"மினி கோவா" என சுற்றுலாப் பயணிகளால் அன்புடன் அழைக்கப்படும் புதுச்சேரி இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். புதுச்சேரிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் உலகத்தர சிட்டியான ஆரோவில் புதுச்சேரி சுற்றுலாவின் மணிமகுடம் போல இருக்கிறது. வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. நாம் ஹோட்டல் புக்கிங் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தும் போர்டலான Booking.com தனது 11வது வருடாந்திர டிராவலர் ரிவியூ விருதுகள் 2023 இல் பாண்டிச்சேரியை 'இந்தியாவில் அதிகம் வரவேற்கும் பகுதி' (The most welcoming region) என்று பெயரிட்டுள்ளது. இந்தியாவில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தும் புதுச்சேரி இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது!
அனைத்து தரப்பினருக்குமான சுற்றுலாத்தலம்
பாரம்பரியத்தை விரும்புபவர்களுக்கு பிரஞ்சுக் கால கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்கள், யாத்ரீகர்களுக்கு மணக்குள விநாயகர் கோவில், திருக்காஞ்சி கோவில் உட்பட பல கோவில்கள், இளசுகளுக்கு துடிப்பான பல பப்கள் மற்றும் கஃபேக்கள், அமைதியை விரும்புவர்களுக்கு ஆரோவில் நகரம் மற்றும் அரவிந்தர் ஆசிரமம், குடும்பங்களுக்கு பல வண்ண கடற்கரைகள், பார்க் மற்றும் மால், பெண்களுக்கு ஷாப்பிங் என அனைத்து வகையான சுற்றுலாப் பயணிகளையும் புதுச்சேரி கவர்கிறது. அதனால் தானோ என்னவோ, புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
Booking.com இன் 11வது வருடாந்திர டிராவலர் ரிவியூ விருதுகள்
உலக அளவிலும் இந்தியாவிலும் ஹோட்டல் முன்பதிவு செய்ய பெரும்பாலான மக்கள் Booking.com போர்டலை பயன்படுத்துகின்றனர். ரூம் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் விட்டு செல்லும் குறிப்பு மற்றும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு Booking.com டிராவலர் ரிவியூ விருதுகளை வெளியிடுகிறது.
இந்தியா உட்பட 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பயண நிறுவனங்களை ஆண்டு முழுவதும் தொடர்ந்து சிறந்த சேவை மற்றும் விருந்தோம்பலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பிற்காக கௌரவிக்கப்படுகின்றன. 240 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளின் தொகுப்பின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே சிறந்த விருந்தோம்பல் செய்யும் பிராந்தியத்தில் புதுவை முதலிடம்
2023 ஆம் ஆண்டில் மறக்க முடியாத பயணத்திற்கு பயணிகள் மிகவும் வரவேற்கத்தக்க அனுபவங்களைப் பெறுவதற்கு உதவுவதற்காக, இது இந்தியாவில் மிகவும் வரவேற்கத்தக்க பகுதிகள் மற்றும் நகரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் முதல் 5 இடங்களை பிடித்த பிராந்தியங்களின் பட்டியல் கீழே:
o புதுச்சேரி
o கேரளா
o ராஜஸ்தான்
o கோவா
o ஹிமாச்சல பிரதேசம்
விருந்தோம்பலில் முதல் 10 இடங்களைப் பிடித்த இந்திய நகரங்கள்
சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிப்பு அளித்ததில் முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்களின் லிஸ்ட் கீழே:
o பலோலம் (கோவா)
o அகோண்டா (கோவா)
o மாராரிகுளம் (கேரளா)
o ஹம்பி (கர்நாடகா)
o கஜுராஹோ (மத்திய பிரதேசம்)
o தேக்கடி (கேரளா)
o ஜெய்சல்மேர் (ராஜஸ்தான்)
o பிர் (இமாச்சல பிரதேசம்)
o மூணாறு (கேரளா)
o வர்கலா (கேரளா)
அழகான ஹோட்டல்களைக் கொண்ட இந்திய நகரங்கள்
Booking.com கணக்கெடுப்பு மணாலியை இந்தியாவில் அதிக அழகான ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை கொண்ட நகரமாக அங்கீகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் பட்டியலில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் இடம் பிடித்துள்ளன. வெளிநாட்டவரும் கூட வியந்து பார்க்கும் வகையில் இந்தியாவில் பிரமாண்டமான ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. உங்களை மகாராஜா, மகராணி போல கவனிக்க இந்தியாவில் ப்ரீமியம் லெவல் பங்களாக்களும் கூட உள்ளன.
2023 ஆம் ஆண்டின் உலக அளவில் விருந்தோம்பலில் தலைச்சிறந்து நிற்கும் நகரங்கள்
பூமியில் மிகவும் வரவேற்கத்தக்க பகுதிகளுக்கு வரும்போது, திராட்சைத் தோட்டங்களுக்கும் மலைகளுக்கும் பெயர் பெற்ற ஸ்பெயினில் உள்ள லா ரியோஜா பகுதி முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து கிரேக்கத்தில் எபிரஸ் ஒரு வரலாற்று இடமும், டானூப் நதிக்காக அறியப்பட்ட ஆஸ்திரியாவின் கலாச்சார வளமான பகுதியான ஓபரோஸ்டெரிச்சும் பட்டியலில் இடம் பிடிதுள்ளது. உலகெங்கிலும் உள்ள விருந்தோம்பல்களுக்காக 1.36 மில்லியன் பயண வழங்குநர்களை டிராவல் போர்டல் அங்கீகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் 10,799 பேர் உள்ளனர்.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அனைவரின் கண்களும் இப்போது புதுச்சேரி மீது விழுந்துள்ளது! நீங்கள் எப்போது புதுவைக்கு செல்ல போகிறீர்கள்?