செங்கண்ணச் சோழனுக்கும், கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னனுக்கும் பலத்த சண்டைகளுடன் கூடிய போர் நடந்த இடம்தான் திருப்பூர். இந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டவன் சேர மன்னன் இரும்பொறை. அவனுக்கு கிடைத்த அவமரியாதைகளால் மானம்தான் பெரியது என எண்ணி எண்ணி பல நாட்களாக உண்ணாமல் உறங்காமல் மடிந்தான் என்பது திருப்போரின் வரலாறு.. சரி.. இந்த திருப்பூரைத் தலைநகராகக் கொண்ட மாவட்டத்தில் சுற்றிப் பார்க்க என்னென்ன இடங்களெல்லாம் இருக்கின்றன என்று பார்க்கலாமா?
முக்கிய சுற்றுலாத் தளங்கள்
சிவன்மலை, திருப்பூர் திருப்பதி கோவில், சுக்ரீஸ்வரர் ஆலயம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் குமரன் நினைவுத் திருவுருவச் சிலை, ஆண்டிப்பாளையம் ஏரி ,அமராவதி அணை, இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம், முதலைப் பண்ணை அமராவதி சாகர், திருமூர்த்தி அணை ஆகியன முக்கிய இடங்களாக உள்ளன. +
எப்போது எப்படி அடைவது
திருப்பூர் நகரம் ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையை கொண்டிருப்பதால் வருடத்தில் எந்த பருவத்திலும் இந்நகரத்துக்கு சுற்றுலா வரலாம்.
சாலை, ரயில், விமானம் ஆகிய மூன்று போக்குவரத்து வசதிகளின் மூலமாக இந்நகரத்தை எளிதில் வந்தடையலாம். 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயம்புத்தூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளதால், நாட்டின் எந்த இடத்திலிருந்தும் விமானம் மூலம் இங்கு எளிதில் வந்தடையலாம்.
துணி உற்பத்திக்கான மிக முக்கிய நகரமாதலால், சாலைப் போக்குவரத்து நாட்டின் அனைத்து நகரங்களையும் திருப்பூருடன் இணைக்கிறது. திருப்பூரில் உள்ள ரயில்வே நிலையத்தின் மூலம் நாட்டிலுள்ள எந்த நகரத்திற்கும் எளிதாகச் செல்லலாம்.
திருப்பூரிலிருந்து வெளியில் செல்ல
திருப்பூர் - சென்னை
தொலைவு - 465கிமீ
பயண நேரம் - 8 மணி
ரயில்கள் - சதாப்தி, கோவை, சென்னை, டிவிசி சென்னை, ரப்திசாகர், கோர்பா, அகில்யாநகரி, சன்ட்ராகாச்சி,பாட்னா விரைவு, கவுகாத்தி, வெஸ்ட் கோஸ்ட், நீலகிரி விரைவு உள்ளிட்ட பல ரயில்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்கு செல்கின்றன.
ரயில் நிலையம் எங்குள்ளது?
நகரின் மையத்தில் அமைந்துள்ளது ரயில் நிலையம்.
ஜெய்வபாய் பள்ளி சாலை மற்றும் திருப்பூர் - ஊத்துக்குளி சாலை இணையும் இடத்தில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.
பேருந்து நிலையம்
நகரில் இருந்து செட்டிப்பாளையம் செல்லும் வழியில் காமராஜ் நகரில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இங்கிருந்து கோவை, சென்னை,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள்
சிவன் மலை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன் மலை அமைந்துள்ளது.
முருகப்பெருமான் மூலவராக இருக்கும் இந்த கோவிலில் நடைபெறும் புகழ் பெற்ற தைப்பூச விழாவில், கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வருகை புரிகிறார்கள்.
தைப்பூச விழாவில் மூன்று நாட்கள் நடைபெறும் "தேரோட்டம்" மிக முக்கியமானது. மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்கு, மலை அடிவாரத்திலிருந்து கட்டப்பட்டுள்ள 450 படிகளில் ஏறிச் செல்லவேண்டும்.
சிவன் மலை கோவிலை வந்தடைய சாலைப் போக்குவரத்து வசதிகள் உண்டு. இங்கு நடைபெறும் புகழ் பெற்ற சஷ்டித் திருவிழா காங்கேயத்திற்கு அருகில் வாழும் மக்களால் மிக பக்தியுடன் விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
திருப்பூர் திருப்பதி கோவில்
திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் திருப்பூர் திருப்பதி கோவில் ஆகும். திருப்பூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலைப் போன்றே இக்கோவில் அமைந்துள்ளது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இக்கோவில் திறக்கப்பட்டு, அனைத்துவகையான ஆகம பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
வருடத்தின் அனைத்து நாட்களிலும் இக்கோவிலுக்குச் செல்லலாம் என்றாலும், சிறப்புப் பூஜைகள் நடத்தப் படும் பொழுது இக்கோவிலைப் பார்க்கச் செல்வது நல்லது.
திருப்பூர் நகரத்திலிருந்து பேருந்து மூலமாகவோ ஆட்டோ ரிக்சா மூலமாகவோ இக்கோவிலை எளிதில் வந்தடையலாம்.
சுக்ரீஸ்வரர் ஆலயம்
திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் சுக்ரீஸ்வரர் ஆலயம் ஆகும். திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்கள் காலமான பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது ஆகும். அதற்குப் பின்பு சோழர்களால் இக்கோவிலின் உள்ளே பல்வேறு மண்டபங்களும் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக் கோவில் கட்டிடக் கலைக்குச் சான்றாக இக்கோவில் விளங்குகிறது.
ஐந்து லிங்கங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. இந்தக் கோவில் பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பினும் இக்கோவில் கட்டப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் சிவபெருமான் வழிபடப்பட்ட தலமாக இவ்விடம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டிப்பாளையம் ஏரி
திருப்பூர் நகரத்தின் வெகு அருகாமையில் உள்ள ஆண்டிப்பாளையம் என்ற ஊரில் இந்த ஏரி அமைந்துள்ளது. குடும்பத்துடன் ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இது விளங்குகிறது.
படகு சவாரி வசதி இருப்பதால், சுற்றுலா வரும் மக்களை அதிகம் கவரும் இடமாகவும் இது உள்ளது. இந்த இடத்தில் காணும் அமைதி மற்றும் சாந்தமான சூழல் பரபரப்பான, இயந்திரமயமான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் ஓய்வு எடுப்பதற்கான ஒரு இடமாக அமைந்துள்ளது.