திருவண்ணாமலை, அண்ணாமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆன்மீக நகரமாகும். இது சென்னைக்கு 195 கிமீ தொலைவில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த நகரம் திரினோமலை (Trinomali) என்றும், திரினோமலி (Trinomalee) என்றும் குறிப்பிடப்பட்டது. ஏராளமான ஆன்மீக யாத்ரீகர்கள் வந்து செல்லும் வகையில், புனித ஸ்தலமான அருணாச்சலேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்கள் மற்றும் சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சுரத்குமார், ரமண மஹரிஷி ஆசிரமங்களுடன் இந் நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சாலை வழியே செல்ல 4 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது.
திருவண்ணாமலைக்கு செல்ல உகந்த காலம்:
குளிர்காலமான அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உகந்த காலங்களாகும்.
சென்னை – திருவண்ணாமலை போக்குவரத்து வசதிகள்:
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர விமானப் போக்குவரத்து இல்லை. ஆனால் பஸ், ரயில் போக்குவரத்து தொடர்ச்சியாக உள்ளது. திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து மற்ற தென்னிந்திய முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் ரயில் இணைப்பு வசதிகள் உள்ளன. புதுச்சேரியிலிருந்து கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழியாக திருவண்ணாமலையை அடைவது மிகச்சுலபமான வழிமுறையாகும். திருவண்ணாமலை மற்றும் அருகே உள்ள பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்க்கும் வகையில் அங்கு, வாடகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாதாரண சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதே போல ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் பேருந்து வசதிகளும் உள்ளன.
PC: Thriyambak J.Kannan
சென்னையிலிருந்து, திருவண்ணாமலைக்கு செல்லும் வழித் தடங்கள்:
தடம் 1: சென்னை - செங்கல்பட்டு - திருவண்ணாமலை 195 கி.மீட்டர்கள். பயண நேரம் 4 மணி, 30 நிமிடங்கள்.
தடம்- 2: சென்னை - காஞ்சிபுரம் - சேத்துப்பட்டு -திருவண்ணாமலை. தூரம் 190 கி.மீட்டர்கள். பயண காலம் 5 மணி நேரம்.
தடம் - 3: சென்னை - வேலூர் - திருவண்ணாமலை. தூரம் 226 கி.மீட்டர்கள், பயண நேரம் 5 மணி 30 நிமிடங்கள்.
3 வழித்தடங்கள் இருந்தாலும் முதல் வழித்தடமான சென்னை-செங்கல்பட்டு வழியில் நேரம் குறைவதால் இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது.
பயணத் தொடக்கம் - சென்னை:
தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரம் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. அழகான, நீண்ட கடற்கரைகள் மற்றும் நகரில் உள்ள புகழ் பெற்ற பாரம்பரிய கோவில்கள், கேளிக்கை பூங்காக்கள், சொகுசான, ருசியான உணவு விடுதிகள், வசதியான நட்சத்திர ஓட்டல்கள் , பிரம்மாண்ட ஷாப்பிங் மால்கள், பாரம்பரியப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.
இடையில் மகிழ்வூட்டும் செங்கல்பட்டு:
சென்னையிலிருந்து 62 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது செங்கல்பட்டு நகரம். சென்னயிலிருந்து, 2 மணிநேரத்தில் செங்கல்பட்டை அடையலாம். வழியில் 2 பக்கங்களிலும் அழகான ஏரிகளும், புராதனக் கோவில்களும் ரசிக்கும் வகையில் உள்ளன. இங்கிருந்து சுற்றுலாத் தலமான மாமல்லபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிக அருகில் உள்ளன. இந்த நகரம் பிரன்ச் குடியேற்றப் பகுதியாகவும் இருந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக பல போர்களும் இங்கு நடந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கோவளம் படகுப் போக்குவரத்து, மெட்ராஸ் முதலைகள் பூங்கா, வல்லம் காப்புக்காடுகள் அருகே உள்ளன.
PC: Sarath Kuchi
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் :
செங்கல்பட்டிலிருந்து 132.5 கி.மீ தூரம் உள்ள திருவண்ணாமலையை 2 மணி நேரம் 30 நிமிடங்களில் அடையலாம். திருவண்ணாமலையில் பரந்து பட்டக் கோவில்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். திருவண்ணாமலை தென்னிந்தியாவின் கோவில் நகரம் என குறிப்பிடப்பப்படும் காரணம் கோவில் மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள பயணிகளைக் கவரும் இடங்களாகும்:
பிரம்மாண்ட மலையடிவாரத்தின் கீழ் 25 ஏக்கர் நிலப்பரப்பில், ஒன்பது உயர் கோபுரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவில் மற்றும் பிற கோபுரங்களை, சிறப்பாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இவை 10 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் செதுக்கப்பட்டுள்ளதாக இங்குள்ள பழங்கால கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்கோவில் 5 பஞ்ச பூத ஸ்தலங்களான நிலம், நீர், வாயு, வானம் மற்றும் அக்னி ஆகியற்றில் அக்னி ஸ்தலமாக குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் நடைபெறும் கிரி பிரதக்ஷணம், கிரிவலத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி வந்து இந்த ஆன்மீக நகரை பார்வையிடுகின்றனர்.
PC: KARTY JazZ
ரமணர் ஆஷ்ரம்:
ரமண மஹரிஷி என்ற ஒரு புகழ் பெற்ற துறவி கடந்த 20 ம் நூற்றாண்டில் இங்கு வசித்து வந்தார். தியானம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகளால் எளிமையான மற்றும் சிக்கலற்ற வாழ்க்கையை வாழ பக்தர்களுக்கு வழிவகுத்தார். 1950 களில் இவர் முக்தி அடைந்தார். இயற்க்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் அவரது சீடர்களால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. இப்பகுதி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
பீமன் நீர் வீழ்ச்சி:
திருவண்ணாமலை அருகே ஜமுனாமரத்தூரிலிருந்து, 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பீமன் நீர் வீழ்ச்சியில் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வரை குறைந்த சக்தியில் நீர் கொட்டுவதால் பலர் டைவ் அடித்து ஆனந்தமாக குளிப்பது வேடிக்கையான ஒன்று.
கொமுட்டேரி ஏரி:
ஜவ்வாது மலையில் உள்ள பிரபலமான கோலப்பன் ஏரி, கொமுட்டேரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தீவுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளுக்கினங்க படகுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இது ஏராளமான பயணிகளைக் கவர்ந்துள்ளது.
PC: Mohan Raj
காவலூர் தொலைநோக்கி மையம்:
ஜமுனாமரத்தூரிலிருந்து 11கிலோ மீட்டர் தொலைவில், வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள காவலூரில் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் பிரம்மாண்ட தொலை நோக்கி அமைந்துள்ளது. ஆசியாவிலே மிகப்பெரிய இத் தொலைநோக்கி விண்வெளி குறித்த ஆய்வுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
PC: Akarsh Simha
ஜவ்வாது மலை:
திருவண்ணாமலையிலிருந்து, 75 கி.மீ தொலைவில் உள்ள இம்மலை பிராந்தியத்தில் அமைந்துள்ள பீமன் நீர் வீழ்ச்சி, அமிர்தி காடு, இங்குள்ள கண்ணாடி வீடு, கொமுட்டேரி மற்றும் காவலூர் தொலைநோக்கி மையம் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய இடங்களாக இருப்பதால், இந்த இடங்கள் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
PC: Karthik Easvur
சாத்தனூர் அணை:
திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சென்னகேசவமலைப் பகுதியில், தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள அணை சாத்தனூர் அணை. அழகான நீர் தேக்கம், இங்குள்ள பசுமையான பூங்காக்கள், மிக உயர்ந்த மரங்கள், முதலைப் பண்ணையுடன் கூடிய சிறிய மிருக காட்சி சாலை சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சங்களாகும். .
படவேடு:
திருவண்ணாமலையில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள பூர்வீக கிராமமான படவேட்டில் பழமையான ரேணுகாம்பாள் கோவில் உட்பட பல கோவில்கள் உள்ளன. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களுடன் ஏற்பட்ட சண்டையில் அழிந்துபோன சம்புவராய மன்னர்களின் அரண்மனை இடிபாடுகளும் உள்ளன.
PC: Vinoth Chandar
நெடுங்குணம் ராமர் கோவில்
விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோவில் இந்த நெடுங்குணம் ராமர் கோவில். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய விஷ்ணு கோவில் இதுவே. இக்கோவில் குறைந்தபட்சம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது கட்டப்பட்ட பிறகு பல மன்னர்களால் மறுகட்டுமானம் செய்யப்பட்டது.
மாமர குகை
மாமர குகை என்பது கோவிலாக மாற்றப்பட்ட ஒரு குகை, இது திருவண்ணாமலை நகருக்கு அருகே இருக்கும் ஒரு இந்து கோவில்.
இந்த குகையில் இருந்து மேலே பாத்தால் ஒரு மாமரம் தென்படும். உள்ளூர் இந்து மக்களுக்கு இக்கோவில் அதிக சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மகான் ரமண மகாரிஷி இந்த குகையில் ஆறு ஆண்டுகள் தியானம் செய்தார். இக்கோவிலில் மூன்று சிலைகள் இருக்கின்றன. உலகத்தின் ஆண்டவராக கருதப்படும் விஸ்வநாதர் வடிவத்தில் சிவபெருமான் இக்கோவிலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
ஆனைமலை
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாகச் செல்லும் மேற்கத்திய மலைத்தொடரின் ஒரு பகுதி ஆனைமலை மலைகள். 'ஆனை' என்றால் யானை.
வனவிலங்குகள் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கு ஆணைமலை என்கிற பெயர் பொருத்தமானது. ஆணைமலை மலைகளின் உயரமான சிகரம் ஆணைமுடி, இது கடல்மட்டத்தில் இருந்து 2694 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த சிகரம் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது
விருபாக்ஷா குகை
பதினான்காம் நூற்றாண்டு முதல் இந்த விருபாக்ஷா குகை மத சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆரம்பத்தில் விருபாக்ஷ தேவா என்கிற மகான் மூலமாக புகழ்பெற்ற இந்த குகை, இக்காலத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் காரணமாக அவருடைய பக்தர்கள் இடையே சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.