கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். ஆண்டின் சில காலங்களில் மட்டுமே திறக்கப்படும் சபரிமலை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் 2022 ஆம் வருடத்திற்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 17 அன்று திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயிலுக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி? சிறப்பு பேருந்துகள், சென்னையில் இருந்து சபரிமலைக்கு எப்படி செல்வது போன்ற தகவல்களை இங்கே காண்போம்!

பிறந்தது கார்த்திகை
'கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து, பார்த்தசாரதியின் மைந்தனே உன்னை பாக்க வேண்டியே தவமிருந்து' - தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் கார்த்திகை. கார்த்திகை பிறந்த உடனே ஐயப்ப பக்தர்கள் மாலையணிவார்கள். எங்கு பார்த்தாலும் கருப்பு, நீல வேட்டிகளோடு, கழுத்தில் மாலையுடன் ஐயப்ப சுவாமிகள் நடந்து செல்வதை நாம் பார்க்கலாம். ஒரு மண்டலம் கடின விரதமிருந்து சபரிமலைக்கு சென்று சாஸ்தாவை வழிபடுவார்கள். கோயிலுக்கு செல்ல முடியாதவர்களும் மாலையணிந்த ஐயப்ப பக்தர்களிடம் பிரசாதம் வாங்கி சாப்பிடுவதை புண்ணியமாக நினைப்பார்கள்.

சபரிமலை வரலாறு
அன்போடு ஐயப்பனை குழந்தையிலிருந்து வளர்த்து வந்த பந்தள மகாரஜாவின் தனக்கு ஒரு குழந்தை பிறந்ததும், தீயபோதனைகளால் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய் சொன்னாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் எனக் கூற வைத்தாள். ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை?! தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான்.
வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். மகிஷியை வதம் செய்து புலி மீது அமர்ந்து அரண்மனைக்கு சென்றான். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போன அரசி, மன்னிக்கும்படி மன்றாடி அழுதாள். தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால், தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

பதினெட்டு படிகளின் மகிமை
| 1 | முதல் படி பிறப்பு நிலையற்றது |
| 2 | இரண்டாம் படி சாங்கிய யோகம் |
| 3 | மூன்றாம் படி கர்ம யோகம் |
| 4 | நான்காம் படி ஞான யோகம் |
| 5 | ஐந்தாம் படி சன்னியாசி யோகம் |
| 6 | ஆறாம் படி தியான யோகம் |
| 7 | ஏழாம் படி ஞான விஞ்ஞான யோகம் |
| 8 | எட்டாம் படி அட்சர பிரம்ம யோகம் |
| 9 | ஒன்பதாம் படி ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் |
| 10 | பத்தாம் படி விபூதி யோகம் |
| 11 | பதினொன்றாம் படி விஸ்வரூப தரிசன யோகம் |
| 12 | பன்னிரெண்டாம் படி பக்தி யோகம் |
| 13 | பதிமூன்றாம் படி சேஷத்ர விபாக யோகம் |
| 14 | பதினான்காம் படி குணத்ரய விபாக யோகம் |
| 15 | பதினைந்தாம் படி புருஷோத்தம யோகம் |
| 16 | பதினாறாம் படி தைவாசுரஸம்பத் விபாக யோகம் |
| 17 | பதினேழாம் படி ச்ராத்தாதரய விபாக போகும் |
| 18 | பதினெட்டாம் படி மோட்ச சன்னியாச யோகம் |

சபரிமலைக்கு சென்றால் போதும் சகல பாவங்களும் தீரும்
ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள். மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட மலையின் உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம். நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, நீங்கள் மாலையணிந்து இருமுடி எடுத்து சென்றால் போதும். ஐயப்பன் உங்களை ஆட்கொள்வான்!

முக்கிய தேதிகள்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் திறக்கப்படும் தேதி - நவம்பர் 17, வியாழன், 2022
மண்டல பூஜை நடைபெறும் தேதி - டிசம்பர் 27, செவ்வாய், 2022
மகர விளக்கு நடைபெறும் தேதி - 14 ஜனவரி, சனி, 2023

ஆன்லைன் டிக்கெட்டுகள்
பக்தர்கள் நலன் கருதி, அதிக சிரமத்தை குறைப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை உருவாக்கியுள்ளது. அதன்படி நீங்கள் sabarimalaonline.org மற்றும் sabarimala.kerala.gov.in ஆகிய இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அடையாளச் சான்று விவரங்களுடன் பெயர், முகவரி, இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து உங்களுக்கு விருப்பமான நேரத்தில் தரிசனத்தை புக் செய்து கொள்ளவும்.

தமிழக அரசால் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்
சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்துகள் சென்னையில் இருந்து பம்பைக்கு மதியம் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு சமயங்களில் இயக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு ரூ.1090ம், சிறியவர்களுக்கு ரூ.545ம் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. இந்தப் பேருந்து சேவைகள் ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். http://www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே போல் சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு தினமும் இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications




