தமிழ்க்கடவுளான முருகப் பெருமானுக்கு உள்ள விசேஷ தினங்களில் தைப்பூசமும் பிரதானமான ஒன்று. முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று அவரை தரிசித்து ஆசி பெறுவது மிகவும் விசேஷமானது! அந்த வகையில் சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகர் கோயில்களைப் பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்!

உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் தைப்பூசம்
முருகப் பெருமானுக்கு மிக உகந்த திருவிழா மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே தைப்பூச நாளாக நாம் கொண்டாடுகிறோம். வேல் வாங்கிய தினமாக மட்டுமல்லாமல் ஞான பண்டிதனான முருகப் பெருமான், ஞானப் பழத்தை பெற முடியவில்லையே என தாய்-தந்தையிடம் கோபம் கொண்டு பழநி மலையில் ஞானப்பழமாக ஆண்டிக் கோலம் கொண்டு அமர்ந்த தினமாக தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் முருக பக்தர்களால் விசேஷமாக கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் உள்ளது.
தைப்பூச திருவிழா 2025 கொண்டாட்டம்
கந்தன், குமரன், வேலன், சரவணன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச திருநாள்,இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. முருகனுக்குரிய முக்கிய வேண்டுதல்களில் ஒன்று காவடி எடுப்பது. இந்த காவடி எடுக்கும் முறை பழனி மலையில்தான் தோன்றியதாம். அப்படிப்பட்ட பழனி தலத்தில் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசம். தைப்பூசத்திற்கும் பழனி மலை தலத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. இன்றைய தினத்தில் பழனி மலைக்கு செல்ல முடியாவிட்டாலும் கீழ்க்கண்ட சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களுக்கு செல்லலாம்.

சென்னையில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த முருகர் கோயில்கள்
வடபழனி முருகன் கோயில்
சென்னையில் மிகவும் பிரபலமான கோயிலான இது 1890 இல் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு எளிய அமைப்பாக, வெறும் ஓலைக் கொட்டகையாக இருந்த வந்த கோயில் முருகர் மகிமையால் மிகப்பெரிய ஆலயமாக உருவெடுத்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குறைந்தது 7000 திருமணங்கள் நடைபெறுகின்றன. அன்னசாமி நாயக்கர் என்ற முருக பக்தர், கொட்டகை அமைத்து முருகன் ஓவியத்தை வைத்து வழிபட்டதாக இக்கோயிலின் ஸ்தலபுராணம் கூறுகிறது. முருகப்பெருமானை வழிபட்டபோது, தன் உடலில் தெய்வீக சக்தி புகுந்ததை உணர்ந்து, பல விஷயங்களைப் பேசியது உண்மை என்று பின்னர் தெரியவந்தது. அவருடைய இத்தகைய வாசகங்கள் 'அருள்வாக்கு' என்று அழைக்கப்பட்டன, மேலும் அவை நோயைக் குணப்படுத்தும் ஆற்றல், வேலை வழங்குதல், திருமணம் போன்றவற்றைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சிறுவாபுரி பால சுப்ரமணியர் கோயில்
சென்னையில் இருந்து 33 கி.மீ., தூரத்தில் கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாபுரி முருகன் கோவில். சமீப காலமாக இக்கோவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் இக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகத்தை முருகப் பெருமான் வழங்குவார் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் இந்த முருகனை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெசன்ட் நகர் அறுபடைவீடு முருகன் கோயில்
முருகப்பெருமானின் 'அறுபடை வீடு' சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோவிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. ஆறு படை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோவில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனையும் வழிபட்ட பலனை பெற முடியும்.
குன்றத்தூர் முருகன் கோயில்
இந்த பழமையான கோவில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. முருகன் திருப்போரூரில் இருந்து திருத்தணிகை செல்லும் போது இந்த மலையில் தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலின் சிறப்பு என்னவெனில், முருகனை ஒரே நேரத்தில் ஒரு தேவியுடன் மட்டுமே தரிசனம் செய்ய முடியும், இருப்பினும் இரண்டு அம்மன்கள் உடனிருந்து தரிசிக்க முடியும். கோவிலின் அமைதியான சுற்றுப்புறமும் அழகிய கட்டிடக்கலையும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. இது பெரிய சோழ மன்னன் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் வடக்கு திசை நோக்கிய முருகன் கோயில் இதுதான்.

கந்தர்கோட்டம் முருகன் கோயில்
சென்னை பாரிமுனையிக்கு அருகில் அமைந்துள்ளது கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில். மூலவர் கந்தசுவாமி, பக்தர் ஒருவரின் கனவில் தனக்கு கோவில் அமைக்கும் படி கூறி உள்ளார். அதன் படி, வேலைக்காக தோண்டிய குழியில் கிடைத்த முருகன் சிலையை அந்த பக்தர் எடுத்துக் கொண்டு செல்லும் போது, வழியில் இந்த இடத்தில் சிலையை வைத்துள்ளார். மீண்டும் இந்த இடத்தில் இருந்து முருகனின் சிலையை அகற்ற முடியவில்லை. முருகனே விரும்பி வந்து அமர்ந்த இடம் என்பதால் இங்கு பீடம் ஏதும் இல்லாமலேயே முருகன் காட்சி தருகிறார். தரையில் நின்ற கோலத்தில் காட்சி தரும் இந்த தல முருகனை வழிபட்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விலகி விடும்.
வல்லக்கோட்டை முருகன் கோயில்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோயில், முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். தென்னிந்தியாவில் மிக உயரமான முருகன் சிலையைக் கொண்ட 7 அடி உயரத்திற்கு இது பிரபலமானது. தொண்டைமண்டலம் பகுதியைச் சேர்ந்த மன்னரால் கட்டப்பட்டதாகக் நம்பப்படும் இந்தக் கோயில், பிருகு முனிவருடன் தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
திருப்போரூர் கந்தசுவாமி கோயில்
17 ஆம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கோயில், சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் வென்றதை நினைவுகூரும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. கோயிலின் அமைதியான சூழலும் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவமும் முருக பக்தர்களுக்கு ஒரு முக்கிய யாத்திரைத் தலமாக அமைகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலை தைப்பூச தினத்தில் தரிசிப்பது என்பது மிகவும் விசேஷமாகும்!



Click it and Unblock the Notifications



