உத்தரகாண்டின் புகழ்பெற்ற ஐந்து பஞ்ச கேதார் கோவில்களில் ஒன்றான துங்கநாத் சிவன் கோவில் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் கோவிலாகும். இந்த இடத்தைச் சூழ்ந்திருக்கும் அமைதியும் அழகும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆதி சங்கராச்சாரியாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புனிதஸ்தலத்தை ஒரு முறை பார்த்தாலே போதும், கோடி புண்ணியம் வந்து சேருமாம்.
அதோடு மட்டுமில்லாமல் இது சாகசப் பிரியர்களுக்கும் ஏற்ற இடமாகும். இங்கு இருக்கும் கடினமான ட்ரெக்கிங்கில் ஈடுபடுவதற்காகவே உலகெங்கிலும் இருந்து சாகசப் பயணிகள் துங்கநாத்திற்கு வருகை தருகின்றனர். துங்கநாத்தின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்!
அழகிய இமயமலை சாரலில் அமைந்திருக்கும் துங்கநாத்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கர்வால் இமயமலையின் பாதைகள் ஏராளமான மரகத நதிகள், இயற்கை அழகு, பனி மூடிய சிகரங்கள், பச்சை நிற மலைகள் மற்றும் பசுமையான காடுகளைக் கொண்டுள்ளது. துங்கநாத் ட்ரெக்கிங் என்பது மலையேற்றப் பயணிகளுக்கு நம்பமுடியாத அனுபவத்தை வழங்கும் எளிதான மற்றும் அற்புதமான மலையேற்றப் பாதைகளில் ஒன்றாகும். அற்புதமான பாதைகளும் அழகிய காட்சிகளும் கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு மலையேறுபவர்களுக்கு விருந்தாகவே அமைகிறது எனலாம்.
1000 ஆண்டுகள் பழமையான கோவில்
கடல் மட்டத்தில் இருந்து 3,680 மீட்டர் உயரத்தில் வீற்றிருக்கும் இந்த கோயில் சந்தேகத்திற்கு இடமின்றி தரிசிக்கத் தகுதியானது. புகழ்பெற்ற துங்கநாத் கோயில் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சிவபெருமானின் மிக உயரமான கோயிலாகும். மேலும் இக்கோயில் அதன் அமைப்பு மற்றும் அற்புதமான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.
ஸ்ரீ ராமர் தியானம் செய்த கோவில்
வட இந்திய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த கோயிலின் அடித்தளம் பாண்டவ சகோதரர்களில் மூன்றாவது சகோதரரான அர்ஜுனனால் அமைக்கப்பட்டது. இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி சாபத்தில் இருந்து விடுபட ராமர் இக்கோயிலில் தியானம் செய்தார் என்ற ஒரு வரலாறும் உள்ளது. மேலும் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் மற்ற கடவுள்களின் சிலைகளையும் நாம் இங்கு காணலாம்.
வேறு கிராமத்திற்கு மாற்றப்படும் சிவன் சிலை
மலையேற்றத்தில் இயற்கைக்காட்சிகளை ரசிப்பதைத் தவிர நீங்கள் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான விடை இங்கே! துங்கநாத்திற்கான உங்கள் மலையேற்றத்தில், ஆசீர்வாதங்களைப் பெற துங்கநாத்தின் புனித கோவிலுக்குச் செல்வது மிகவும் அவசியம். பொதுவாக குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக கோவில் மூடப்பட்டு, முக்கு கிராமத்திற்கு இறைவன் சிலை நகர்த்தப்பட்டு விடும். பின்பு ஏப்ரல் மாத இறுதியில் இந்த கோயிலின் கதவுகள் பக்தர்களுக்காக திறக்கப்படும். ஆகவே இதற்கு ஏற்றார்போல், நம் பயணத்தை திட்டமிட வேண்டும்.
துங்கநாத்திற்கு செல்ல வேண்டிய நேரம்
ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலம் துங்கநாத்தில் ட்ரெக்கிங் செய்வதற்கான சிறந்த நேரமாக கருதப்படுகிறது. சராசரியாக 16 டிகிரி வெப்பநிலை நிலவும் இமயமலையில் கோடைக்காலத்தில் வானிலை மிகவும் இனிமையானதாக இருக்கும். மாலை நேரங்களில் வானிலை குளிர்ச்சியாக இருப்பதால், உங்களை சூடாக வைத்திருக்க லேசான கம்பளிகளை எடுத்துச் செல்லுங்கள். மழைப்பொழிவு காரணமாக, மழைக்காலங்களில் இங்கு ட்ரெக்கிங் செய்வது சற்று சவாலாக உள்ளது, ஏனெனில் நிலச்சரிவுகள் காரணமாக ஓரிரு மணி நேரம் சாலைகள் தடைபடும் வாய்ப்புகள் உள்ளன.
குளிர்காலத்தில் சாகச ட்ரெக்கிங்
மழைக்காலத்தில் சோப்தாவிற்கு ட்ரெக்கிங் செய்வது கடினமாகும். குளிர்காலத்தில் துங்கநாத்தில் ட்ரெக்கிங் செய்வது மலை ஏறுபவர்கள் பனி போர்த்திய மலைகளை பார்க்க அனுமதிக்கிறது. டிசம்பரில் துங்கநாத் ட்ரெக்கிங் பனிப்பொழிவு தொடங்குவதால் கடினமாக இருக்கும். ஆனால் சாகச விரும்பிகள் பயணத்தை மேலும் உற்சாகப்படுத்த குளிர்காலத்தில் ட்ரெக்கிங் செய்வார்கள்.
ஆன்மீக பயணத்தோடு அரிய வனவிலங்குகளையும் காண ஒரு வாய்ப்பு
துங்கநாத் கேதார்நாத் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இமயமலையின் கண்கவர் பறவைகளை கண்டு மகிழலாம். இதுவே இந்தியாவின் மிக அழகான பறவையான ஹிமாலயன் மோனல் தங்குமிடமாகும். மேலும், ஃபெசண்ட், அப்லேண்ட் பஸார்ட், கோல்டன் ஈகிள், லாம்மர்ஜியர், ரூஃபஸ்-பெல்லிட் மரங்கொத்தி, இமாலய ஆந்தை, புள்ளி-சிறகுகள் கொண்ட ரோஸ்ஃபிஞ்ச், ஐரோப்பிய கோல்ட்ஃபிஞ்ச், நெருப்பு மூடிய டைட், சாம்பல் மர-புறா ஆகியவற்றையும் நாம் காணலாம்.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள சோப்தாவில், வசந்த காலத்தின் துவக்கத்தில், பல பூக்கள் பூத்து குலுங்கி, அது முழு இடத்திற்குமே ஒருவித சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இதை நாம் பார்க்கும் போது ஏதோ ஒரு சோலையில் இருப்பது போன்ற உணர்வு வருவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இந்த இடத்திற்கு போக வேண்டும் என்று இப்போதே ஆசையாக உள்ளதா? திட்டமிடுங்கள்!