சிவாஜி ஏணிப்படிகள் என்று விசேஷமாக பெயரிடப்பட்டுள்ள இந்த இடம் மாத்தேரான் பகுதியில் அவசியம் காணவேண்டிய ஒரு ஸ்தலமாகும். இது 'ஒன் ட்ரீ பாயிண்ட்' மற்றும் 'மாத்தேரான் பள்ளத்தாக்கு' பகுதியை ஒரு ஏணிப்படிகள் போன்ற மலைப்பாதையின் மூலமாக இணைக்கிறது. சிவாஜி மஹாராஜ் இந்த ஏணிப்படி பாதையை வேட்டை மற்றும் இயற்கைப்பயணத்துக்கு பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. அதனாலேயே இப்பெயர் வந்துள்ளது.
மாத்தேரான் பகுதி முழுக்கவே இயற்கை எழில் வழியும் இடம் என்பதால் இந்த ஸ்தலமும் இயற்கை வனப்புடன் உள்ளது என்பதை குறிப்பிடத்தேவையில்லை. மலையேற்றத்தை விரும்புபவர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கக்கூடும். சுற்றிலும் பசுமையான வனப்பகுதி மற்றும் நீர்வீழ்ச்சிகளுடன் இந்தப்பகுதி காட்சியளிக்கிறது.கரடுமுரடான மலைப்பாதைகள் என்பதால் சாகசவிரும்பிகளுக்கும் மலையேறிகளுக்கும் இந்த இடம் ரொம்பவே பிடிக்கும்.

எல்லா மலைவாசஸ்தலங்களையும் போன்றே இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலமும் பல மலைக்காட்சி தளங்களை கொண்டுள்ளது. இந்த மலைக்காட்சி தளங்களிலிருந்து மயக்க வைக்கும் பள்ளத்தாக்கு காட்சிகளை காணமுடிகிறது. இங்குள்ள 38 ம.காட்சித்தளங்களில் 'பனோரமா பாயிண்ட்' எனும் தளம் 360° கோணத்தில் நாலா புறமும் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற காட்சிகளைக்காணும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு பரவச சிலிர்ப்பை அக்காட்சிகள் அளிக்கின்றன. மேலும், இங்குள்ள 'ஹார்ட் பாயிண்ட்' எனும் காட்சி தளத்திலிருந்து மும்பை நகரின் பல வண்ண விளக்குகளின் ஜொலிப்பை இரவில் பார்க்க முடிகிறது.

பிரபால் கோட்டை எனப்படும் புராதன வரலாற்று கோட்டையை 'லூயிசா பாயிண்ட்' எனும் இடத்திலிருந்து அருமையாக பார்க்கலாம். இதுவும் ஒரு முக்கியமான மலைக்காட்சி தலமாகும். தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் ஒருகாலத்தில் கம்பீரமாக விளங்கிய கோட்டை இது. இன்னபிற மலைக்காட்சி தளங்களாக 'மங்கீ பாயிண்ட்', 'போர்க்குபைன் பாயிண்ட்' மற்றும் 'ஒன் ட்ரீ ஹில் பாயிண்ட்' போன்றவற்றை குறிப்பிடலாம்.
மாத்தேரான் நகரம் ஆங்கிலேய பாணியில் அமைந்த பலவிதமான பழைய சின்னங்களையும் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. இவை யாவுமே தற்மயம் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சார்லோட் ஏரிப்பகுதி ஏகாந்தமாக ஓய்வெடுப்பதற்கு உகந்த ஸ்தலமாகும். இங்கு பயணிகள் பறவை வேடிக்கை, கரையோர நடைப்பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம். குழந்தைகளுடன் பூங்காவில் விளையாடி மகிழவோ அல்லது அன்புக்குரியவருடன் நடக்கவோ ஏற்ற இயற்கைச்சூழல் இங்கு காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications




