மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் மறைந்து 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் கூட, அவரது புகழும் அவர் எழுப்பிய கோயில்களும் இன்று வரை அவர் புகழ் பேசுகின்றன. ஏன், இன்னும் 1000 ஆண்டுகள் தாண்டியும் கூட அவர் கட்டிய கோயில்கள் கம்பீரமாக நின்று சோழர் புகழ் பாடும். அவர் கோயில்கள் மீது ஆர்வம் கொண்டு சோழர் ஆட்சி செய்த பல இடங்களிலும் பல கோயில்களை கட்டியுள்ளார், அந்த வகையில் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னரே கி.பி 985 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கற்கோயிலை கட்டியுள்ளார்!
ராஜராஜ சோழன் எழுப்பிய கோயில்
குந்தன்குழி மகாதேவர் ஆலயம் என்றழைக்கப்படும் இந்த சிவாலயம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மதகடிப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. என்ன மதகடிப்பட்டா? எத்தனை முறை அங்கே சென்றிருக்கிறேன், ஆனால் ஒரு முறை கூட இக்கோயில் பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், ராஜராஜ சோழன் புதுச்சேரியில் கட்டிய இந்த கோயில் பற்றி பெரும்பாலான புதுச்சேரி மக்களுக்கே தெரியாது. கி.பி 985 ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

திருகுந்தன்குழி மகாதேவர் கோயில்
இராஜராஜன் சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னரே இங்குள்ள கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. "திருகுந்தன்குழி மகாதேவர் கோயில்" என அழைக்கப்படும் இவ்வாலயமானது, அடித்தளம் முதல் கலசம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட முழுக் கற்கோயில் ஆகும். மேற்கு பார்த்து அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் ஆவுடையார் காணப்படவில்லை, பாணம் மட்டுமே உள்ளது . தெற்கு பார்த்து அமைத்துள்ள அம்மன் சன்னதியில் அகிலாண்டேஸ்வரி அம்மன் வீற்றிருக்கிறார். சப்த மாதர்களுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலின் கருவறை சதுரமாகவும் மேலே உள்ள கிரிவம் வட்டமாகவும் அதன் சிகரம் உருண்டையாகவும் உள்ளன.

கோயில் முழுக்க சோழர் கல்வெட்டுகள்
விமானத்தின் கிரிவ கோஷ்டத்தில் வடக்கு பிரம்மா, மேற்கு விஷ்ணு, தெற்கு தட்சிணாமூர்த்தி, கிழக்கு முருகன் என நான்கு புறமும் அழகான சிற்பங்கள் அமைந்துள்ளன. கிரிவத்தில் இரண்டு நந்திகள் என எட்டு நந்திகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இராஜராஜன் சோழன் காலம் முதல் காலம் குலோத்துங்க சோழன் வரை அனைவரின் கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கிறது இக்கோயில்.

சோழர் காலத்து கற்கோயில்
"ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளிய திருக்கற்றளி" என்ற கல்வெட்டு இங்கு பொறிக்கப்பட்டதை பார்த்ததன் மூலம் ராஜராஜ சோழனால் இக்கோயில் கட்டப்பட்டதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகியவரின் மெய்க்கீர்த்திகள் கல்வெட்டாக இந்த கோயிலில் காணப்படுகின்றன.

சோழர் புகழ் பாடும் மெய்கீர்த்திகள்
மெய்க்கீர்த்தி என்பது அரசனுடைய பரம்பரை அடைந்த வெற்றி, அம்மன்னின் ஆட்சி காலம், பட்டப்பெயர் முதலியவற்றை பாடல் வரிகளாக தெரிவிப்பது. பிற்கால சோழர் ஆட்சியில் தான் மெய்க்கீர்த்திகள் வடிவம் பெற்றன. ஒவ்வொரு அரசருக்கும் ஒவ்வொரு வகையான தொடர்கள் உண்டு. மெய்க்கீர்த்தியின் அடியைக் கொண்டே இந்த மன்னன் யார் என்று அறிந்து கொள்ள முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக பல் மெய்கீர்த்திகள் இந்த கோயிலில் காணப்படுகின்றன.

நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?
இந்த கோயில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 23 கிமீ தூரத்திலும், திருபுவனையில் இருந்து 2 கிமீ தூரத்திலும், மதகடிப்பட்டில் இருந்து 500 மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது சரியாக புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் நீங்கள் எளிதில் இந்த கோயிலை அடையலாம். கோயில் தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் திறந்து இருக்கிறது. அந்த மகாராஜா கட்டிய கோயிலை நீங்களும் பார்க்க வேண்டுமா? இந்த வாரமே திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications





