விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல வனத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. சிவமே மலையாக இருக்கும் சதுரகிரி மலைக்கு சென்று அந்த சுந்தர மகாலிங்கத்தை தரிசிப்பதற்கு நிச்சயம் நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்நிலையில் தை மாதத்திற்கான பிரதோஷம், பௌர்ணமி தினங்களுக்காக தொடர்ந்து 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோவில் திறந்து இருக்கிறது!
உற்சாகமாக மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள்
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட 8 முக்கிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தை மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை அடுத்து இன்று முதல் நான்கு தினங்களுக்கு பக்தர்கள் சுந்தர மகாலிங்கரை தரிசிக்க வனத்துறையும், கோவில் நிர்வாகமும் முடிவு செய்து பக்தர்களை அனுமதித்து வருகிறது. இந்த அறிவிப்பினை அறிந்த பக்தர்கள் கூட்டம் இன்று அதிகாலை முதலே அடிவாரத்தில் இருந்து மிக உற்சாகமாக மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மலையே சிவமாக இருக்கும் அதிசயம்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்தே மலை ஏற வேண்டும்.
முக்கிய தினங்களில் சுவாமி தரிசனம்
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி அன்று இம்மலைக்கு பக்தர்கள் மலையேறி வழிபட வருகின்றனர். இவை தவிர மாதந்தோறும் அமாவாசை, பெுளர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்குவது வழக்கம். மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு அனுமதி
இந்த நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி வழிபாட்டுக்காக ஜனவரி 23 (இன்று) முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதே போல இரவில் அங்கு தங்குவதற்கும், ஆற்றுப் பகுதிகளில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனே செல்லுங்கள்
தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நீர்வரத்து சீரானதை தொடர்ந்து பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்தால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சீக்கிரம் சென்று அந்த ஈசனை வழிபட்டு வாருங்கள்!



Click it and Unblock the Notifications




