ங்கள் ஆன்மீக வாதியாகவோ அல்லது சாகச விரும்பியாகவோ அல்லது இயற்கை ஆர்வலராகவோ, ஏதோ ஒரு விதத்தில் வாழ்வில் ஒரு முறையேனும் தென் கயிலை என போற்றப்படும் கோயம்புத்தூரின் வெள்ளியங்கிரி மலைகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரிக்கு பின்னர் இந்த மலையேற பொது மக்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிப்ரவரி 18 முதல் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மலைக்கு ஏன் நீங்கள் செல்ல வேண்டும்? என்னவெல்லாம் பார்க்கலாம்? அதனால் கிடைக்கிற அரிய அனுபவம் என்னவென்று இங்கே பார்ப்போம்!

'தென் கயிலாயம்' என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகள்
எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஆதி பரம்பொருளான சிவபெருமான் பல ஆலயங்களில் நமக்கு காட்சி கொடுத்தாலும், கயிலாயத்தில் தான் நிரந்திரமாக குடிக் கொண்டிருக்கிறார். இமயமலை மட்டுமே கயிலாயம் என்று குறிப்பிடப்படுவதில்லை. ஆம் இமயமலை வட கயிலை என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைகள் தென் கயிலை என்றும் அழைக்கப்படுகின்றன.
தான் காப்பாற்ற எண்ணி வந்த பெண்ணின் உயிரை காக்க முடியாத கோவத்தினாலும் சோகத்தினாலும் மன வருத்ததுடன் இங்கு சிவபெருமான் அமர்ந்த இடமே "வெள்ளியங்கிரி மலைகள்". அவர் இங்கு மன சாந்தியுடன் இங்கு அமராவிட்டாலும் கூட, இங்கு வரும் பக்த பெருமக்களுக்கு மன நிம்மதியும், அமைதியையும் வழங்கி ஆசி புரிகின்றார்.
இரவில் மலை ஏற ஆரம்பிக்க வேண்டும்
5800 அடி கொண்ட உயரத்தை வெயிலில் ஏறுவது என்பது சாத்தியமான காரியம் இல்லை. உங்கள் எனர்ஜி மொத்தமும் சீக்கிரமே காலியாகிவிடும். அதனால் மாலை வேலையில் ஏற ஆரம்பித்தால் இரவு முழுக்க மெதுவாக நடந்துக் கொண்டிருக்கலாம். நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காரிருள் உங்களை சூழ்ந்து விடும். டார்ச் லைட்டுடன் மெது மெதுவாக பாறைகள், கற்கள், மலை மீது நடக்க வேண்டும். கவனத்துடன் ஏறுவது அவசியம் அல்லது கால்களில் அடிபட நேரலாம்.

கடினமான வெள்ளியங்கிரி பயணம்
ஏழு மலைகளை அடக்கிய தொடர் தான் வெள்ளியங்கிரி மலைகள். ஏழாவது மலைக்கு சென்றால் தான் எம்பெருமானை தரிசிக்க முடியும்.
1. முதல் மலையில் ஒரு அடி அளவுள்ள படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறுவதற்கு சற்று சிரமமாகத் தான் உள்ளது.
2. இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன.
3. மூன்றாவது மலையில் சித்தர்கள் நடமாட்டம் இருக்கும் என நம்பப்படுகிறது. இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வருகிறதாம்.
4. நான்காவது மலையும் ஐந்தாவது மலையும் நடந்து போக சற்றே எளிதாக உள்ளன.
5. நீங்கள் நடந்து வந்த களைப்பு எல்லாம் காணமல் போக வேண்டுமானால் ஆறாவது மலையில் உள்ள சுனையில் ஒரு குளியல் போடுங்கள்.
6. கிரிமலை என்றழைக்கப்படும் ஏழாவது மலையில் தான் வெள்ளியங்கிரி நாயகனான எம்பெருமான் சுயம்பு வடிவில் வீற்றிரிக்கிறார்.
இவையெல்லாம் எடுத்துச் செல்வது அவசியம்
மறக்காமல் இவை எல்லாம் எடுத்து செல்லுங்கள் மலையேற்றம் செய்வதற்கு முன் தண்ணீர் பாட்டில்கள், போர்வை, தைலம், சிறிது உணவு, ஜூஸ் மற்றும் குளுகோஸ் ஆகியவற்றை உங்களது பேக்பேக்கில் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது அடிவாரத்தில் விற்கும் மூங்கில் தடிகள் தான்.

இவர்கள் எல்லாம் மலையேற அனுமதி இல்லை
வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலை ஏறக்கூடாது.
இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் ஏற்ற இடம்
இந்த இடத்திற்கு நீங்கள் சிவபெருமான் பக்தராக மட்டுமில்லாமல் இயற்கை மற்றும் சாகச விரும்பியாக கூட வருகை தரலாம். மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், ரம்மியமான சூழலும், பறவைகள் மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலியும் நம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. ஏழு மலைக்கு மேலே உச்சியில் எட்டாவது மலை ஒன்று உள்ளது. அதன் உச்சியில் இருந்து பார்க்கும் போது உங்களுக்கு கிடைக்கின்ற சிலிர்ப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

எப்படி செல்வது
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 14D பேருந்து மூலம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடையலாம். அல்லது பூண்டிக்கு வரும் எந்த பேருந்தும் உங்களை இந்த இடத்திற்கு அழைத்து வரும். இந்த வருடம் மே மாதம் 5 வரை மட்டுமே வெள்ளியங்கிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் அதற்குள் சென்று வந்து விடுங்கள்.
இந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அவனருள் இருந்தால் மட்டுமே அவனை தரிசிக்க முடியும். மிக மிக செங்குத்தான வடிவில், ஏறுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் பாதையை கடந்து வந்தால் தான் ஈசனின் அருளைப் பெறலாம்!



Click it and Unblock the Notifications





