அமைதியையும், மன நிம்மதியையும் தேடி கோயில்களுக்கு சென்றால் அங்கும் சில நேரம் சிலர் செய்யும் காரியங்கள் நம் நோக்கத்தை குலைத்துவிடும். கோயில்களுக்கு செல்வதற்கு முன்பாக அங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும்?, என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்பது பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
1. செல்போனை அமைதியாக்குங்கள்:
மனதுருகி இறைவனை வழிபடும் போது விரசமான சொற்கள் கொண்ட பாடல் ஒலித்தால் இறைவழிபாட்டில் இருக்கும் அனைவருக்கும் பெரும் இடைஞ்சலாக இருக்கும். எனவே கோயிலுக்குள் நுழையும்போதே செல்போனை சைலன்ட் மோடில் வைத்திடுங்கள். உண்மையாகவே மன நிம்மதி வேண்டி கோயிலுக்கு வந்திருந்தால் செல்போனை அனைத்துவிடுவது நலம்.
2. செல்பி வேண்டாமே:
எதற்கெடுத்தாலும், எங்கு சென்றாலும் அங்கே ஒரு செல்பி எடுக்காவிட்டால் சிலருக்கு பைத்தியம் பிடித்துவிடும். இது ஒரு மன நோயையை போல பரவி வருகிறது. கோயிலுக்குள் வந்தும் கண்ட இடங்களில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருக்க வேண்டாம். கோயில் ஒன்றும் கண்காட்சியல்ல.
3. டிஸ்ஸூ பேப்பர் உடன் இருக்கட்டும்:
கோயிலுக்கு செல்லும்போதே கைக்குட்டையே அல்லது டிஸ்ஸூ பேப்பரையோ உடன் எடுத்துச்செல்லுங்கள். திருநீறு அல்லது வேறு பிரசாதங்கள் வாங்கிவிட்டு மிச்சம் இருந்தால் அவற்றை கண்ட இடங்களில் கொட்டி அசுத்தம் செய்வதை தவிர்க்க.
4. கோயில்கள் விளையாட்டு பூங்கா அல்ல:
விவரமறியா குழந்தைகள் எங்கு சென்றாலும் விளையாடவே ஆசைப்படும். பெற்றோர்கள் அதனை ஊக்குவிக்காமல் குழந்தைகளை அதன் போக்கில் விடாமல் கோயில்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். மற்றவர்களுக்கு தொந்தரவாக விளையாடுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க வேண்டாம்.
5. இறைவன் எல்லோருக்குமானவர் தானே..
பலர் வரிசையில் நிற்கும் போது கடவுள் சந்நிதிக்கு நேர் எதிராக நின்றுகொண்டு கையை மேலுயர்த்தி நீண்ட நேரம் வணங்கிக்கொண்டிருக்க வேண்டாம். இறைவனை உளமார பார்த்த பின்னும் வழிபட விரும்புகிறவர்கள் வரிசையை விட்டு விலகி ஓரமாக சென்று மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் வழிபடலாம்.