சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் கேரளா நோக்கி படையெடுத்து வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து அய்யன் ஐயப்பனைக் காண ஓடோடி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 15 ஆம் தேதி திறக்கப்படுவடுதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகள் வெளியாகியுள்ளன!

நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படும் நடை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு வருகை தரும் சிரமமின்றி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதற்கு தேவையான வசதிகள் தேவசம் போர்டு சார்பில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, இதற்காக வரும் 15 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி
அதன்படி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' செய்வதற்கு வசதியாக பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது, இந்த 3 கவுண்டர்கள் போதாது என்பதனால் மேலும் 3 கவுண்டர்கள் சபரிமலை ஒட்டிய பகுதிகளில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பனுக்கு இன்றியமையாத இருமுடி பை
ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம். இந்த புனித பையில் நீங்கள் எவற்றை எல்லாம் எடுத்து செல்லலாம் என்று தேவசம் போர்டு தற்போது அறிவித்துள்ளது.
பூஜை பொருட்களால் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது
இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடி கட்டில் சில பொருட்களை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது. மேலும், அவை பூஜை பொருட்களாக இருந்தாலும் தீயின் ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இருமுடியில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் எடுத்து செல்லக்கூடாத பொருட்களின் பட்டியல் இதோ.

இருமுடிகட்டில் அனுமதிக்கப்பட்ட பொருட்கள்
· அரிசி
· நெய் தேங்காய்
· வெல்லம்
· வாழைப்பழம்
· வெற்றிலை
· அரிக்கா கொட்டை
· நாணயங்கள்
இருமுடிகட்டில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்
· பன்னீர்
· ஊதுபத்தி
· சாம்பிராணி
· கற்பூரம்
இருமுடி பற்றி நீங்கள் அறிந்திராத மகத்துவ தகவல்கள்
· வீடுகளில் வைத்து கட்டும்போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசுவதை நம்மால் உணர முடியும் என்பது ஐதீகம்.
· தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும்போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.
· நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும்.
· வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம்.
· அதில் மஞ்சள் பொடி, தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
· முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும்.
· பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும்போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்குத் தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.
· வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.
· இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.
· தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.
· இதனால் ஆண்டுதோறும் வீடுகளில் சகல ஐஸ்வர்யமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... யாரைக் காண.. சுவாமியைக் காண... என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்.



Click it and Unblock the Notifications






