இந்திய நாடு ஞானிகள் நிறைந்த தேசம் என்று ஆதி காலத்தில் இருந்தே கூறுவார்கள். உலகம் போற்றும் பல தத்துவங்களும் இந்தியாவில் இருந்து தான் பிறந்தன. இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக சேர்ந்து வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். இப்படி பல பெருமைகளை சுமந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சுவாமி விவேகானந்தரைப் பற்றி நாம் மிகவும் கொஞ்சமாகவே தான் அறிந்து இருப்போம். இப்பதிவில் அந்த மகானைப் பற்றிய முழு தகவல்களையும் காண்போம்!

பல மகான்களை தந்த புண்ணிய பூமி இந்தியா
சைவ சமயத்தை உலகுக்கு சொன்ன அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், பெளத்தத்தை தோற்றுவித்த கௌதம புத்தர், சமண மதத்தை வளர்த்த மஹாவீரர், ஆதி சங்கரர், மார்த்துவர், ராமானுஜர் போன்ற மகான்களை இந்தியா இந்த உலகுக்கு தந்துள்ளது. இந்தியாவில் தோன்றிய பல ஞானிகளும் ஆன்மீக உலகில் மறக்க முடியாத மற்றும் அழிக்க முடியாத சுவடுகளை விட்டு சென்றுள்ளனர். இன்றளவும் இந்த மகான்களை உலகில் உள்ள அனைவரும் போற்றி வருகின்றனர். அவர்களின் வரிசையில் சுவாமி விவேகானந்தர் மிக முக்கிய இடம் பெற்றவர் ஆவார்.

சுவாமி விவேகானந்தர் பிறப்பு
பெரிய செல்வந்தர் குடும்பத்தில் சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று தம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தரின் தாத்தா துர்க்காசரன், திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் துறவறம் சென்றவர். விவேகானந்தரின் அப்பாவுக்கு 3 வயது இருக்கும் போதே அவர் துறவறம் சென்று விட்டாராம். குடும்பத்தில் நிலவிய ஆன்மிக சூழல் காரணமாக சிறுவயதிலேயே பக்தி பாடல்கள், சமஸ்கிரத மந்திரங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பவராக இருந்தார் நரேந்திரர்.

மிகவும் புத்திக் கூர்மை வாய்ந்த நரேந்திரர்
படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த விவேகானந்தர் இளம் வயதிலேயே நல்ல அறிவு கூர்மை கொண்டவராக அறியப்பட்டார். இளம் வயதிலேயே இந்திய வரலாறு, இந்து மத சாஸ்திர புத்தகங்கள், மேற்கத்திய நாடுகளின் வரலாறு போன்றவற்றை ஆழ்ந்து படித்து தெரிந்து வைத்திருந்தார். இளம் வயதிலேயே ஆங்கிலம், இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமஸ்கிருதம் என அனைத்திலும் சிறந்து விளங்கி மகானாக திகழ்ந்தவர் நரேந்திரர்.

பல கலைகளிலும் சிறந்து விளங்கிய நரேந்திரர்
அறிவுக்கூர்மை மட்டுமில்லாமல் தைரியம், தன்னம்பிக்கை, வாத திறமை கொண்டவராகவும் விளங்கினார் விவேகானந்தர். அத்தோடு உடலையும், மனதையும் திடமாக வைத்திருக்கும் பயிர்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிலம்பம், வாள் பயிற்சி , மல்யுத்தம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். மணிக்கணக்கில் ஆழ்ந்த தியானத்திலும், மனதை நன்கு ஒருமுக படுத்தும் குணமும் அவருக்கு இயற்கையாகவே இருந்தது.

கடவுள் இருக்கின்றாரா?
கடவுள் இவ்வளவு கருணை மிக்கவராக இருக்கின்றாரே? ஆனால் இந்நாட்டில் ஏன் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தார். அவர் தான் காணும் ஒவ்வொருவரையும் பார்த்து இதே கேள்வியைக் கேட்டு கொண்டிருந்தார். கடைசியாக இந்த கேள்வியை திரு. ரவீந்திர நாத் தாகூர் அவர்களின் தந்தையிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளார். பதில் கூற முடியாத அந்த பெரியவர், விவேகானந்தரின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு நீ உன் வாழ்க்கையில் மிக உயர்ந்த மனிதராக வருவாய், என்று கூறிவிட்டு சென்றாராம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்ற விவேகானந்தர்
ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி கேள்விப்பட்டுவிட்டு அவரைக் காண சென்றுள்ளார். அவரை மிக உற்சாகமாக வரவேற்ற பரமஹம்சர், ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டார். இதனால் அதிர்ந்த விவேகானந்தர், நான் வருவேன் என்று உங்களுக்கு தெரியுமா என்று வினவினார். எல்லோரிடமும் கேட்ட அதே கேள்வியை பரமஹம்சரிடமும் "கடவுள் இருக்கின்றாரா" என்று. உடனே இருக்கின்றார், நிச்சயம் இருக்கின்றார் என்று கூறி, காளி கோயிலுக்கு அழைத்து சென்று இது தான் கடவுள் என்று கூறினார். இதனால் ஏமாற்றம் அடைந்த நரேந்திரர் கல் எப்படி கடவுளாக இருக்கும் என்று கூறி நகைத்துவிட்டு சென்று விட்டாராம்.

சீடனாக மாறிய விவேகானந்தர்
அடிக்கடி ராமகிருஷ்ணரை சந்தித்து வந்த விவேகானந்தர் நான்கு ஆண்டுகளில் அவரிடம் முழுமையாக சரணடைந்து விட்டார். ஒரு நாள் பரமஹம்சர் நரேந்திரனின் மார்பில் கை வைத்து அவர் உள்ளிருக்கும் சக்தியை தூண்டும் விதமாக அழுத்தியுள்ளார். ஏதோ ஒரு அழுத்தம் ஏதோ ஒரு சக்தி தன் ஆன்மாவை தொட்டதை உணர்ந்த நரேந்திரர் அன்று முதல் கடவுள் நம்பிக்கை கொண்டார். பரமஹம்சருக்கு அமாவசையன்று காளி தேவி காட்சி கொடுப்பது வழக்கம், அன்று நரேந்திரக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது. அண்ட சராசரத்தையும் காலில் கட்டி ஆளும் காளி தேவியை கண்ட பின்னர், அவருக்கு என்ன சொல்வதென்று புரியாமல் லயித்து நின்றார்.

நரேந்திரர் விவேகானந்தராக மாறிய தருணம்
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களைக் கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது, எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

நாடு முழுவதும் ஆன்மீக பயணம்
நாடு முழுவதும் சுற்றி திரிய வேண்டும் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்ட விவேகானந்தர் 1888-ஆம் ஆண்டு கொல்கத்தாவை விட்டு கிளம்பினார். இமயம் முதல் குமாரி வரை பயணம் செய்தார். அரசன் முதல் சாமானிய குடிமகன் வரை, படித்தவர் முதல் பாமரர்கள் வரை என்று பல மக்களுடன் நன்கு பழகினார். இந்த துறவறத்தில் அவர் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்தித்தார், பல சூழல்களை எதிர்கொண்டு வாழ்வின் சித்தாந்தத்தை உணர்ந்தார்.

இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்த சுவாமி விவேகானந்தர்
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்குச் சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது. விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மை விட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

தன் இறப்பை முன் கூட்டியே கணித்த சுவாமி விவேகானந்தர்
இந்தியாவிலும் தனது மடங்களை நிறுவிய அவர் தனது சொந்த ஊரான கல்கத்தாவில் பேலூர் எனும் இடத்தில் தனது மடத்தினை நிறுவினார். பிறகு அவர் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 நாள் இறந்தார். இறக்கும் சமயத்தில் விவேகானந்தருக்கு ஆஸ்துமா சக்கரை போன்ற நோய்கள் இருந்ததாகவும் ஆனால் அவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு அந்நோய்களின் வீரியம் இல்லை என்றும் அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக ஞாயணிகள், யோகிகள் பின்றோர் தங்களது இறப்பை முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல தான் சுவாமி விவேகானதரும் தனது இறப்பு குறித்த தகவளை தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே சுவாமி ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவரார சுவாமி அபேனந்தாவிடம் கூறியுள்ளார். தன்னுடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து தன்னுடைய உயிரை தானே வெளியேற்றி முக்தி அடைந்துள்ளார்.



Click it and Unblock the Notifications





