ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது. 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அமைந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.
ஆயிரம் தூண் கோயில்
கலையம்சம் கொண்ட வாசல் அலங்கார அமைப்புகள், தூண்கள், கூரைவிமான அமைப்புகள் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் போன்றவை இந்த கோயிலில் நிரம்பியுள்ளன. எனவே இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. கோயிலின் பின்னணியில் ஹனுமகொண்டா மலை வீற்றிருப்பது இந்த கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது.
நந்தி
வழவழப்பான ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு நந்தி ஒன்றும் கோயிலின் வாசலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மயங்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்களுடன் இந்த கோயில் அமைதியாக வீற்றிருக்கிறது. ஒப்பற்ற கலைத்திறமையின் உச்சமாக விளங்கிய காகதீய அரசாட்சிக்காலத்தை எதிரொலிக்கும் இந்த கோயில் காலங்களைக் கடந்து நீடித்து நிற்கிறது. தென்னிந்தக்கோயில்களிலேயே மிகப்பழமையான அற்புதக்கோயிலாக வரல்லாற்றியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த ஆயிரம் தூண் கோயில் கருதப்படுகிறது.
வாரங்கல் கோட்டை
வாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. 1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது புத்திரியான ராண் ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்கிறது.
கற்பனை
அக்கால தென்னிந்திய கலைஞர்களின் கற்பனையில் இப்படியெல்லாம் கூட தோன்றியிருக்கின்றனவா, இப்படிப்பட்ட கைவினைத்திறனும் அறிவும் கொண்டவர்களா நம் முன்னோர்கள், இப்படிப்பட்ட கலைத்திறமைகள் முடியாட்சி நடத்திய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனவா, என்றெல்லாம் நம்மை திகைக்க வைத்து, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு மஹோன்னத ஸ்தலம்தான் இந்த வாரங்கல் கோட்டைஸ்தலம்.
நுணுக்கமான சிற்பம்
தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாகவே காணப்பட்டாலும் இங்கு வீற்றிருக்கும் கலையம்சங்கள் நம்மை நமது மஹோன்னத வரலாற்று நாகரிகத்துக்கு இழுத்து சென்று கண் கலங்க வைப்பவை. அழகிய ஆபரணங்கள் போன்று வெகு நுணுக்கமான சிற்பச்செதுக்கு அமைப்புகளுடனும், வெகு சிக்கலான அலங்கார படைப்புகளுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல் படைப்புகளுக்கு இணையானவை உலகில் வேறெங்குமே இல்லையென்று சொல்லலாம்.
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இங்குள்ள ஒரு அலங்கார தோரண வாயிலை பார்க்கும் போது ‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்' எனும் வரிகள் போதாதோ என்ற சந்தேகம் நம் மனதில் தோன்றும். ரசனை மிகுந்த ஒவ்வொரு தென்னிந்திய திராவிட மனமும் வாழ்வில் ஒரு முறையாவது விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய உன்னத வரலாற்று ஸ்தலம் இது.
கம்பீரம்
தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாக இந்த கோட்டை ஸ்தலம் காணப்பட்டாலும் இதன் கம்பீரம் பார்வையாளர்களை திணறடிக்க தவறுவதில்லை. சாஞ்சி கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோட்டைக்கு நான்கு பெரிய வாயில்கள் உள்ளன. இவற்றில் வெளி வாயில் மிகப்பிரம்மாண்டமாக நாட்டில் வேறெங்கும் பார்க்க முடியாத வகையில் காட்சியளிக்கிறது.
சுவர்ச்சிற்பங்கள்
கட்டிடக்கலை, வரலாறு மற்றும் புராதன நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளமாக இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். பலவிதமான விலங்குகளின் உருவங்கள் இங்கு சுவர்ச்சிற்பங்களில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.