குருவின் பார்வை பட்டால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை என்பது வெறும் சொல் அல்ல. கணித்தலில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இது நிகழும். ஏனெனில் வெறுமனே அதிர்ஷ்டம் வந்து வீட்டைத் தட்டாது. அல்லது கூரையைப் பிய்த்துக் கொண்டு மழையும் கொட்டாது. அது அதுக்கென்று சில காலம் எடுக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் குரு எந்த வீட்டில் இருந்தாலும் உங்கள் ராசிக்கு ஏற்ப உங்கள் தொழில் விருத்தி, பணவரவு, செல்வம் நிலைக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா.. அது பற்றிய தகவலுக்காகத்தான் இந்த கட்டுரை.

குல தெய்வ வழிபாடு
பொதுவாக சிலருக்கு பணத்தின் மீது பெரிதாக பற்று இருக்காது. நம்மை காக்கும் ஆண்டவன் என்ன குடுப்பானோ அதை வைத்து திருப்தி அடைவதே அவர்களது நேர்மையாகும். ஆனால் அதற்காக காசே தேவையில்லை என்றும் இருந்துவிடமுடியாது. நம் வாழ்க்கை என்னதான் இறைவனால் படைக்கப்பட்டாலும், நம் முயற்சிகளால் செல்வங்களைத் திரட்டி குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ்வதே மனித பிறவியின் லட்சியமாக அமையும். அப்படி செல்வம் சேர்க்கையில் வெறுமனே கடின உழைப்பு மட்டுமல்லாது இறைவனின் அனுக்கிரகமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் கோடி கோடியாக கொட்டும் பணமழை. வெறும் லாட்டரி அடித்தது போலல்ல. உண்மையான உழைப்பும், கடவுளின் வழிபாடும் சேர்ந்துதான் உங்களை வாழ்க்கையில் உயர்த்தும். அப்படி நீங்கள் வாழ்வில் உயர வேண்டும் என்றால் இந்த 5 கோயில்களுக்கும் தவறாமல் சென்றுவரவேண்டும். அது முடியாதவர்கள் குலதெய்வ கோயிலுக்காவது வாரம் ஒருமுறை சென்று வரவேண்டும்.

என்னென்ன கோயில்கள்
திருக்கருக்காவூர், சூரியனார்கோயில், தராசுரம் கோயில், சுசீந்திரம் கோயில், கஞ்சனூர் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் சென்று வர முடிந்தவர்கள் சென்று வாருங்கள். அல்லது இதே சக்தி கொண்ட அருகாமையிலுள்ள கோயில்களுக்கும் சென்று வரலாம். அப்படி உங்கள் பகுதியில் இருக்கும் சில கோயில்களையும் இந்த பதிவில் காண்போம்.

திருக்கருக்காவூர்
திருக்கருக்காவூர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமமாகும். இந்த அமைதியான கிராமம், தஞ்சாவூர் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருக்கருக்காவூர், சிறு கிராமமாக இருப்பினும், இங்கு புகழ்பெற்ற "அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் உள்ளதால், இது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு தலமாக விளங்குகிறது. வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். "கர்ப்பரக்ஷாம்பிகை கோயில்" என்றும் அழைக்கப்படும் இக்கோயில், பார்வதி தேவியின் அவதாரமான, கர்ப்பரக்ஷாம்பிகைத் தாயாருக்காகவே அமையப்பெற்ற ஒரு கோயிலாகும்.

சிவசூரியநாராயண கோவில்
மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவசூரியநாராயண கோவில், கிரகங்களின் கதிர்களை உட்கொள்ளும் தன்மை கொண்டது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.
PJeganathan

தாராசுரம் கோயில்
தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவில் கட்டமைப்பின் பெருமைகளை உணர்ந்த யுனஸ்கோ அமைப்பு, இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகரை எளிதில் சென்றடைய முடியும். தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஐராவதம் கோவில் என இவ்விரண்டையும் சோழர்களே கட்டியிருப்பதால், இவ்விரு கோவில் வடிவமைப்புகளிலும் பல ஒற்றுமைகளை காண முடியும்.
Ravichandar84

சுசீந்திரம்
தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் என்னும் புகழ்பெற்ற புனித நகரம் பக்தியும் சாந்தமும் பொருந்திய இடமாகும். இந்த நகரம் மிகவும் பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலமாக விளங்கக் காரணம், இங்கு அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் ஆகும். இந்நகரமே பழங்கால திருவாங்கூர் சமஸ்தான கோட்டையாக விளங்கியது. இங்கு மார்கழித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து பலமக்கள் இவ்விழாக்களில் பங்கு கொள்கின்றனர்.
.
Suresh Babunair

கஞ்சனூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர ஸ்வாமி கோயிலுக்காக பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. இந்த அக்னீஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் வெள்ளி, அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய ஸ்தலமாகும். காவிரி டெல்டா மாகானத்தில் இருக்கும் புகழ்பெற்ற 9 நவக்கிரக கோவில்களுள் இதுவும் ஒன்று.

நடத்ரீஸ்வரர் கோவில்
நடத்ரீஸ்வரர் கோவில், தமிழ் நாட்டின் ஈரோடு நகரத்திலிருக்கும் பிரபலமான கோவிலாகும். சிவபெருமானை முக்கிய கடவுளாக கொண்டு காவிரி நதிக்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் இது மிகவும் புனிதமான தலமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழையும் ஒவ்வொருவருமே தெய்வீக உணர்வைப் பெறுவார்கள். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறை உடைய இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இங்கிருக்கும் கடவுள் அகத்தீஸ்வரரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தென்னிந்திய கட்டிடக்கலையின் அம்சங்களை ஒருங்கே காட்டுவதாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வந்து ஏதேனும் ஆசையை, கோரிக்கையை வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறிவிடும் என்பது உள்ளூர் மக்கள் நம்பிக்கை. மேலும் இந்த கோவில், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வர விரும்புபவர்கள் குறையற்ற வகையில் இங்கு இயக்கப்படும் பேருந்துகளைப் பயன்படுத்தி எளிதில் அடையலாம். ஆற்றின் வழியாகவும் இந்த கோவிலுக்கு வர முடியும்.

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ கம்பஹரேஸ்வரரைத் தரிசிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இக்கிராமத்தில் வேறு பல கோவில்கள் இருந்தாலும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்தான் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன். அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இதுவொரு சிவாலயமாகும்
Subramanian

மாரியம்மன் கோவில்
மாரியம்மன் கோவில் கருவூரில் அமைந்து இருக்கிறது, இது இவ்விடத்தின் முக்கிய கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய அம்மன் கோவில் இதுவே. மே மாதம் நடைபெறும் ஆண்டு திருவிழாவே இக்கோவிலின் மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
இந்நாளில் கும்பம் கோவிலுக்கு வெளியே எடுத்து வரப்பட்டு ஆர்க்காவதி நதிக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிகழ்வுக்காக ஒரு பெரிய பவனி நடைபெறுகின்றது. பின்னர் கும்பம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும், இச்சமயத்தில் நகரில் இருக்கும் அனைவரும் இத்திருவிழாவை கொண்டாடுகின்றார்கள்.

கோதண்டபாணிராமர் திருக்கோயில்
இக்கோயில் அயோத்தியாபட்டினத்தில் அமைந்துள்ளது. ராமரின் பாதத்தடங்கள் இங்குள்ளதால் இக்கோயிலுக்கு இந்த பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மிகச் சிறந்த சிற்பக் கலைக்காக, இது மிகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள தூண்கள், தட்டினால் இசை எழுப்பக்கூடிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும். திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில், ராமரின் கதையை எடுத்துக்கூறும் வகையில் அமைக்கப்பெற்ற மிகப்பெரும் சிலைகள் பல உள்ளன. இக்கோயிலுக்கு வந்தால், அது அயோத்திக்குச் சென்று வந்ததற்கு ஈடாகும்.

வெங்கடாசலபதிசுவாமி ஆலயம்
ஸ்ரீ வெங்கடாசலபதிசுவாமி ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணுவும் அவரது தேவியான லட்சுமி தேவியும் வீற்றிருக்கினறனர். இக்கோவிலில் மகாவிஷ்ணுவானவர், உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன், வெங்கடாசலபதி என்னும் நாமகரணங்களால் அழைக்கப்படுகின்றார். இப்பெயர்களனைத்தும் மகாவிஷ்ணுவின் பல்வேறு பெயர்களில் சிலவாகும். இங்குள்ள லட்சுமி தேவியானவர் பூமிதேவி என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் கட்டிட அமைப்பும், கட்டிடக் கலையும் மிகப் பிரம்மாண்டமானவை. வானுயர்ந்த கோபுரங்களுடன் பெரிய பிரகாரங்களைக் கொண்ட கோவில் இதுவாகும். பல்வேறு வேதங்களிலிருந்து வேதப்பகுதிகளும், வரிகளும் , பெயர்களும், இக்கோவிலின் சுவர்களிலும், கூரையிலும், கோபுரங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒருவர் படித்தாலே இந்து மதக் கலாச்சாரம் மற்றும் சடங்குகள், பூசை முறைகளை பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இக்கல்வெட்டுக்களைப் படித்து அறிந்துகொள்வதற்கும் அதன் மூலம் ஞானம் பெறுவதற்கும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிகிறார்கள். மற்ற பெருமாள் கோவில்களைப் போலவே இக்கோவிலிலும், உப்பிட்டு சமைத்த உணவுப்பொருள்கள் நைவேத்தியமாக சுவாமிக்குப் படைக்க அனுமதிக்கப்படுவதில்லை.



Click it and Unblock the Notifications




