சாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன. பூங்காவின் உயிரியல் சமநிலையை பேணுவதில் இந்த இரண்டு ஏரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள் மற்றும் ஊர்வன விலங்குகள் இணக்கமுடன் இந்த வனப்பகுதியில் உயிர் வாழ்வதற்கு இந்த ஏரிகள் அடிப்படை ஆதாரமாக திகழ்கின்றன. 'செயிலிங் கிளப்' எனப்படும் படகுத்துறை ஒன்றும் சாக்யா சாகர் ஏரியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடுதற்கான வசதிகள் இந்த படகுத்துறையில் செய்யப்பட்டிருக்கின்றன. காட்டுயிர் ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இந்த ஏரிப்பகுதியில் நிரம்பியுள்ளன. படகில் பயணம் செய்தபடி சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதிகாலை நேரங்களில் பயணிகள் இங்கு உடும்பு, மலைப்பாம்பு மற்றும் சதுப்பு நில முதலை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புள்ளது.
அக்காலத்தைய முகலாய மன்னர்கள் முதல் பிற்காலத்தைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வரை வேட்டையில் ஈடுபட்ட வனப்பகுதியாக மாதவ் தேசிய பூங்கா வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தனது படைக்கு தேவையான யானைகளை அக்பர் இந்த காட்டுப்பகுதியில் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதவ் தேசிய பூங்காவில் 354 ச.கி.மீ பரப்பளவில் மடிப்புகளோடு நீண்டு கிடக்கும் மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான புல்வெளிப்பிரதேசம் போன்றவை ஒரு ஏரியைச்சுற்றி சூழ்ந்து காட்சியளிக்கின்றன. இயற்கை ரசிகர்களுக்கு இந்த வனப்பகுதி மிகவும் பிடித்தமான ஸ்தலமாக உள்ளது. தாவரச்செழுமை மற்றும் காட்டுயிர் அம்சங்கள் ஆகியவை இந்த பூங்காவில் மனித இடையூறுகள் ஏதுமின்றி நிரம்பியுள்ளன. சிந்தியா ராஜ வம்சத்து மன்னரான சிவாஜி ராவ் சிந்தியா என்பவரால் கட்டப்பட்ட ஜார்ஜ் கேசில் எனும் கோட்டை ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. சுதந்திர காலத்திற்கு முந்தைய காலனிய கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது. இதன் மேற்பகுதியிலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக சொல்லப்படுகிறது. சாகச பொழுதுபோக்கில் ஈடுபட விரும்பவர்கள் இங்குள்ள சாக்யா சாஹர் படகுத்துறை மூலமாக படகுச்சவாரி செய்து ஏரியில் வசிக்கும் முதலைகளை மிக அருகில் பார்த்து ரசிக்கலாம்.
மோகினி பிக்-அப் அணை எனப்படும் இந்த நீர்த்தேக்கம் ஷிவ்புரி சுற்றுலாப்பயணத்தில் விஜயம் செய்ய வேண்டிய மற்றும் ஒரு ரம்மியமான சிற்றுலாத்தலமாகும். ஷிவ்புரி பிரதேசத்தில் உள்ள வரலாற்றுத்தலங்கள், இயற்கை பூங்காக்கள் மற்றும் கோயில்கள் போன்றவற்றின் மத்தியில் இந்த மோகினி பிக்-அப் அணை ஒரு சாந்தமான பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. ஷிவ்புரி நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் ஷிவ்புரி - நர்வார் சாலையில் இந்த அழகான சிற்றுலாத்தலம் அமைந்திருக்கிறது. இந்த அணைக்கட்டுமானம் இப்பிரதேசத்தின் நீர்ப்பாசன தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அழகிய புல்வெளிப்பிரதேசம் மற்றும் ஒரு கண்ணாடி மாளிகை அமைப்பு போன்றவை இந்த அணைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்களாகும். இந்த கண்ணாடி மாளிகையிலிருந்து பயணிகள் சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மழைக்காலத்தில் நீர்த்தேக்கம் நிரம்பி பிரம்மாண்டமாக காட்சியளிப்பதால் அக்காலத்தில் இந்த அணைப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது.