உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்ட வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று வெகு விமர்சியாக துவங்கியது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் இதில் கோலாகலமாக பங்கேற்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு வருடங்களாக பொதுமக்கள் நேரே செல்ல அனுமதி இல்லை. இந்த வருடம் கட்டுப்பாடுகள் தளர்ந்து பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா சிறப்புகள் பற்றியும் நீங்கள் ஏன் வாழ்வில் ஒரு முறையேனும் அங்கு சென்று வர வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள் என்பது பற்றியும் இங்கே பார்ப்போம்!

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி
வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ள வேளாங்கண்ணி தேவாலயம், இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சென்னையிலிருந்து 350 கிமீ தூரத்திலும் நாகப்பட்டினத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் இந்தத் தலம் அமைந்துள்ளது.
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது.போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்ட இது உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.

அதிசயங்கள் நிகழ்த்தும் அன்னை
வேளாங்கண்ணியின் தூய ஆரோக்கிய மாதா அன்னைக்கு அதிசய சக்திகள் இருப்பதாக தேவாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மதம், ஜாதி, மதம் என அனைத்து பிரிவினரும் தேவாலயத்திற்கு வந்து அன்னையை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் ஒருமுறை வந்து வேண்டுவதை அவர்கள் அடுத்த முறை அங்கு வருவதற்குள் இந்த தாய் நடத்தி கொடுக்கிறார் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் நடை பயணமாக வருவது வழக்கம். கிறிஸ்தவ தேவாலயங்களில் தேங்காய் உடைக்கும் பழக்கம் அங்கு மட்டுமே உண்டு என்பது அதன் தனி சிறப்பு, மேலும் முட்டி போட்டுக்கொண்டு கோவிலுக்கு செல்வதும் வழக்கம்.
கல்வி, செல்வம், திருமணம், வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தீராத மன கஷ்டம் மற்றும் நோய்கள் அனைத்தும் இங்கு வந்து சென்று அன்னையை மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர் அருள் பாலித்து தீர்த்து வைக்கிறார் என்பது காலம் கடந்த நம்பிக்கை ஆகும்!

தேவாலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
கீழ்த்திசை நாடுகளின் புனித நகரம் என்றழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கண்ணியில் மாதாவின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கும்.
பேராலயத்தில் இருந்து தொடங்கிய கொடி ஊர்வலமானது, லட்சக்கணக்கான பக்தர்கள் இடையில் கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் ஊர்வலமாக சென்று மீண்டும் பேராலய முகத்திற்கு எடுத்து வரப்படும்.
அதனைத் தொடர்ந்து மாதா வாழ்த்து பாடலுடன் வானவேடிக்கை மிளிர மாதா உருவம் பொறித்த கொடியை கொடிமரத்தில் ஏற்றுவார்கள். கொடியேற்றும் சமயத்தில் ஒவ்வொரு ஆண்டும் அந்த தேவி மழையாக பெய்து பகதர்களை ஆசீர்வாதம் செய்வாள் என்பது ஐதீகம்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை இடம் பெறும்.
விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதியும் அதனைத் தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8-ஆம் தேதி சிறப்பு திருப்பலி பேராலயத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் ஏற்பாடுகள்
திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னமே தெரிவித்துள்ளார். மேலும் திருவிழா சமயத்தில் தினமும் 200 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
வேளாங்கண்ணி பெருவிழாவினை முன்னிட்டு தென்னக ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கின்றன.இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்கவிருக்கின்றனர். மேலும் சிறப்புப்படை காவலர்கள், தீயணைப்பு, மருத்துவ வசதி, தூய்மை பணியாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்த திருவிழா நாட்களிலோ அல்லது சாதாரண நாளிலோ உங்கள் சௌரியத்திற்கு ஏற்றார்போல் ஒருமுறை வேளாங்கண்ணி சென்று, இத்தனை சிறப்புக் கொண்ட அன்னையை தரிசித்துவிட்டு வீடு திரும்புங்கள்! உங்கள் கவலை அனைத்தும் நீங்கி சந்தோஷமடைவீர்கள்!



Click it and Unblock the Notifications




