இந்த உலகத்துல காசு தான் கடவுள் அப்படிங்கிறது நம்ம எல்லாருக்கும் தெரியும், காசு இல்லாம இப்போ இருக்குற உலகம் காசிலாத ஒருத்தன் எப்பேர்பட்டவனா இருந்தாலும் மதிக்காது. கல்யாணத்தை பண்ணிபாரு, வீட்ட கட்டிபாருனு ஒரு பழமொழி நம்ம ஊர்ல சொல்லுவாங்க. ஏன்னா அப்போதான் காசோட அருமை நமக்கு புரியுமாம். சாதாரண மனுஷங்க நாம இத செய்யுறதுக்கு கஷ்டமா இருக்கலாம், அதுக்காக கடன் கூட வாங்கலாம். ஆனா கடவுளுக்கும் அந்த கஷ்டம் வந்திருக்கு. அப்படி கடன் வாங்கி கலியாணம் பண்ணின திருப்பதி வெங்கடாசலபதி இப்போ உலகத்துலேயே பணக்கார கடவுள். வாங்க திருப்பதிக்கு போய் அவரை தரிசனம் பண்ணிட்டு வரலாம்.
திருமலை திருப்பதி:
Photo: vimal_kalyan
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருக்கும் எழு மலைகளை உடைய திருமலையில் அமைந்திருக்கிறது வெங்கடாசலபதி கோயில். இந்த எழுமலைகளும் வைகுண்டத்தில் விஷ்ணு அமர்ந்திருக்கும் ஆதிசேஷன் என்ற நாகத்தின் ஏழு தலைகளை குறிக்கிறது. அதேபோல இந்த ஏழு மலைகளில் வெங்கடாத்திரி மலையில் திருப்பதி கோயில் அமைந்திருக்கிறது.
திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கலியுகத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒரு பழங்கதையின் படி விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து கலி யுகத்தை அளிக்கும் வரை இந்த கோயில் இங்கு இருக்குமாம்.
பல்லவ மன்னர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் என திருமலையை பல மன்னர்கள் 9ஆம் நூற்றாண்டு தொட்டு வழிபட்டு வருகின்றனர். புகழ் பெற்ற விஜய நகர மன்னரான கிருஷ்ண தேவ ராயர் இக்கோயிலுக்கு பெரும் பொன்னும், பொருளும் அளித்திருக்கிறார். அவர் அளித்த கொடையின் பயனாகவே திருப்பதி கோயிலின் விமானத்தின் உட்பகுதி தங்கத்தால் வேய்யப்பட்டிருக்கிறது.
Photo: Adityamadhav83
உலகிலேயே அதிக பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் கோயில் என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. தினமும் இங்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் பக்த்தர்கள் வரை தரிசனம் செய்ய வருகின்றனர். பிரம்மோர்த்தசம் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஐந்து லட்சம் பக்த்தர்கள் வரை இங்கு வருகின்றனர்.
இங்கு வரும் பக்த்தர்கள் அனைவரும் பெரும் கொடையளிப்பது வாடிக்கை. அப்படி செய்ய காரணம் என்னவென்றால் வெங்கடாசலபதி கடவுள் தன்னுடைய திருமணத்திற்காக செல்வத்தின் அதிபதியான குபேரனிடம் 1,14,00,000 தங்க காசுகளை கடனாக பெற்றதாகவும் அதனை திருப்பி கொடுக்க வெங்கடாசலபதிக்கு உதவி செய்யும் பொருட்டே உண்டியலில் பெரும் கொடையளிக்கும் வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது .
முடிகாணிக்கை:
Photo: Jamdirt631
புதிதாக மொட்டையடித்தவர்கள் யாரையாவது பார்த்தால் நாம் கேட்க்கும் முதல் கேள்வி எங்க திருப்பதியிலா? என கேட்க்கும் அளவுக்கு திருப்பதியில் முடி காணிக்கை அவ்வளவு பிரபலம். நீலி தேவி என்னும் கந்தர்வ இளவரசி வெங்கடாசலபதிக்கு தலையில் அடிபட்டு கொஞ்சம் முடி நீங்கி இருக்கவே அவர் அழகில் குறை படக்கூடாது என தன்னுடைய முடியை அறுத்து மாயாஜாலத்தின் மூலம் எழுமலையானுக்கு அவர் வழங்கினாராம். அதற்க்கு கைமாறாக தன்னை தரிசிக்க வரும் பக்த்தர்கள் அவர்களது முடியை உனக்கு காணிக்கையாக வழங்குவார்கள் என வரமளித்துள்ளார்.
திருப்பதி லட்டு:
Photo: Surya Prakash.S.A.
பக்கத்து வீட்டுக்காரர்கள் திருப்பதிக்கு போய்வந்தாலே நமக்கு கொண்டாட்டமாக இருக்கும். எப்படியும் பிரசாதம் கொடுக்க வருவார்கள் என்பதற்காகவே வழி மேல் விழி வைத்து காத்திருப்போம். உன்மலையில் திருப்பதி லட்டை பிடிக்காதவர்கள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. இதன் விசேஷமான சுவை வேறெங்கும் நமக்கு கிடைக்காததாகும் . ஒருவருக்கு இரண்டு லட்டுதான் கிடக்கும் என்பதால் தவறாமல் வாங்கி வாருங்கள்.
எப்படி அடையலாம் திருப்பதியை:
திருப்பதி சென்னையில் இருந்து 136கி.மீ தூரத்திலும், பெங்களுருவில் இருந்து 290 கி.மீ தூரத்திலும் இருக்கிறது. பெருநகரங்களில் இருந்து தினமும் பேருந்துகள் திருப்பதி வரை இயக்கப்படுகின்றன. திருப்பதிக்கு நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் ரயில் சேவை இருக்கிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல தேவஸ்தானத்தால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.