ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில் நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு மாநகராட்சியாகும். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவிலுள்ள முக்கிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஸ்ரீ காளஹஸ்தி எனும் பெயரில் ஸ்ரீ, காள மற்றும் ஹஸ்தி ஆகிய மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஸ்ரீ என்ற சொல் சிலந்தியையும், காள எனும் சொல் பாம்பையும், இறுதியாக வரும் ஹஸ்தி எனும் சொல் யானையையும் குறிக்கின்றன. இந்த கோயில் அருகே பல இடங்கள் கட்டாயம் செல்லவேண்டியவையாக உள்ளன.
ஸ்ரீ கண்ணப்பர் கோயில்
ஸ்ரீ கண்ணப்பர் கோயில் காளஹஸ்தி நகரத்தில் ஒரு சிறு மலையின் மீது அமைந்துள்ளது. இந்த கோயிலின் பின்னால் ஒரு பிரசித்தமான கதை சொல்லப்பட்டு வருகிறது. பக்த கண்ணப்பர் என்று அழைக்கப்படும் ஒரு தீவிர சைவ பக்தருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணப்பர் மஹாபாரத அவதாரமான அர்ஜுனனின் மறு அவதாரமாகவே கருதப்படுகிறார். அர்ஜுனர் தீவிர சிவபக்தர் என்பது மஹாபாரதத்திலேயே நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Polandfrighter
ஸ்ரீ துர்கா கோயில்
ஸ்ரீ துர்கா கோயில் எனப்படும் இந்த ஆலயம் சக்தியின் வடிவமான துர்க்கையம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடந்தோறும் ஈர்க்கிறது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வடக்காக 800 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின்மீது இந்த கோயில் அமைந்துள்ளது. அகலமான படிக்கட்டுகள் மூலமாக இந்த கோயிலுக்கு ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. துர்க்கா தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள சன்னதி மற்ற காளஹஸ்தி கோயில்களோடு ஒப்பிடும்போது மிகச்சிறியது என்றாலும் இந்த கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகளால் மிகவும் விரும்பி தரிசிக்கப்படுகிறது
రవిచంద్ర
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்
காளஹஸ்தியில் உள்ள இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் முருகக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிகச்சுலபமாக பக்தர்கள் சென்றடையலாம்.
ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை திருவிழா இந்த கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எட்டு நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவின்போது இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அச்சமயம் இக்கோயில் வண்ணவிளக்குகளாலும் மலர்களும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிப்பது மட்டுமல்லாமல் திருவிழாவின் கடைசி நாளில் முருகக்கடவுள் தன் துணைவியராண வள்ளி, தேவானையுடன் தேர் பவனி வரும் உற்சவமும் நடத்தப்படுகிறது.
உள்ளூர் முருக பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மத்தியில் இந்த ஆடிக்கிருத்திகை மிகப்பிரசித்தமாக அறியப்படுவதால் ஏராளமான பக்தர் கூட்டத்தை இந்த திருவிழாக்காலத்தின்போது காளஹஸ்தி நகரத்தில் பார்க்க முடியும்.
రవిచంద్ర
ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி ஆலயம்
காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி ஆலயம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய லிங்கத்தை கொண்டுள்ளது. நகரத்துக்கு அருகில் உள்ள சிறிய மலையில் இந்த ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி ஆலயம் வீற்றிருக்கிறது. புதையுண்டிருந்த இந்த புராதன கோயில் 1960ம் ஆண்டு ஒரு குடியானவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட அகழ்வுத்தோண்டலில் கருவறை மற்றும் மூலவரோடு கூடிய அமைப்பு முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது. 1200 வருடங்கள் பழமையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த கோயில் 1500 வருடங்கள் பழமையுடையது என்றும் உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது. காளஹஸ்தி நகர மையத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த கோயில் வீற்றிருக்கிறது. மற்ற கோயில்களோடு ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி கோயில் அதிக அளவிலான பக்தர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிறியக்கோயிலில் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் ஒரு சுவராசியமான அம்சமாகும்.
రవిచంద్ర
துர்காம்பிகா கோயில்
ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த துர்காம்பிகா கோயில் துர்க்காம்பிகைக்கான மிகப்பழமையான கோயிலாகும். பெரும்பாலான பெண் தெய்வங்கள் மலையில் வீற்றிருப்பது போல இந்த கோயிலும் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வடக்கே கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் ஒரு மலையின்மீது இந்த கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிற்காட்சிகள் நிறைந்த இடம் என்பதால் இந்த கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது.
அகலமான படிக்கட்டுகள் இம்மலைக்கோயிலின் அடிவாரத்திலிருந்து உச்சி நோக்கி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. ஆக்க சக்தியின் ரூபமாக கருதப்படும் இந்த துர்க்காம்பிகை பெண்தெய்வம் உள்ளூர் பக்தர்களால் பெரிதும் பூஜிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
రవిచంద్ర
பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோயில்
காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோயில் தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று எனும் புகழைக்கொண்டுள்ளது. உண்மையில் இது ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் ஒரு அங்கமேயாகும். இங்கு குடி கொண்டிருக்கும் வரதராஜ ஸ்வாமியை வணங்க ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் இங்கு விஜயம் செய்கின்றனர்.
రవిచంద్ర
புதையல்
சமீபத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது இந்த கோயில் அனைவரது கவனத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றபோது இங்கிருந்த ஒரு அறையில் ஒரு பெரிய மரக்கதவு கண்டறிப்பட்டது. இந்த கதவைத்திறந்து பார்த்தபோது உள்ளிருந்த இருட்டறைக்குள் பல விலை மதிக்கமுடியாத அரும்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இப்படி புதையல் கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போன்று பரவவே பொக்கிஷங்களை பார்க்கும் ஆர்வத்தில் பக்தர்கள் கோயிலை முற்றுகை இட்டனர். இருப்பினும் புதையலைப்பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Krishna Kumar
பரத்வாஜ தீர்த்தம்
காளஹஸ்தி கோயிலுக்கு கிழக்குப்பகுதியில் மூன்று மலைகளுக்கு நடுவில் இந்த பரத்வாஜ தீர்த்தம் அமைந்துள்ளது. திரேதா யுகத்தின்போது இந்த மலையில் தவம் புரிந்து வசித்ததாக சொல்லப்படும் பரத்வாஜ முனிவரின் பெயரினால் இந்த தீர்த்தக்குளம் அழைக்கப்படுகிறது. இந்த பரத்வாஜ தீர்த்தம் அமைந்திருக்கும் பள்ளத்தாக்குப்பகுதியானது பசுமையான மலைச்சூழலின் பின்னணியில் பளிங்கு போன்ற தெளிந்த நீருடன் பள்ளத்தாக்குப்பிரதேசத்தின் வழியே ஓடி வரும் நீரோடையுடன் காட்சியளிக்கிறது. இந்த அற்புதமான சூழலில் புனித நீராட்டுக்கான தீர்த்தக்குளத்தை உருவாக்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
రవిచంద్ర
சதுர்முகேஸ்வரா கோயில்
ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த சதுர்முகேஸ்வரா கோயில் சிவன் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கும் அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும். இந்த இரு கடவுளர்கள் குறித்த ஒரு புராணக்கதைக்காக பெயர் பெற்றுள்ள இந்த கோயில் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும்.
புராணிக ஐதீகக்கதைகளின்படி, பிரம்மாவின் ஆக்கும் சக்தியை மரத்துப்போக வைத்திருந்த சில பாவங்களை போக்கிக்கொள்ள இந்த ஸ்தலத்தில் அவர் கடும் தவம் இருந்ததாகவும், இறுதியில் சிவபெருமான் பிரம்மாவின் பாவங்களை போக்கி அருளியபின் பிரம்மா தனது உயிர்ப்படைப்பு தொழிலை தொடர்ந்தார் என்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோயிலின் சிறப்பம்சமாக இங்குள்ள சிவலிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளையும் நோக்கியவாறு உள்ளன. சதுர்முகம் என்பதற்கு நான்கு முகங்கள் என்பது பொருளாகும்.
சைவ மார்க்கத்தில் பற்றுடையவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த கோயிலுக்கு வருகை தருவதை வழக்காமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலின் சுவர்களின் சிவபெருமான் சம்பந்தப்பட்ட புராணச்சம்பவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
రవిచంద్ర
ஸ்ரீ காளஹஸ்தி
வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை. தெலுங்கு மொழியில் இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு" ஆயிரம் லிங்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு" என்பது பொருள்.
நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உள்ள மலைகள் சிவலிங்கங்கள் போன்று காட்சியளிப்பதே இப்படி ஒரு பெயர் ஏற்படக்காரணமாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காகவே ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர்.
தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வந்தால் சரும வியாதிகள் குணமாகும் என்று கருதப்படுகிறது. அது தவிர பாவங்களை கழுவும் தெய்வீக சக்தியும் இதற்கு உள்ளதாக ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.
Kalyan Kumar