும், கொஞ்ச நேரத்துல மறஞ்சிட்டதாகவும் சொல்றாங்க. அவர்கள் சுனாமியால் இறந்தவர்களோட ஆவினு சொல்கிறார்கள் உள்ளூர் வாசிகள். தினமும் சரியாக மாலை 7 மணி அளவில் இந்த அமானுஷ்யங்கள் நிகழ்கிறதாகவும், அவர்கள் இருவரையும் பார்த்திருப்பதாகவும் நிறைய பேர் சொல்கிறார்கள்.
PC: sambath sathyan
மதராஸ் கிறிஸ்துவ கல்லூரி
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதிலும் ஒரு தலைக் காதல் அதிக ஆபத்தானது. ஒருதலைக்காதலால் செய்யப்படும் கொலைகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் ஒருதலைக் காதலால் தற்கொலை செய்து கொண்டதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் வந்தன. அதன்பிறகு அங்கு தினமும் அமானுஷ்யங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர் அங்கு பணிபுரிபவர்கள்.
தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞர், அதிகம் விரும்பும் இடங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் அந்த இடங்களுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கிறார் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர்.
PC: Tshrinivasan
வால்மீகி நகர்
வால்மீகி நகரில் கடந்த 10 வருடமாக பூட்டிக்கிடக்கும் ஒரு மர்ம வீடு உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாகவும், பயந்து போய் இரவு நேரங்களில் இந்த பகுதியை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்கின்றனர் அந்த வீட்டினருகில் வசிப்பவர்கள். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர், அந்த வீட்டு உரிமையாரின் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் ஆவி அந்த வீட்டையே சுற்றி சுற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.
பூட்டிக்கிடந்த வீட்டினுள் இருந்து அவ்வப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்பதாகவும், பெண் அழும் சத்தம் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் அக்கம்பக்கத்தினர். இரண்டு பேர் இதுகுறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ய வந்ததாகவும், அவர்களில் ஒருவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் , மற்றொருவர் ஊரை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார் என தகவல்கள் பரவியுள்ளன.
PC: Effulgence108