தூங்குவதற்கு என சுற்றுலாவா? என்ன இது? இதற்கு எல்லாமுமா சுற்றுலா என நீங்கள் நினைப்பீர்கள்! ஆனால் இது தான் இப்போது மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பணம் செலவழித்து, ஆபீஸ் வேலைகளை விட்டுவிட்டு, பயணம் செய்து ஒரு இடத்தில் சென்று ஓய்வெடுக்கிறார்கள் இன்றைய மக்கள். மன அழுத்தமும், வேலைப் பளுவும், சோர்வும், குழப்பமும் மனிதர்களின் தூக்கத்தைப் பறித்து விடுகிறது. இதனால் ஓய்வெடுத்து நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகவே பலர் இந்தியாவின் அமைதியான சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுக்கிறார்கள்! உங்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறது என்றாலும் இந்த இடங்களின் அழகைக் காண நீங்களும் இந்த இடங்களுக்கு செல்லலாம்!

ரிஷிகேஷ்
உத்தரகாண்டின் தெஹ்ரி கர்வால் பகுதியில் உள்ள இந்திய நதிகளின் புனிதமான கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம். இந்த புராதனநகரம் அழகும் அமைதியும் நிறைந்து மனதிற்கு ஒரு ஆத்ம திருப்தியை வழங்குகிறது. 'உலகின் யோகா தலைநகரம்' என்று அறியப்பட்ட ரிஷிகேஷில் யோகா, ஷிவ்புரியில் ரிவர் ராஃப்டிங், பிரமிக்க வைக்கும் அமைதியான கங்கா ஆரத்தி, ஆசியாவிலேயே மிக உயரமான இடத்தில் பஞ்சி ஜம்பிங் என பொழுதை கழிக்கலாம்.

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
பனை ஓலைகளைக் கொண்ட கடற்கரைகள், கறையற்ற வெள்ளை மணல்கள், மரகத கடல் நீர், பவளப்பாறைகள் சுற்றிலும் ஒரு வித அமைதி என அந்தமான் உங்களை வரவேற்கும். இயற்கையின் மடியில் நிதானமாக ஒரு ஓய்வெடுக்க நீங்கள் நிச்சயமாக அந்தமானுக்கு செல்லலாம். அதோடு அழகிய இயற்கை காட்சிகளை ரசிப்பது, நீருக்கடியில் ஸ்னோர்கெலிங், ஸ்கூபா டைவிங் செய்வது, வித விதமான கடல் உணவுகளை ருசிப்பது என அழகாக அந்தமானில் நீங்கள் ஓய்வெடுக்கலாம்.

ஆரோவில்
விடியல் நகரம் என்று அழைக்கப்படும், ஆரோவில் பாண்டிச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அமைதியான அழகிய இடமாகும். இந்த அமைதியான இடத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களைக் காணலாம். இங்குள்ள முக்கிய ஈர்ப்பு மாத்ரிமந்திர் ஆகும். உலோகத் தங்கக் கோளம், அழகான பச்சை புல்வெளிகள், சைக்கிள் பயணம், தியானம், யோகா என ஆரோவில் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வழிகளைக் கொண்டுள்ளது. இங்கே மருத்துவ சுற்றுலாவும் கூட இப்பொழுது பேமஸ் ஆகி வருகிறது, குணப்படுத்தும் படிப்புகளிலும் கூட நீங்கள் பங்கேற்கலாம்.

சைலன்ட் வேலி நேஷனல் பார்க்
இந்த அழகிய தேசிய பூங்கா மேற்கு தொடர்ச்சி மலையில் மழைக்காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பிரதான நுழைவாயில் சைரந்திரியில் அமைந்துள்ளது. இந்த இடம் ஒலி, மாசு தீண்டாதது. இந்த இடத்தில் கிடைக்கும் அமைதியானது வேறு எங்குமே கிடைக்காது. அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை காணலாம். இந்த அமைதியான இடத்திற்கு அருகிலேயே பல தங்குமிடங்கள் உள்ளன. நீங்கள் இங்கு தங்கி ஓய்வெடுக்கலாம்.

ஆலப்புழா
ஆலப்புழாவின் உப்பங்கழியில் நீங்கள் காணும் படகுகள் உண்மையில் பழங்காலத்திலுள்ள கெட்டுவல்லங்களின் மறுவடிவமைப்பு ஆகும். எப்பேர்ப்பட்ட மன குழப்பமும் கூட இந்த அழகிய நதிகளுக்குள் செல்லும் படகு இல்லங்களில் காணாமல் போய் விடுகிறது. நவீன படகுகள், குளிரூட்டிகள், நவீன கழிப்பறைகள், வசதியான வாழ்க்கை அறைகள், சமையலறை மற்றும் மீன்பிடிப்பதற்கான பால்கனி போன்ற ஒரு நல்ல ஹோட்டல் அறையின் அனைத்து வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.

கசொல்
அழகான, அமைதியான இடமான கசொல் உங்களுக்கு ஒரு அலாதியான ஓய்வை கொடுக்கிறது. ஓய்வுக்கு பிறகு சாகச சுற்றுலாவில் ஈடுபடலாம், பச்சை பள்ளத்தாக்குகளை பார்வையிடலாம், பார்வதி ஆற்றின் கரையில் ரிவர் ராப்ஃடிங் செய்யலாம், அழகிய மலைகளுக்கு மேல் ட்ரெக்கிங் மற்றும் கேம்பிங், சமவெளிகளில் சைக்கிள் பயணம் என கசொல் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க தவறாது.

காஷ்மீர்
சினாரின் கம்பீரமான மரங்களும், சந்தூரின் மயக்கும் ஒலிகளும், பனி மூடிய இமயமலைகளும் காஷ்மீரை சொர்க்கமாக மாற்றுகின்றன. பதேர்வாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், பால்டாலின் அழகிய நிலப்பரப்புகள், ஷாலிமார் கார்டன் மற்றும் புல்வாமாவின் ஆப்பிள் தோட்டங்கள், குல்மார்க்கின் பனி மூடிய சிகரங்கள், அழகிய டால் ஏரி என காஷ்மீர் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றாது. காஷ்மீருக்கு சென்று சுற்றியும் பார்க்கலாம், குளிருக்கு இதமாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கவும் செய்யலாம்.

அரக்கு பள்ளத்தாக்கு
நீங்கள் தனித்துவத்தையும் அமைதியையும் தேடும் சுற்றுலாப் பயணியாக இருந்தால் நீங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மலைப்பிரதேசமான அரக்கு பள்ளத்தாக்குவிற்கு செல்ல வேண்டும். பள்ளத்தாக்குகள், காடுகள், காபி தோட்டங்கள், பழங்குடி குகைகள், பழங்குடியினர் கலை அருங்காட்சியகம் ஆகிய அனைத்தும் உங்களுக்கு நிச்சயம் ஒரு நிவாரணமாக இருக்கும்.
உங்களுக்கு தூக்கம் நன்றாக வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி இந்த லிஸ்டில் உள்ள இடங்கள் எல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பயணிகளே!



Click it and Unblock the Notifications





