விநாயகர் என்றதுமே யானை முகனே முதலில் தோன்றும். கம்பீரமான தோற்றம், கையில் லட்டும், கொளுக்கட்டையுடன் வளைந்த துதிக்கை, சாந்தமான பார்வை என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடிய முதற் கடவுளாக இருப்பவர் விநாயகரே. குளம் என்றாலும் சரி, மரத்தடியே, தெரு முனையோ எங்கும் அமர்ந்து நம்மில் ஒருவராகவே இருப்பவர் இவர். நாளை உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில் விசித்திரமான தோற்றம் கொண்ட பெண் விநாயகரை வழிபடச் செல்லலாமா ?

எங்கே உள்ளது ?
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தாணுமாலையன் திருக்கோவில். பழையாற்றின் கரையில் ஓங்கியுயர்ந்த 7 அடுக்கு கோபுரத்துடன் தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது.

தல வரலாறு
தாணு என்னும் சொல் சிவனைக் குறிக்கிறது. மால் என்னும் சொல் விஷ்ணுவையும், அயன் பிரம்மாவையும் குறிக்கிறது. இம்மூவரும் ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள ஒருவரே தாணுமாலையன் ஆகும். அத்திரி முனிவருக்கு, கற்பில் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கு, ஞானாரன்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர் என்று புராணம் கூறுகிறது.

புனிதமடைந்த இந்திரன்
தோஷம் கொண்டிருந்த இந்திரன் இத்தலம் வந்து வழிபட்டு புனிதமடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்தசாம பூஜையை இந்திரன் நடத்துவதாக நம்பிக்கை உள்ளது. இத்தல மூலவருக்கு மாலையில் பூஜை செய்தவர் மீண்டும் அடுத்த நாள் காலை பூஜை செய்யக்கூடாது என்ற வழக்கு உள்ளது.

தல அமைப்பு
இக்கோவிலின் கோபுரம் 7 அடுக்குகளைக் கொண்டது. சுசீந்திரம் பகுதியில் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது இத்தல கோபுரமாகத்தான் இருக்கும். ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ள இக்கோபுரத்தில் இராமாயணம், மகாபாரதத்தைக் குறிக்கும் பல சிற்பங்களைக் காணலாம்.

மனைவியுடன் விநாயகர்
தாணுமாலையன் கோவிலில் வசந்தோற்சவத்தின் போது நீரால் சூழப்பட்ட மேடையில் சுசீந்திர பெருமாள் உமையுடன் கொலு கொள்வார். மண்டபத்தின் மேல் 12 ராசிகளும், நவகிரகங்களும் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். வசந்த மண்டபத்தின் பின்புறம் நீலகண்ட விநாயகர் தனது மனைவியை மடியில் அமர்த்தியிருக்கும் காட்சி விசித்திரமளிக்கிறது.

இசைத் தூண்கள்
இராமேசுவரத்திற்கு அடுத்தப்படியாக தென்னிந்தியாவின் மிகப் பெரிய பிரகாரமும், பிரகாரத்தின் இருமங்கும் உள்ள தூண்களில் விளக்கேந்திய பாவை சிலைகளும், யாளிகளும் இத்தலத்தில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். வடக்கு பிரகாரத்தில் நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகள் கூடிய 24 இசைத் தூண்களும், தென்புறம் 32 தூண்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தட்டினால் இசை ஒலிப்பதைக் கேட்கலாம்.

வழிபாடு
சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் அனைத்துவித பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது தல நம்பிக்கை. திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தல ஆஞ்சிநேயரை வழிபடுவது வழக்கம்.

பிரம்மாண்ட அனுமன்
இத்தலத்தில் வீற்றுள்ள அனுமன் சிலை மிகவும் பிரம்மாண்ட தோற்றம் கொண்டது. இதன் உயரம் மட்டுமே 18 அடியாகும். சிற்ப நுணுக்கங்கள் நிறைந்த பெரிய அனுமன் சிலை இங்கே பிரசித்தம் பெற்றதாக உள்ளது.

பெண் விநாயகர்
தாணுமாலையன் கோவிலுக்கே சிறப்பு என்னவென்றால் இத்தலத்தில் உள்ள விநாயகரே. அதுவும் சாதாரண விநாயகர் அல்ல. பெண் விநாயகர். எங்குமே காண முடியாத வகையில் கணேசினி என்னும் திருநாமத்துடன் பெண் விநாயகர் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.

எப்படிச் செல்வது ?
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுடனும் கன்னியாகுமரி மாவட்டம் நல்ல முறையில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நாகர் கோவில் சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ தாணுமாலையன் திருக்கோவில்.



Click it and Unblock the Notifications




