ஒரு நீர்வீழ்ச்சியை நேரில் காண வேண்டும், அதில் குளிக்க வேண்டும் என்றால் சென்னை வாசிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டியா அவசியம் இல்லை மக்களே! ஏனென்றால் சென்னைக்கு அருகிலேயே ஒரு நாளில் சென்று வரக்கூடிய அளவுக்கு ஏகப்பட்ட மாயஜால அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் உண்டு என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டால் இந்த பதிவை படியுங்கள். சென்னைக்கு அருகில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகள் எத்தனை? எப்படி செல்வது என்று இங்கே பார்ப்போம்!
ஆரே நீர்வீழ்ச்சி
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரே நீர்வீழ்ச்சி ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதா ஒரு ட்ரெக்கிங் பண்ணினா போதும், அந்த அழகான ஸ்பாட்களில் நாம என்ஜாய் பண்ணலாம். இந்த இடத்தில் இருக்கிற பசுமையும், சிறு சிறு ஓடைகளும், குளங்களும், அழகான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என அந்த இடம் முழுவதுமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. ஆரே நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

தடா நீர்வீழ்ச்சி
சென்னையின் பிஸியான வாழ்வில் இருந்து ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க ஒரு அற்புதமான ஸ்பாட் இது. பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு விழுற அருவி தண்ணியில குளிச்சி ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்டா இருக்கிற இடம் தான் இந்த தடா நீர்வீழ்ச்சி! சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.
சதாசிவகோணா நீர்வீழ்ச்சி
சென்னையிலிருந்து 106 கிமீ தொலைவில் அமைந்துள்ள சதாசிவகோணா நீர்வீழ்ச்சி சென்னைக்கு அருகிலுள்ள மற்றுமொரு அழகிய இடமாகும். உயரமான மலைச் சிகரங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கொண்ட இந்த இடம் அதன் தனித்துவமான அழகில் நம் மனதைக் கொள்ளையடிக்கிறது. அடர்ந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுவே இருந்து விழும் குளிர்ந்த நீர் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகை மாசத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தமிழகம் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

கிடுகி நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ தொலைவில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இந்த கிடிகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வேலூர், பள்ளிக்கொண்டான், குடியாத்தம் வழியாக சென்றால் இந்த நீர்வீழ்ச்சியை சுலபமாக நீங்கள் அடைந்திடலாம். இந்த இடத்திற்கு பொது போக்குவரத்து வாயிலாக செல்வது சற்றே கடினம். ஆதலால் உங்கள் சொந்த வாகனம் எடுத்து வருவது நல்லது. பைக்கில் ரைடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளாமாக இந்த இடத்திற்கு பைக்கில் செல்லலாம்.
மூல கோணா நீர்வீழ்ச்சி
பிக்னிக்கர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளுக்கு பிடித்த இடமாக விளங்கும் மூல கோணா நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 109 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மூலிகை மலர்களால் ஆன பசுமையால் மூடப்பட்டிருக்கும் மலையிலிருந்து விழும் குளிர்ந்த நீர் ஒரு சிறிய குளத்தை அடைகிறது. சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் நீச்சல் தெரிந்தால் நீங்கள் நீந்திக் குளிக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாள் சுற்றுலா செல்ல இது ஏற்ற இடமாகும்.

தலகோணா நீர்வீழ்ச்சி
இந்த வெயிலில் இருந்து தப்பிச்சு சென்னைக்கு பக்கத்தில கிட்டதட்ட 270 அடி உயரத்தில இருந்து' ஆர்பரித்து கொட்டுகிற தலகோனா நீர்வீழ்ச்சியில ஜம்முன்னு ஒரு குளியலை போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும் இல்லையா! சென்னையிலிருந்து 190 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அழகான தலகோனா நீர்வீழ்ச்சி ஆண்டின் எல்லா நாட்களிலும் நீர்வரத்துடன் காணப்படுகிறது. இது ஒரு பிரபல டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் நீங்கள் பயமின்றி Google maps சொல்லும் பாதையிலேயே பயணிக்கலாம். இல்லையேல் சென்னை-மாதவரம்-செங்குன்றம்-ஊத்துக்கோட்டை-பாலமங்கலம்-நாரயனவனம் என சேஷாச்சல காடுகளுக்குள் சென்று தலகோனா நீர்வீழ்ச்சியை அடையலாம்.
மாமண்டூர் நீர்வீழ்ச்சிகள்
எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். இந்த வசீகரமான காடுகள் ஆந்திர பிரதேச வனத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகிறது. சிறு சிறு ஓடைகள், குளங்கள், நீர்வீழ்ச்சி, இனிமையான வானிலை என இந்த இடம் மிகவும் குளுமையாக இருக்கிறது.
சக்ரதீர்த்தம் நீர்வீழ்ச்சி
சக்ர தீர்த்தம் நீர்வீழ்ச்சி, மத முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் புகழ்பெற்ற நீர்நிலையாகும். பிரம்மா இந்த இடத்தில் தவம் செய்ததாக நம்பப்படுகிறது, இது பின்னர் விஷ்ணுவால் தனது சுதர்சன சக்கரத்தால் சுத்தம் செய்யப்பட்டது. அவரது சக்கரம் விழுந்த இடம் சக்ர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாகவும், அவர்களின் பாவங்களில் ஒன்றைப் போக்கக்கூடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த அனைத்து நீர்வீழ்ச்சிகளும் சென்னையிலிருந்து ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களாகும்.



Click it and Unblock the Notifications



